Friday 3 June 2016

திருப்புகழ் - 1

தமிழ் மொழியில் படித்து சுவைக்க பல பாடல்களை எமது முன்னோர் எமக்கு தந்துள்ளார்கள். தேவாரம் , திருவாசகம் , திருப்புகழ், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி , கம்பராமாயணம் , நளவெண்பா என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. இவற்றை அவ்வப்போது ரசிப்பதோடு சரி. ஒரு வித சோம்பல் காரணமாக, நேரமில்லை என்ற பொய் வேடத்தில் தொடர்ச்சியாக படிப்பதில்லை. வாரம் ஒரு பாடலாவது படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைய நாட்களாகியும் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. இன்றிலிருந்து வாரம் ஒரு திருப்புகழ் கட்டாயம் படிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். முடிந்தால் இராகத்துடன் கற்றுக்கொள்வது. திருப்புகழில் இருக்கும் சந்த அழகை நான் எப்போதும் ரசிப்பேன். அதன் நுணுக்கங்களை வாசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அருணகிரிநாதரை வியந்து படிப்பதுண்டு.
முதலில் இதுவரை எனக்கு தெரிந்த திருப்புகழ்களை பட்டியல்ப்படுத்திவிட்டு புதிதாக கற்றுக்கொள்வது என எண்ணியுள்ளேன். முருகனையும் பாடல் தந்த அருணகிரிநாதரையும் வணங்கி தொடர்கிறேன்.


கௌமாரம் இணையத்தளத்தில் திருப்புகழ் பாடல்கள் பொருளுடன் படிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஸ்ரீ கோபாலசுந்தரம் என்பவர் பொருள் எழுதியுள்ளார். பல பாடல்களுக்கு ஒலிப்பதிவும் கிடைக்கின்றது. அவ் இணையம் பல சுயநலமற்ற நல்லவர்களின் முயற்சி. அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி  நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

(55) கனவு முடியவில்லை - சரத்சந்திரர்


வங்காள எழுத்தாளர் சரத்சந்திரர் தமிழர்களிடமும் பிரபலமானவர்.இவர் எழுதிய கதையே பல மொழிகளில் பல தடவைக‌ள் படமாக்கப்பட்ட பிரபல திரைப்படமான தேவதாஸ்.  அவரது  'ஸ்ரீகாந்தா' என்ற நாவலை அ.கி.ஜயராமன் தமிழில் 'கனவு முடியவில்லை' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் கற்பனைகள் அடங்கிய சுய‌சரிதைத்தன்மை உள்ள நாவல். இந்த நாவலில் வரும் ராஜலஷ்மிக்கும்  தேவதாஸில் வரும் பார்வதிக்கும் பல ஒற்றுமைகள் காணலாம். ராஜலஷ்மி, அபயா, அன்னதா , கமலலதா போன்ற பெண்களின் கதையே இந்த நாவல்.