Tuesday 5 August 2014

(27)கந்தவேள் கோட்டம் - செங்கை ஆழியான்

  இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் பலரது எழுத்துக்கள் வாசிப்பதற்கு கடினமானதாக இருக்கும். செங்கை ஆழியான் என்ற புனைபெயரால்  அறியப்படும் க. குணராசா இந்த வகையிலிருந்து மாறி  அனைவருக்கும் புரியும்படியும், அதே வேளையில் சுவாரசியமாகவும் எழுதுபவர். வரலாறு, சமூகம், நகைச்சுவை என பல தளங்களில் எழுதி வருகிறார். இவரது நல்லூர் முருகன் ஆலய வரலாறு பற்றிய நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

நல்லூர் முருகன் ஆலயம் யாழ்ப்பாணத்தவர்களது வாழ்வுடன் பிணைந்த ஒரு ஆலயம். திருவிழா நடைபெறும் 25 நாட்களும் யாழ் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அலங்காரக் கந்தன் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் நல்லூர் முருகன் தேரில் வரும் காட்சி அப்படி அழகாக இருக்கும். நல்லூர் திருவிழாவை ஒட்டி புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், இலங்கையின் வேறு பகுதியில் வசிப்பவர்கள் என யாழ்ப்பாணத்தவர்கள்  பலரும் வருவதுண்டு. நல்லூர் ஆலயம் பற்றி பலரும் தமது அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். மனம் நிறைந்த நல்லூர் ஆலய வரலாறை கூறும் நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

இலங்கை கோட்டை இராட்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் இந்தியவின்  மலையாளப் பகுதியில் இருந்து பணிக்கனாக (யானை பழக்குபவர்கள்) பணிபுரிய வந்த வீரன் பராக்கிரமபாகுவின் தங்கையை மணம் புரிகிறான்.  அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் மூத்தவன்  சப்புமல் குமாரயா  எனப்படும் செண்பகப் பெருமாள். இவன்  பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.  பராக்கிரமபாகுவிற்கு ஆண் வாரிசு இல்லாததால் சப்புமல் குமாரனை அடுத்த வாரிசாக நினைக்கிறான். (பின் மகளுடைய மகனை அரசனாக்குகிறான் என்பது வேறு விடையம்) சப்புமல் குமாரயா யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வந்த போது அவனது அமைச்சனாக இருந்த விஜயபாகுவால் நல்லூர் ஆலயம் அழிக்கப்படுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்  புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. பின் சப்புமல் குமாரனே வேறு ஓர் இடத்தில்(முத்திரைச்சந்தி) நல்லூர் ஆலயத்தை கட்டிக் கொடுக்கிறான்.  

சப்புமல் குமாரனுடனான யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சமடைந்த அன்றைய அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் தருணம் பார்த்து மீண்டும் போர் தொடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுகிறான்.  அவனைத் தொடர்ந்து அவன் மகன் பரராசசேகரன் ஆட்சி செய்கிறான். பின் பல வருடங்களுக்கு பின் போர்த்துக்கேயர் காலத்தில் மீண்டும் நல்லூர் தரைமட்டமாக்கப்படுகிற‌து. முக்கிய சிலைகள் பாதுகாப்பாக இரகசிய இடத்தில் பேணப்படுகிறது. நல்லூர் ஆலயம் இருந்த  இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டபடுகிற‌து.  போர்த்துக்கேயர் காலத்தில் சைவ சமயம் பல சோதனைகளுக்கு உள்ளாகிறது. பலர் படிப்பு, பதவிக்காக மதம் மாறுகிறார்கள். (முக்கியமாக பிரபலமான கதிர்வேற்பிள்ளை மதம் மாறி பேதுருப்பிள்ளையாகினார், மாப்பாண முதலியார் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆனார்). பின் ஒல்லந்தர் காலத்தில் தேவாலயத்திற்கு அருகில் சிறிதாக ஆலயம் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள். கிருஸ்ணையர் என்பவர் அவ்வாலயத்தை மக்களுடன் உதவியுடன்  மீண்டும் நிறுவ  நினைக்கிறார். 

ஒல்லாந்தர் தமது தேவாலயத்திற்கு இடையூறாக இருப்பதால் குருக்கள் வளவு எனும் பழைய இடத்திலேயே ஆலயத்தை அமைக்க அனுமதிக்கின்ற‌னர்.  அங்கு இருந்த முஸ்லிம் மக்கள் எழுப்பப்படுகிறார்கள்(?). கோயில் காணியை விற்றார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மதித்த யோகியர் ஒருவரது சமாதி அங்கு இருப்பதால் அதை வணங்க அனுமதி கேட்கிறார்கள். அதற்கான அனுமதி வழங்கப்படுகிற‌து.  அது தான் இன்றைய நல்லூர் ஆலயம். இதற்கு மாப்பாண முதலியார் மகன் இரகுநாத மாப்பாண முதலியார் (இவர் சைவர்) உதவுகிறார். புதிதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு கிருஷ்ணையர் பிரதம குருக்களாகவும் இரகுநாத மாப்பாண முதலியார் தர்மகத்தாவாகவும் இருக்கிறார்கள்.(இன்றும் மாப்பண முதலியார் பரம்பரையினரே நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ளனர்). அதன் பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களும் நாவலின் இறுதியில் வருகிறது.

நல்லூர் கந்தசுவாமிகோயில் கட்டியமான‌

"ஸ்ரீமான் மகாராஜாதி ராஜய அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி ஸ்ரீ கஜவல்லி மகா வல்லி ஸமேத ஸ்ரீ சுப்ர‌மண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சிவகோத்திரோற்ப வகா இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா"

எனும்  வாக்கியத்துடன் நாவல் நிறைவடைகிறது.

நல்லூர் ஆலயத்தை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த நாவல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

No comments:

Post a Comment