Thursday 29 December 2016

(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உரைகளின் தொகுப்பு. கல்லூரிகளில், இலக்கியக் கூட்டங்களில் பேசியவை. நின்று நிதானமாக வாசித்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும். நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது விமர்சனங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்பான உரையில்   நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறார்(தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்). 

(64) நதியின் கரையில் - பாவண்ணன்

பாவண்ணன் கதைகளில் அன்பு மட்டுமே அடி நாதமாக இருக்கும். பாவண்ணன் என்றதும் ஜோக் அருவியும் துங்கபத்திரையும் யட்ச கானமும்  தான் எப்போதும் எனக்கு ஞாபகம் வரும். ' நதியின் கரையில்' 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பாவண்ணன் , வண்ணதாசன் கதைகளைப் படிக்கும் போது தான் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பு வருகிறது.

(63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம் எப்போதும் என் பிரியத்துக்கு உரிய எழுத்தாளர். அவரது 'ஒன்றுக்கும் உதவாதவன்'  58 கதைகளைக் கொண்ட  தொகுப்பு. வழமை போல் இனிமையான மனதை நெகிழ வைக்கும் கதைகளே இவை. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை.

வியட்நாம் போர் உக்கிரத்தை உலகத்திற்கு காட்டிய புகைப்படத்தில் இருந்த சிறுமியை அவர் கனடாவில் சந்தித்த அனுபவங்களை எரிந்த சிறுமி என்ற கதையில் எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த நண்பரைப் பற்றிய ஆறாத்துயரம் கதை என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று.

Sunday 18 December 2016

(62) வாழும் கணங்கள் - சுந்தர ராமசாமி

         சு.ரா 2003 - 2005 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகளின்  தொகுப்பு.  ராமச்சந்திரன் எழுதிய 'பிரபஞ்சம் ஒரு புதிர்' , குணசேகரனின் 'வடு', 'பாரதியின் கடிதங்கள்' ஏ.கே செட்டியாரின்  'அண்ணல் அடிச்சுவட்டில்' என முக்கிய நூல்களைப் பற்றி எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்பான கட்டுரை தமிழர்களுக்கு அவர் மொழிபெயர்த்துக் கொடுத்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சு.ரா வின்  நண்பர் சேதுராமன் பற்றிய கட்டுரை மிக நெகிழ்ச்சியானது.