Friday 22 January 2016

(48) கிரௌஞ்சவதம் - வி.ஸ. காண்டேகர்

காண்டேகர் மராட்டிய எழுத்தாளர். அவரது  பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.  கிரௌஞ்ச வதமும்  கா. ஸ்ரீ. ஸ்ரீ யாலேயே அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே மூலமொழியில் வெளியாகியிருக்கின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு காண்டேகர் பரிச்சயமானவர்.




முன் இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன் நெடு நாள் இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!

வால்மீகியின் உத்தர ராமசரிதப் பாடல் இது. இப்பாடலே நாவலுக்கு ஆதாரமானது.

அப்பண்ணாவின் ஒரே புதல்வி சுலோசனா. நன்கு படித்தவள், திறமையானவள்.  அவளது இளவயது தோழன் திலீபன் எனப்படும் தினகரன். காந்திய ஈடுபாடு உள்ளவன். மக்களுக்காகவே சிந்தித்து வாழ்பவன். சுலோவின் கணவன் பகவந்தராவ் மகாராஜாவின் வைத்தியர். மகாராஜாவின் தயவில் படித்து அவரது அரண்மனை வீட்டிலேயே வாழ்கிறான். இவர்களுக்கிடையே பின்னப்பட்ட கதை கிரௌஞ்சவதம்.

காந்திய சிந்தனைகள் , காளிதாசரின் மேகதூதம் என்பவற்றையும் இடையிடையே வாசிக்க முடியும். இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரும் புத்தகம்.

Saturday 2 January 2016

(47) ஒசாமஅசா - சோ

ஒசாமஅசா  - ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள். குமுதம் இதழில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகள். சோ சொல்வதை  Record  பண்ணி மணா தொகுத்திருக்கிறார். சோ இது தன்னுடைய சுயசரிதை இல்லை எனக் குறிப்பிடுகிறார். சோவுக்கு இந்தியாவின் முக்கிய நபர்கள் பலருடன் நல்ல நட்பு உள்ளது. முக்கிய நபர்களுடனான சோவின் அனுபவங்களே இத் தொகுப்பு. அவர்களில் காணப்படும் உயர்வான,  தான் பிரமிக்கும் குண இயல்புகளை குறிப்பிட்டுள்ளார். பகுதி 1 , 2 என இரு புத்தகங்கள் , மொத்தமாக கிட்டத்தட்ட 500 பக்கங்கள்.

எனக்கு ஈழம் தொடர்பான சோவின் கருத்துகளுடன் முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவரது திரைப்பட  நகைச்சுவைக‌ள் , எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மூப்பனார், காமராஜர் , இந்திய பிரதமர் மோடி ,  M.G.R, சிவாஜி , கருணாநிதி உட்பட அரசியலில் முக்கியமானவர்கள் , சினிமாவில் முக்கியமானவர்கள் பலரைப்பற்றி சுவையான விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.M.G.R இன் அரசியல் தொடர்பாக அவரது துக்ளக் பத்திரிகையில் விமர்சனம் செய்து வந்தாலும் திரைப்படங்களில் அவருடன் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்ட சம்பவத்தை சுவையாகக் குறிப்பிடுகிறார். துக்ளக்கில் பணி புரிபவர்கள் பற்றிய அறிமுகம் சிரிப்பை வரவைக்கும். சோவின்  குடும்பத்தவர்கள், நண்பர்களுடனான மறக்க முடியாத சில அனுபவங்களும்  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவரது அம்மா அவரை சோழன் பிரம்மஹத்தி என்ற பட்டப் பெயரில் அழைத்து, அதுவே பின்னர் சோழன் ஆகி  சோ  ஆகிவிட்டது என்று தனது பெயருக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.உயர்ந்த மனிதர்களுடனான நட்பு என்பது எல்லாருக்கும் எழிதில் கிடைப்பதில்லை. சோவுக்கு அது கிடைத்திருக்கிறது. இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் முக்கியஸ்தர் பலரைப்பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியும்.