Thursday 14 April 2016

(53) உன்னைச் சரணடைந்தேன் - கம்பவாரிதி ஜெயராஜ்

கம்பவாரிதியால் எழுதப்பட்ட,   கம்பன் கழகம் ஆரம்பித்ததிலிருந்து யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட காலப்பகுதி வரையான ( 1950 - 1995 ) கழக வரலாறு  " உன்னைச் சரண‌டைந்தேன் - யாழில் கம்பன்" என்ற நூல்,  இந்த வருட கம்பன் விழாவில் (2016)  வெளியிடப்பட்டது. அவரது பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை விழா இறுதி நாள் அன்று வாங்கினேன். புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தொடங்கவில்லை எனினும் வாசிக்கத்தொடங்கிய பின் முழு மூச்சாக வாசித்து முடித்தேன். கம்பன் கழக செயற்பாடுகள், அதற்காக உதவியவர்கள், இடையூறு செய்தவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

கம்பன் விழாவுடன் எனக்கு நீண்ட நாள் தொடர்பு எல்லாம் இல்லை. சிறு வயதிலே வீட்டில் இருந்த கம்பன் விழா அழைப்பிதழ் மூலமே (சிறு புத்தகம் போன்ற ) கம்பன் விழா பற்றி முதலில்  தெரிந்து கொண்டேன். அழகான அவ் அழைப்பிதழை திரும்ப திரும்ப வாசித்த நினைவு இருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை நல்லூர் முருகன் திருவிழாவின் போது மட்டுமே ஊரை விட்டு வெளியில் சென்ற அனுபவம் உள்ள எனக்கு அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லும் படி வீட்டில் கேட்கக் கூட துணிவு வந்ததாக நினைவில் இல்லை. எமது சொந்த இடமான சாவகச்சேரியில் கம்பவாரிதியின் பேச்சு இடம்பெற்றதாக நினைவும் இல்லை. அப்படி நடக்க இருந்த பேச்சையும் சரியான நேர முகாமைத்துவம் இல்லாமையால் நிறுத்தியதாக அவரே புத்த‌கத்தில் எழுதியுள்ளார்.

கொழும்பில் பல காலமாக கம்பன் விழா நடைபெற்று வருகின்ற போதும் நான் முதன் முதலில் 2015 விழாவின் போதே சென்றேன். சில நேரங்களில் விழா முடிந்த பின்பே எனக்கு தெரிய வரும். அப்படித் தெரிந்து இருந்தாலும் கூட்டிச் செல்ல துணைக்கு ஆள் கிடைக்காது , அதனால் போக தயக்கம். ஆனால் இப்போது யாரையும் எதிர்பார்க்காமல் தனியவே போகப் பழகி விட்டேன். இரவு 9.30 இற்கு விழா முடிந்தாலும் auto  ஒன்றைப் பிடித்து வீடு வந்து சேர தைரியம் வந்துவிட்டதால் விழாவை நன்றாக ரசிக்க முடிகிறது.  கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கம்பவாரிதியின் பேச்சுகளையும் ஒன்றுவிடாமல் கேட்பேன். நான் தமிழ்ப் பாடல்களை  நன்றாக ரசித்துப் படிக்க கம்பன் விழாவும் ஒரு காரணமாக இருக்கிறது.  


    இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இறுதிப் பகுதியாகும்.  தன்னை உருவாக்கிய ஆசிரியர்களைப் பற்றி அவர் எழுதியவை எல்லோரும் வாசிக்க வேண்டியவை. சிவராமலிங்கம்  ஆசிரியர், வித்துவான் வேலன் , வித்துவான் ஆறுமுகம்  போன்ற சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களை அறிய முடிந்தது. அம்மூவரும் உரையாடும் போது அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பு கம்பவாரிதி ஐயாவுக்கு கிடைத்திருக்கிறது. அது உண்மையிலேயே பெரும் பேறு தான். இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் , நாடாக நடிகர் அருமை நாயகம் , புதுவை போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் சுவையானவை.


கம்பவாரிதியின் குருநாதரான பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களுடனான உறவை அழகாகப் பதிவு செய்துள்ளார்.அவரது குடும்ப அங்கத்தவர்கள் பாசமாக பழகியிருக்கிறார்கள். வானொலியில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களது குரலைக் கேட்டு, அதன் பின் அவரைக் கண்டடைந்து அவர் ஆசி பெற்றது  , அவரைப் போல குடுமி போட்டது , அவரது திருவடிகளைப் பெற்று வந்தது போன்ற விடயங்களைப் பதிவு செய்துள்ளார்.  கம்பன் அடிப்பொடி பற்றிய பகிர்வு மூலம்  காரைக்குடி கம்பன் விழா பற்றி அறிய முடிந்தது. பேராசிரியர் இராதாகிருஷ்ணன் , கம்பன் அடிப்பொடி போன்ற சுய நலமற்ற சிற‌ந்த மனிதர்களை அறிய முடிந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.

கம்பன் கழகத்தைப் பற்றி பதிவுகளில் கழகத்துக்கு துணையாகப் பாடுபட்டவர்கள், எதிர்த்தரப்பினர் என்று பெரிய பட்டியல் புத்தகத்தில் உண்டு.  எத்தனையோ பேர் கழகத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதற்கு அதிகமாக பகையுடனும் பலர் செயற்பட்டிருக்கிறார்கள். பகைமை கொண்டவர்களில் பொன்.சுந்தரலிங்கம் அவர்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தனிப்பட்ட ரீதியில் பொன்.சுந்தரலிங்கத்தின் பாடல்கள் பிடிக்கும். கம்பவாரிதி எப்போதும் ஒருவரது குறையையோ/ நிறையையோ  வெளிப்படையாக   சொல்பவர். அவரது உரைகளின் போது சில நேரங்களில் இது வெளிப்படும். நிறையை எல்லோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். குறையை அப்படி யாராவது ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை.

 ஆரியனான ராமனுக்கு எடுக்கப்படும் விழாவிற்கு எதற்காக செல்ல வேண்டும் என்றும்  இராமாயணமே ஒரு பொய்க் கதை எங்களுக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றும் கம்பன் விழாவிற்கு எதிரானவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். அவர்கள் நிச்சயமாக எந்த ஒரு கம்பன் விழா நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். நான் கம்பன் விழாவை கம்பனின் தமிழுக்கான  விழாவாகவே காண்கிறேன். அங்கு இராவணனின் பெருமையும் பேசப்படுகிறது. ராமனின்  சிறுமையும் பேசப்படுகிறது. இராமாயணம் உண்மையாக இருந்தால் என்ன, பொய்யாக இருந்தால் என்ன? அழகான கம்பனின் பாடல்களை இழக்கவே முடியாது.  ராமனின் கதை மூலம் எத்தனையோ விழுமியங்கள் பேசப்படுகின்றன. நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.


இலங்கை கம்பன் கழகத்தை நேர முகாமைத்துவம், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு, அடுத்த தலைமுறையை உருவாக்கியமை போன்ற விடயங்களுக்காக எல்லோரும் பாராட்டுவார்கள். கம்பன் விழா மேடையே அழகாக இருக்கும். அழைப்பிதழுக்கு தனி மரியாதை உண்டு. தற்போது இலங்கையில் தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை சரியாக செய்வது என்னைப் பொறுத்த வரை கம்பன் கழகம் மட்டுமே. கம்பன் விழா காலை நிகழ்ச்சிகள் கூடிய இலக்கிய தரம் உள்ளதாக அமைவதுண்டு. இலக்கியம் மட்டுமல்லாது இசை , நாட்டிய நிகழ்ச்சியும் தனியாக நடைபெறும்.  நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற  கழகத்தாரின் அயராத உழைப்பே காரணம். பல நல்லவர்கள் அதற்கு உதவுகிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கழகத்தை உண்மையாக வளர்த்தவர்கள் ஒதுங்கி நிற்க, கழக வளர்ச்சியுடன் தொடர்பற்ற பலர், கழகம் வளர தாமே காரணம் என சொல்லித்திரிவதால், கழகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை தொடர்புடைய ஒருவர் என்ற வகையில், உண்மையை எழுத வேண்டியிருந்ததாலேயே தான் இந்த நூலை எழுதியதாக கம்பவாரிதி  குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment