Thursday 8 June 2017

(67) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு(தென்னிந்திய மொழிகள்) - சிவசங்கரி

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற நூல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல்ப் பாகமான இந்தப் புத்தகத்தில் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கிய சில‌ எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அவர்களது பேட்டி முடிவில் அவ் எழுத்தாளர்களது படைப்பு ஒன்றும் மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்ள ஒரு ஆரம்ப புள்ளியாக அது அமையும். இந்தியா முழுவதும் பயணித்து பேட்டியெடுத்துள்ள சிவசங்கரியின் பணி மிகவும் முக்கியமானது.முக்கிய எழுத்தாளர்களுடன் சந்தித்து உரையாடக் கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் இல்லை.

முதலில் மலையாள இலக்கிய அறிமுகத்துடன் புத்தகம் தொடங்குகிறது. கேரளாவைப் பற்றிய அறிமுகக் கட்டுரை கேரளக் கிராமங்களை அழகாக அறிமுகம் செய்கிறது.இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள் மட்டுமல்ல இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பவர்களும் கூட. 

முதலில் எம்.டி. வாசுதேவன் நாயரின் பேட்டி. மலையாள இலக்கிய உலகை அவர் அறிமுகம் செய்கிறார். மலையாள இலக்கிய உலகின் முக்கியமானவரான துஞ்சத்து எழுத்தச்சன் ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தை மலையாள மொழியில் எழுதி அது வரையில் இருந்த சமஸ்கிருத ஆதிக்கத்தைக் குறைத்து வைக்கிறார் எனக் கூறும் எம்.டி, ஆரம்பகால மலையாள இலக்கியங்கள் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறார். குஞ்சிராமன் நாயர் எழுதிய வாஸனவிக்ருதி மலையாள மொழியின் முதல் சிறுகதை எனவும் சந்துமேனன் எழுதிய இந்துலேகா முதல் நாவல் எனவும் குறிப்பிடுகிறார்.தனது ஊரான கூடலூரினூடாக ஓடும் பரதப்புழா ஆற்றை அதிகமாக நேசிப்பவராக இருக்கிறார்.

அடுத்து கமலாதஸ் இன் பேட்டி.மூன்று மொழிகளைப் பேசி இரண்டில் எழுதி ஒன்றில் கனவு காண்பவளாக தன்னைக் கூறும் கமலாதாஸ் கவிதை, கதை என்பவற்றால் புகழ் பெற்றார். பாராட்டுக்களையும் அதே நேரத்தில் பலரின் வசைகளையும் பெற்றுக் கொண்டவர்.அடுத்து தகழி சிவசங்கரன் பிள்ளை. இவர் தமிழ் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.பேட்டியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள‌  வெள்ளம் என்ற சிறுகதை முக்கியமானது. அடுத்து மலையாள இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமான ஒருவராக நினைவுகூரப்படும் வைக்கம் முகமது பஷீர் பற்றிய அ
றிமுகத்துடன் அவரது பேட்டி. இவரது பாத்திமாவின் ஆடு, பால்யகால சகி போன்ற நாவல்கள் முக்கியமானவை. சமூக சேவகியும் கவிதாயினியுமான சுகதகுமாரி, பாண்டவபுரம் என்ற நூலுக்காக கேரள சாகித்ய அக்கடமி விருது பெற்ற சேது மற்றும் நவீன கவிதை மூலம் புகழ் பெற்ற பாலச்சந்திரன் சுள்ளிக்காட் என்பவர்களது பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

அடுத்து கர்நாடக மாநிலம் பற்றிய சிறிய அறிமுகத்துடன் கன்னட இலக்கிய ஆளுமைகளின் பேட்டி இடம்பெற்றுள்ளன.மைசூர், ஹம்பி, துங்கபத்ரா நதி, கொல்லூர் மூகம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணர் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி போன்றவற்றால் புகழ் பெற்ற மாநிலம் கர்நாடகா. முதலில் ஸம்ஸ்காரா நாவலின் ஆசிரியரான யூ.ஆர். அனந்தமூர்த்தியின் பேட்டியும் தொடர்ந்து அவரது 'மயில்கள்' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.சிவராம் கரந்த்,  'பர்வ' (மகாபாரதத்தின் புது ஆக்கம்) என்ற நாவலின் ஆசிரியர் பைரப்பா,தேவநூரு மஹாதேவா, சதுரங்க, எல்.எஸ்.சேஷகிரிராவ் போன்றவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.

அடுத்து ஆந்திர தேசத்தின் தெலுங்கு இலக்கியம். தெலுங்கில் கவிஞர்களுக்கு உரை நடை ஆசிரியர்களை விட மரியாதை அதிகம் என்பது அந்த நில எழுத்தாளர்களின் பேட்டிகளை வாசிக்கும் போது தெரிகிறது.  ஸி. நாரயண ரெட்டி , வாஸிரெட்டி சீதாதேவி,ஆருத்ரா, ராவூரி பரத்வாஜா, மாலதி செந்தூர் , சேஷேந்திர சர்மா ஆகியோர் தெலுங்கு இலக்கியத்தை அறிமுகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் என்னவோ வணிக எழுத்தாளரான எண்டமுரி வீரேந்திரநாத் தான்.

இறுதியாக தமிழ் இலக்கிய எழுத்தாளர்களது பேட்டி தமிழ் மொழி பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. அப்துல்ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,ராஜம்கிருஷ்ணன்,சு.சமுத்திரம்,பிரபஞ்சன்,பொன்னீலன்,மு.தமிழ்க்குடிமகன் போன்றவர்களது பேட்டி இடம்பெற்றுள்ளது. ஜெயகாந்தனின் பேட்டியில் அவரது பதில்களும் அதைத்தொடர்ந்து அவரது அக்கினிப்பிரவேசம் என்ற கதையும் ஜெயகாந்தன் என்ற ஆளுமையை முழுமையாக அறிய அவரது படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற‌ ஆர்வத்தை அதிகரித்தது.பொன்னீலனின் தேன்சிட்டு என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரது சிறுகதைகளை வாசிக்க வேண்டும். திராவிட இயக்கம், பெரியார், பெண் எழுத்தாளர்கள் தொடர்பான கேள்விகள் பொதுவாக அனைத்து தமிழ் எழுத்தாளர்களிடமும் கேட்கப்பட்டு, அவர்களது பார்வை வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

தென் இந்திய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment