Sunday 25 June 2017

(70)பனிமனிதன்- ஜெயமோகன்

பனிமனிதன் சிறுவர்களுக்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல். பெரியவர்களுக்கும் ஏற்றது. இயற்கை, புத்தமதம், சாகசம் பலதும் நிறைந்து கற்பனைக்கு இடம் கொடுத்து எழுதப்பட்ட நாவல்.
இமையமலையில் அவதானிக்கப்பட்ட மிகப் பெரிய காலடித்தடம் தொடர்பாக ஆராயச் செல்லும் இராணுவ வீரன் பாண்டியன், Doctor திவாகர் மற்றும் இமையமலையை இருப்பிடமாகக் கொண்ட பௌத்த மதத்தை பின்பற்றும் கிம், மூவரும் காலடித்தடத்துக்கு உரிய பனிமனிதனைத் தேடிச் செல்கிறார்கள். இமையமலைப் பனிப் பகுதியில் அவர்களது பயணம் ஒரு சாகசப் பயணமாக இருக்கிறது.
பனிமனிதன் வாழும் பகுதி அவதார் படத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.பனிமனிதன் 2001 இல் எழுதப்பட்டது. அவதார் திரைப்படம் 2009 இல் வெளியானது. அவதார் படம் வெளியாக பல வருடங்கள் முன்னரே எழுதப்பட்ட பனிமனிதன் கதையில் அவதாரை மிஞ்சும் கற்பனை மிருகங்களை உருவாக்கி இருக்கிறார் ஜெயமோகன். சீனாவின் டிராகன், கோயில் சிற்பங்களில் காணப்படும் யாளி உட்பட பல கற்பனை விலங்குகள் பிரமிக்க வைக்கின்றன.பனிமனிதர்களும் அவதார் பட வேற்றுக் கிரக மனிதர்களை நினைவூட்டுகின்றனர்.

அனைத்து தகவல்களுக்கும் விஞ்ஞான, மனவியல் ரீதியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.காளிதாசரின் ரகுவம்சம் தொடர்பான தகவலில் இமையமலையில் ஒரு தாவரம் இரவில் விள‌க்கு போல ஒளி வீசியதாகவும் அந்த ஒளியில் ரகுவின் யானைகளின் சங்கிலிகள் மின்னியதாகவும் ஒரு குறிப்பு உள்ளதாக எழுதியுள்ளார். காளிதாசர் பிறபகுதிகளைப் பற்றிக் கூறியவை சரியாக இருப்பதால் அப்படி ஒரு தாவரம் இருந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிடுகின்றார்.

திபெத்திய லமாய் பற்றிய தகவல்கள், திபெத்திய மக்களின் ஆயுட்காலம், அவர்கள் புதிய தலைவரைத் தெரிந்து கொள்ளும் முறை என்பன திபெத்திய பௌத்தம் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலை உருவாக்கி விட்டது.

No comments:

Post a Comment