Saturday 2 August 2014

(25) 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. - அசோகமித்திரன்

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. -  அசோகமித்திரன்

'1945 இல் இப்படியெல்லாம் இருந்தது..'  -  அசோகமித்திரனின் சிறுகதைத்தொகுப்பாகும். பெரும்பாலான கதைகள் அ.முத்துலிங்கம் கதைகளைப்போல் சுயசரிதைத் தன்மை கொண்டவை. தனது அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி தான் எல்லாக் கதைகளுக்கும் மையப்பொருள்' என பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலகுவான நடையில் , ரசிக்கும் வகையில் மொத்தமாக 21 கதைகள் உள்ளன. 

'கோல்கொண்டா' எனும் முதலாவது கதை டாணாஷாவின் அமைச்சர் மாதண்ணா பற்றியது. பாமினிப்பேரரசு உடைந்த போது உருவாகிய ஐந்து சிறு அரசுகளில் ஒன்று தான் கோல்கொண்டா. டாணாஷா கோல்கொண்டாவை ஆண்ட போது அவனிடம் இந்து அதிகாரிகள் பலர் வேலை செய்திருக்கிறார்கள். ராமதாசர் எனப்படும் கோபண்ணா அவர்களில் ஒருவர். அரச பணத்தை எடுத்து மலைக்கோயிலை புதுப்பித்ததால் கோபண்ணா சிறை வைக்கப்பட்டிருந்தார். அமைச்சர் மாதண்ணா  கோபண்ணாவின் தாய்மாமன் உறவு.  ஔரங்கசீப்  கோல்கொண்டா மீது படையெடுத்த போது நடைபெற்ற ஒரு சம்பவம் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் உள்ள‌ முக்கிய கதைகளாக நான் நினைப்பது கோயில் , நாய்க்கடி மற்றும் குழந்தைகள் இறக்கும் போது என்பன. 'வெள்ளை மரணங்கள்' வெள்ளைக்காரர்களின் கல்லறை பற்றியது. 'உங்கள் வயது என்ன' என்பது மனிதனின் வயதுடன் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதை. அதே போல ஜோதிடம் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதையும் இந்த புத்தகத்தில் உள்ளது. 'யார் முதலில்?' என்ற கதை 'Dog trainer' பற்றியது.

அசோகமித்திரனின் நாவல்களில் தண்ணீர் , ஒற்றன் வாசித்திருக்கிறேன். அவை பெரிதாக என்னைக் கவரவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் மிகவும் நன்றாக உள்ளன. அவரது ஏனைய கதைகளையும் வாசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment