Sunday 3 August 2014

(26) மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌

மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌ (சிங்களம்)
தமிழில் : சுந்தரம் சௌமியன்

  வங்காள, மலையாள மொழிபெயர்ப்பு எல்லாம் படிக்கிறோம், நமது சகோதர மொழி என அறியப்படும் சிங்கள மொழியில் ஒரு புத்தகம் கூட வாசிக்கவில்லையே என்ற உணர்வு 'மடொல் தீவு' (மடொல் தூவ) எனும் புத்த‌கத்தை நூலகத்தில் பார்க்கும் போது வருவதுண்டு. என்ன உறவு என்று தெரியவில்லை நூலகத்தில் அடிக்கடி கண்ணில் தட்டுப்படும் இந்த  'மடொல் தீவு'. அதனால் இந்த தடவை வாசிப்பது என்று முடிவு செய்தேன். மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய 'மடொல் தீவு' ஒரு சிறுவர் புதினம் ஆகும். இக்கதை இலங்கையின்  தெற்குக் கரையோரத்தில் 1890 இல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மடொல் தூவ என்பது தெற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி ஆரம்பிக்கும் கதை பின்பு உபாலியும் அவன் நண்பன் ஜின்னாவும்  மக்கள் அரவம் அற்ற மடொல் தூவவிற்கு செல்வது போன்று அமைகின்றது.  இந்தக் கதை ஒரு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சீன, ருசிய , ஜப்பானிய , ரோமேனியா, பல்கேரியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஊரில் படிப்பில் ஆர்வம் அற்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு என்ற பெயரில்  மக்களுக்கு துன்பம் விளைவித்து திரியும் உபாலி கினிவெல்ல ஒரு கட்டத்தில் ஜின்னாவுடன்  யாருக்கும் சொல்லாமல்  வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆவி, பாம்பு இருக்கும் தீவு என அறியப்படும் ஆளரவமற்ற மடொல் தூவவிற்கு துணிந்து செல்கின்றனர் இருவரும். காடாக இருந்த தீவின் ஒரு பகுதியை சிறிது சிறிதாக மாற்றி மரக்கறி பயிர் செய்து சந்தையில் விற்கிறார்கள். தீவில் ஆள் நடமாட்டம் ஆரம்பித்தவுடன் அரசாங்கம் உரிமை கோரி வருகிறது. பலர் குத்தகைக்கு நிலத்தை எடுக்க முனைகிறார்கள். ஒரு சட்டத்தரணியின் உதவியால் அத்தீவு அவர்களுக்கே குத்தகைக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் மக்களுக்கு தொல்லை புரிபவனாக இருக்கும்  உபாலி  பின் பொறுப்புமிக்கவனாக, உதவுபவனாக இருக்கிறான்.

இந்த நாவல் சிறுவர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அந்த தீவில் கொலை செய்த ஒருவனும் களவெடுத்த ஒருவனும் வேறு  தங்கியிருக்கிறார்கள்.  உபாலியும் ஊரில் மக்களுக்கு நிறைய தொல்லைகளை புரிந்திருக்கிறான். அவனும் அவனது நண்பர்களும் கள‌வெடுக்க முயன்று பிடிபட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் 'அறம்' வாசித்த எனக்கு இந்த நாவலை கொண்டாட முடியவில்லை.




No comments:

Post a Comment