Saturday 16 August 2014

(32) உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்

   முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம் காரணமாக வாரம் ஒரு தடவை மன நலக்காப்பகத்திற்கு சென்று மன நோயாளிகளிடம் கலந்து பேசுவது என முடிவு செய்கிறார்கள். மன நோய் பற்றிய சமூகத்தின் தவறான புரிதலை களையும் பொருட்டு அந்த  மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்கிறார்கள். அது தான் இப்படைப்பு. 19 காட்சிகளும் 59 மன நிலைகளும் இன்னும் தொடரும் பழமை எனும் தலைப்பில் 6 பதிவும் சில செய்திகள், சிந்தனைகள் எனும் தலைப்பில் 8 பதிவும் என பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

 இதில் பலவற்றை படிக்கும் போது எனக்கும் இதைப் போன்ற சில குணங்கள் இருக்கிறதே என யோசிக்க வைத்தது. பொதுவாக அனைவருக்கு இருக்கும் பிரச்சினை பயம் தான். பலருக்கு அதில் தான் மன நோய் ஆரம்பித்திருக்கிற‌து.
பலர்  பீடி, கஞ்சா பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனைவி மேல் சந்தேகம் வந்து  அதனால் மன நிலை பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பக்தி கூடுவதால் அம்மன் வருதலும்  மனச்சிதைவின் அறிகுறி என்கிறார். ஊரில எல்லோரும் தன்னைப் பற்றி தவறாக கதைக்கிறார்கள் என்கிறார் ஒருவர். ஒருவருக்கு காதில் ஒரு குரல் கேட்ட வண்ணம் இருக்கிற‌து.

 இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதை ஒன்று நிறையவே யோசிக்க வைத்தது.  ரோட்டில் ஒருவர் இரண்டு ரூபாய் கடன் கேட்பதிலிருந்து அவருடன் பழக்கம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அவர் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதன் பிறகான சந்திப்பில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என புரிந்து விடுகிறது. அவருடன் யாரும் இல்லை என்பதால் அவருடன் அக்கறையாக நடந்து கொள்கிறார். வீட்டிற்கு கூட்டிச்சென்று சாப்பாடு கொடுக்கிறார். இரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து அவரை மன நல‌க்காப்பகத்தில் சேர்த்தும் விடுகிறார். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, தான் செய்தது சரி தானா என்ற சந்தேகம் வருகிறது. சுதந்திரமாக வீதியில் நடமாடி சந்தோசமாக இருந்தவரை சிகிச்சை என்ற பெயரில் துன்பத்தில் தள்ளிவிட்டோமோ என நினைப்பதோடு கதை முடிகிறது. மன நலக் காப்பகத்தில் சிகிச்சைகள் மோசமான நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறது.

   இந்த புத்தகத்தை நாவல் என்று சொல்வதா அல்லது சிறுகதை என்று சொல்வதா என தெரியவில்லை. எழுத்தாள‌ர் படைப்பு என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைத்துள்ளது. எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட.

No comments:

Post a Comment