Thursday 27 August 2015

(39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1

தொகுப்பாசிரியர் : காவ்யா சண்முகசுந்தரம்

" நடேச சாஸ்திரி தன‌து தீனதயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறுகிறார். மற்ற முயற்சிகள் பற்றி அவருக்கு தெரியவே தெரியாதோ அல்லது தெரிந்திருக்கும் அதெல்லாம் அப்படியொன்றும் முக்கியமானவை அல்ல என்று எண்ணி இப்படி எழுதியிருப்பாரோ."

 இப்போது உள்ள வேலைப்பளு கூடிய நிலையில் 896 பக்கங்கள் உடைய இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேனா என்ற சந்தேகத்தோடு தட்டிய போது மேற்சொன்ன வரியை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அவ்வரி ஒரு விதமான கவர்ச்சியை தந்ததால் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன். நிச்சயமாக பயனுள்ள புத்தகம் தான். தமிழின் முதல் ஐந்து நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவற்றை வாசித்தபோது கட்டாயம் அந்த நாவல்களைப் படிக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டேன்.

அவரது கட்டுரைகள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. இப்புத்தகத்தில் 25 தமிழ் நாவல்கள் , 11 இந்திய நாவல்கள், 63 உலக நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவை இடம்பெற்றுள்ளன.  படித்திருக்கிறீர்களா? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் இதில் உள்ளடக்கம்.

தமிழின் முதல் 5 நாவல்களான வேத நாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் , ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் , அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் , ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளு  தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாஷி என்பவற்றை பற்றி சற்று விரிவாகவே எழுதியுள்ளார்.  சிரித்துக்கொண்டே வாசிக்க  வைக்கும் எழுத்து நடை க. நா.சு உடையது. இவரது நாவல்களும் இப்படித்தான் இருக்குமோ என்னவோ. இவை தவிர 20 தமிழ்ப் புத்தகங்கள் பற்றி இவர் எழுதியவையும் இருக்கின்றன.

சுந்தரி - வ.ரா
அணையாவிளக்கு - ஆர்வி
மேனகா - வடுவூர் துரைசாமி ஐயங்கார்
கேட்ட வரம் - அநுத்தமா
ராஜாம்பாள் - ஜே.ஆர் .ரங்கராஜு
சிநேகிதி - அகிலன்
பொய்த்தேவு - க. நா.சுப்ரமணியம்
இதய நாதம் - ந.சிதம்பர சுப்ரமணியம்
மண்ணாசை - சங்கரராம்
கரித்துண்டு - மு.வரதராசன்
நாகம்மாள் - ஆர்.சண்முக சுந்தரம்
ஜடாவல்லவர் - அ.சுப்ரமணிய பாரதி
சத்தியமேவ - கிருத்திகா
நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராமன்
பெண் இனம் - சங்கரராம்
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்
புத்ர - லா.ச.ரா
மோகமுள் - தி.ஜானகிராமன்
நைவேத்யம் - பூமணி

இந்திய நாவல்களில் பஷீரின்  உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது , சிவராம் காரந்த்தின் மண்ணும் மனிதர்களும் உட்பட 11 நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். உலக நாவல்கள் வரிசையில் 63 நாவல்களைப்பற்றி எழுதியுள்ளார். 

Tuesday 11 August 2015

(38) விசும்பு - ஜெயமோகன்


எனக்கு தெரிந்து தமிழில் அறிவியல் கதைகள் எழுதுபவர் எழுத்தாளர் சுஜாதா தான்.  அறிவியல் புனைகதைகள் எனும் போது விண்வெளி , இயந்திர மனிதர் , வேற்றுக்கிரக வாசிகள் போன்றவையே  நினைவுக்கு வருவது சுஜாதாவின் தாக்கமாக இருக்கலாம்.


ஜெயமோகன் நமது பண்பாடு , ரசவாதம் , சித்த மருத்துவம் தொடர்பாக அறிவியல் கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்த போது வாசிக்க வேண்டும் என நினைத்தேன். அண்மையில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிச்சயமாக புதுவித அனுபவமாக இருந்தது. அத்துடன் இக்கதைகள் நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருக்கின்றன. பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.


ஐந்தாவது மருந்து
 எயிட்ஸ் இற்கு மருந்து கண்டுபிடித்த தளவாய் ராஜாவை பார்க்க அவனது நண்பர்  இருவர் அவனது ஊருக்கு வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடை பெறும் உரையாடலாக கதை அமைக்கப்பட்டுள்ளது. பரிணாமக்கொள்கை , சித்த மருந்து , சுவடிகள் , வரலாற்றில்  இதே அறிகுறி உடைய நோய் பற்றிய தகவல் என கதை அவ்வளவு நன்றாக இருக்கும்.

இங்கே , இங்கேயே..
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது  வாகனத்தின்தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார்  நாராயணன் .  இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள்  விஞ்ஞான ரீதியானவை.

விசும்பு
இது பறவைகள் வலசை போவது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பறவைகள் வலசை போவது பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலையும் இக்கதை தரும்.  நஞ்சுண்டராவ் , அவரது மனைவி , அவரது தந்தை கருணாகரராவ் எல்லோரும் interesting characters.

பித்தம் -
இது ரசவாதம் தொடர்பான கதை. சில சித்தர்கள் இக்கலை பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள் என நம்பப்படுகிற‌து. செம்பை  தங்கமாக்கும்  முயற்சி இன்றும் பலர் செய்துபார்க்கிறார்கள்.

உற்று நோக்கும் பறவை:
இக்கதையை வாசித்த போது துவாத்மர்கள் என்பவர்கள் உண்மையில் இருந்தவர்கள் தான் என நான் நம்பி இணையத்தில் தேடினேன். ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய பதி  கடிதத்தில் அது கற்பனையாது எனக் கூறியிருந்தார். இது உளவியல் , மனப்பிளவு தொடர்பான கதை.

 மூளையின் இயக்கம்  தொடர்பான பூர்ணம்  மற்றும் நாக்கு , நம்பிக்கையாளன் போன்ற கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கடைசி இரு கதைகளும் பேச்சு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.  "குரல்" என்ற கடைசி பேச்சு வடிவ சிறுகதை என்னைப் பொறுத்தவரை சிறந்த நகைச்சுவை கதையாகவும் இருந்தது.

எழுத்தாளர் விசும்பு , அறம் போன்ற கதைகளையும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்காக இடைக்கிடை எழுதினால் பலர் பயன் பெறுவார்கள்.


Wednesday 5 August 2015

(37) ராயர் காப்பி கிளப் - இரா. முருகன்

 இலக்கியத்துக்காக தொடக்கப்பட்ட இணையக் குழு "ராயர் காப்பி கிளப்"  இல்  இரா. முருகனால் எழுதப்பட்டவற்றை உள்ளடக்கிய புத்தகம். வாசிப்பதற்கு இலகுவான நடையைக் கொண்டது.   எழுத்தாளர் தனது அனுபவங்களை  எழுதியிருக்கிறார். 

தினமணி இசைமலரின் சிறப்பை பற்றி எழுதியுள்ளார்.  கிட்லருக்காக படம் இயக்கிய  நடிகை , இயக்குனர்  லெனி சந்தித்த பிரச்சினைகள்   , ஈழ எழுத்தாளர் குந்தவையின் கதைகள் ,  கமலஹாசனை சிறுவயதில் பார்த்த‌ அனுபவம் , ஜோதிடம் பற்றிய நக்கல்கள் என மொத்தமாக 32 தலைப்புகளில் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. "நிச்சயம் இந்தியா தான் ஜெயிக்கும் " என்ற தலைப்பில் எழுதப்பட்டவை கிறிக்கட் தவிர வேறு சிந்தனை அற்ற இன்றைய மக்களை நையாண்டி பண்ணுவதாக அமைகிறது. 

Sunday 2 August 2015

(36) மெலூஹாவின் அமரர்கள் - Amish Tripathi

The Immortals of Meluha

தமிழ் மொழிபெயர்ப்பு : பவித்ரா ஸ்ரீநிவாசன்


 இந்துக்களின் கடவுளான சிவன் ஒரு மனிதனாக இருந்து கடவுளாக்கப்பட்ட ஒருவராக இருந்திருந்தால்....  என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்ட கதை தான் "மெலூஹாவின் அமரர்கள்" . சிவா, அவர் மனைவி சதி, சதியின் தந்தை அரசன் தக்க்ஷன், வீரபத்ரர், நந்தி  என பலரும்  கதா பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர்.

 மெலூஹா என்ற சிறப்பு வாய்ந்த நகரத்திற்கு சிவாவை நந்தி அழைத்து வருகிறார். மெலூஹாவில் மந்திர மலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோமபானம் அருந்தியவுடன் சிவாவின் கழுத்து நீல நிறமாகிவிட அவரே தமது தலைவர் என மெலூஹாக்கள் கூறுகின்றனர். மெலூகா மக்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். இராம பிரான் வகுத்த சட்டங்களைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கும் சந்திர வம்சத்தினருக்கும் பகை. சிவன் தலைமையில் சந்திர வம்சத்தினருடன் மிகப்பெரும் போர் நடை பெறுகிறது. சந்திர வம்சத்தவர்களை சிவா தலைமயிலான படை வென்றுவிட சிவா அவர்களது தலை நகர் அயோத்தி செல்கிறார். சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் இல்லை என்ற விடயம் சிவனுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் அன்பானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களும் நீலகண்டருக்காக காத்திருப்பது சிவனுக்கு தெரிய வருகிறது.சிவனுக்கு எல்லாமே குழப்பமாகிவிடுகிறது. பண்டிதர் ஒருவர் அவரது குழப்பங்களை தீர்க்கிறார்.

சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார். சதியைக் காதலிக்கிறார். திருமணம் செய்கிறார். போர் செய்கிறார்  . தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக புகை ப் பிடிக்கிறார்.  பாண்டிய மன்னர்களைப் பற்றியும் புத்தகத்தில் வருகிறது. பண்டிதர் என்ற சொல் பாண்டியர் என்றதிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எழுத்தாள்ர் கூறுகிறார். முதல் பாகமான இந்த புத்தகத்தில் நாகர்கள் பற்றிய மர்மம் தீரவில்லை. அடுத்த புத்தகம் The Secret of the Nagas  தானே.

கி.மு 1900 இல் நடைபெறும் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்திலேயே சிறப்பான, வசதியுடைய நகரமாகத்தான் மெலூஹா இருக்கிறது. கதைக்கும் மொழி இன்றைய திரைப்பட  பாணியிலான ஒரு வகை மொழியாக காணப்படுகிறது. மொழிபெயர்ப்பில் பிரச்சினையா அல்லது  ஆங்கிலத்திலும் இதே பாணியில் தான் அமைந்திருக்கிறதா என தெரியவில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு" மெலூஹாவின் அமரர்கள்" சிறந்த புத்தகமாக தோன்றுமா என தெரியவில்லை.  என்னைப் பொறுத்த வரை , பொன்னியின் செல்வனுக்கு பின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு வாசிக்க பேரார்வம் வந்தது போல‌  இந்த புத்தகத்திற்கு வரவில்லை.  இந்த எழுத்துகளில் ஏதோ ஒன்று missing.

 Amish Tripathi யின்  The Immortals of Meluha, The Secret of the Nagas , The Oath of the Vayuputras ஆகிய மூன்று புத்தகங்களும் சிவா முத்தொகுதி ( Shiva trilogy)  என  குறிப்பிடப்படுகின்றன.  இந்தியாவில் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய  புத்தகங்களாக கருதப்படுகின்றன. "மெலூஹாவின் அமரர்கள்" வெற்றியைத்தொடர்ந்து  Amish Tripathi  " The Secret of the Nagas"   "The Oath of the Vayuputras" ஆகிய புத்தகங்களை எழுதினார். மூன்று புத்தகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.