Friday 5 February 2016

(50) கறுத்தக்கொழும்பான் - ஆசி கந்தராஜா

ஆசி கந்தராஜா புலம் பெயர் எழுத்தாளர். இவர் விவசாயப் பேராசிரியராக‌ இருப்பதால் அது தொடர்பான விடயங்களையும் சுவாரசியமாக கதைகளிடையே கொண்டு வந்து விடுகிறார்.
கறுத்தக் கொழும்பான் என்ற முதலாவது கதையே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களுக்கு தான் அதன் அருமை நன்றாக தெரியும். அவுஸ்திரேலியாவில் கறுத்தக்கொழும்பு மரம் எப்படியாவது நாட்ட வேண்டும் என்று நினைக்கும் உடையார் மாமா இறுதியில் அதை விட முக்கியமாக அடுத்த சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என அது தொடர்பான பணியில் இறங்கும் கதை.

அடுத்து பனை , முருங்கை என்று  யாழ்ப்பாணத்தவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாத உணவு வகைகளைப்பற்றிய கதைகள்.  அவை தொடர்பான சகல விடயங்களையும் கதைகளில் சொல்கிறார்.  ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் இருப்பதால் கிழக்கு , மேற்கு ஜேர்மனி பற்றியும் தனது கதைகளில் தெளிவாக எழுதியுள்ளார்.
இவரது எழுத்துக்கள் இடையிடையே அ. முத்துலிங்கத்தை நினைவூட்டுகின்றன.

(49) அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

 மனிதர்கள் உணர்வுகளிற்கா அல்லது மனிதர் வகுத்த நியமங்களுக்கா முக்கியம் கொடுக்கிறார்கள் என்பது பதில் கூறமுடியாத சிக்கலான வினாவாக இருக்கிறது. உணர்வுகளுக்கு மிக்கியம் கொடுத்தாலும் கூட அவர்கள் தாம் நியமங்களுக்கு கட்டுப்பட்ட ஒழுக்க சீலர்களாகவே காட்டிக்கொள்கின்றனர். ஜானகிராமனின் நாவல்களில்  மனிதர்கள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.


அப்பு சிறு வயது முதல் காவேரிக்கரையில் உள்ள பவானி அம்மாளின் வேத பாடசாலையில் படித்துவிட்டு ஊருக்கு திரும்ப ஆயத்தமாவதில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது. காவேரி ஆறு தான் அவனுக்கு எல்லாமாக இருக்கிறது. இந்து,  பவானி அம்மாளின் உறவுக்கார பெண் .சிறுவயதில் திருமணமாகி கணவனை இழந்த இந்து வேதபாடசாலைக்கு மீண்டும் வந்து பவானி அம்மாள் கூடவே இருக்கிறாள். இந்துவின் காதலை ஏற்றுக்கொள்ள அப்பு மறுக்கிறான். அது மரபை மீறும் செயல் என காரணம் சொல்கிறான்.

சொந்த ஊருக்கு வரும் அப்புவுக்கு தனது அம்மாவின் செய்கைகள் சந்தேகத்தை தருகின்றன. அலங்காரத்தம்மாள் தனது செயல் பிழை என உணர்ந்தும் அதிலிருந்து விடுபடமாட்டாமல் வாழ்ந்து வருகிறாள். வீட்டில் எல்லோருக்குமே விடயம் தெரிந்திருக்கிறது.  அலங்காரத்தம்மாள் அப்புவை வேதம் படிக்க வைத்து அவனை வணங்கி தனது பாவத்தைப் போக்க வேண்டும் என நினைக்கிறாள்.  இறுதியில் அப்புவும் அம்மா பிள்ளை தான் எனக்கூறி காசிக்கு போய் பாவம் கரைக்க  கிளம்புகிறாள். இதிலிருந்து அப்பு , இந்துவின் விடயம்  அலங்காரத்தம்மாளுக்கு தெரிந்திருந்தது என ஊகிக்கமுடியும். பவானியம்மாள் வெளிப்படையாக எதுவும் கூறாவிட்டாலும் அவளது நடவடிக்கைகள் அப்பு , இந்து சேர வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்றே எண்ண வைக்கிறது. இந்த நாவலின் இந்து, அலங்காரத்தம்மாள், பவானியம்மாள் என அல்லோரும் தாம் விரும்பியதை சாதிக்கிறார்கள். பவானியம்மாள் வேதபாடசாலை நிறுவி வேதம் கற்றுகொடுக்கும் தனது ஆசையை நிறைவேற்றுகிறார்.அலங்காரத்தம்மாளும் இந்துவும் சம்பிரதாயமாக மக்களால் பேணப்படும் மரபை துணிந்து மீறுபவர்களாக இருக்கின்றனர்.

  ஜானகிராமன் நாவல்களின்  பெண்கள் தனித்துவமானவர்கள். அவர்களிடம் ஒரு வசீகரம் ஒட்டியிருக்கும்.  மோகமுள் நாவலின் ஜமுனா போல. 

"சரஸ்வதி பூஜை அன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால் அன்று ஒரு நாளும் இல்லாத திரு நாளாக புத்தகத்தின் மேல் வருகிறது ஆசை " 

என்ற‌ நாவலின் முதல் வரியே நாவலின் சாரம்சம் போல இருக்கிறது.