Wednesday 4 June 2014

12. ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌

ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌ (வங்காளி)
தமிழ் மொழியாக்கம் : த. நா . குமாரஸ்வாமி


'ஆரோக்கிய நிகேதனம்'  என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய் யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவர்கள் நாடி பிடித்து ஆயுள் சொல்லக்கூடியவர்கள், ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுபவர்கள். அந்த காலத்தில் பிரபலமகி வந்து கொண்டிருந்த ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம்  தொடர்பாக  மக்களது அபிப்பிராயங்கள், பரம்பரையாக மருத்துவத்தை தந்தையிடம் பயிலும் போது எடுக்கும் சிரத்தை, ஆங்கில மருத்துவத்தில் கொண்டுள்ள மோகம், ஆங்கில மருத்துவம் படிப்படியாக மக்களிடம் அறிகுகமாகிய முறை என பலவற்றை பற்றி நாவல் சொல்கிற‌து.

டாக்டர் பிரத்யோத் ஆங்கில மருத்துவர். ஜீவன் மாஷாய் நாடி பிடித்து நோயளியின் நாளை குறிப்பதை அறிந்து கோபம் கொள்கிறார். வைத்தியம் என்பது நோயில் இருந்து நிவாரணம் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர இறுதி நாளை பற்றி தெரிவிக்கும் முறை அல்ல என்பது அவர் வாதம். ஜீவன் மாஷாய் இன்னும் சில மாதங்களே வாழுவார்கள் என நாள் குறித்த நோயாளிகளை தான் காப்பாற்றுவதாக சவால் விடுகிறார். தாந்து கோஷால்  என்பவன் வயிற்று புண் காரணமாக மருந்து எடுப்பதற்கு ஜீவன் மாஷாயிடம் வருகிறான்.அவனது உணவுப்பழக்கம் மாறாத வரை அவனது நோய் மாறாது என சொல்லி அவனுக்கு நாள் குறிக்கிறார். இதனால் தாந்து கோபம் கொண்டு பிரத்யோத்திடம் சென்று காட்டுகிறான். பிரத்யோத் அவனது வருத்தத்தை மாற்றுவதாக சவால் விட்டு மருத்துவமனையிலேயே அவனை வைத்து பார்க்கிறார். ஆனால் உணவுப்பழக்கத்தை மாற்றமுடியாத அவன் மருத்துவமனையில் உணவை திருடி சாப்பிட்டு மரணமடைகிறான்.

ஜீவன் மாஷாய் இளமையில் ஆங்கில மருத்துவம் படிக்கவே விரும்புகிறார். ஆனால் காதல் பிரச்சினையில் ஏற்பட்ட கைக்கலப்பு காரணமாக அவரால் அப்படிப்பை தொடரமுடியவில்லை. அவர் காதலித்த பெண் மஞ்சரியும் நாட்டு வைத்தியனை மணக்க விருப்பம் இல்லாமல் வேறு ஒருவணை திருமணம் செய்கிறாள். அதன் பின் அவர் ஆத்தர்- பௌ என்பவளை திருமணம் செய்கிறார். ஆனால் அவர்களது உற‌வும் திருப்திகரமாக இருக்கவில்லை. ஆத்தர்- பௌ எப்போது ஏதாவது திட்டியபடியே இருக்கிறார். தனது மகனுக்கும் நோயின் போது நாடி பிடித்து பார்த்து, இறந்துவிடுவான் என்று சொன்னதால் கல் நெஞ்சக்காரன் என நினைக்கிறாள். ஊரிலும் அதைப்பற்றி கதைக்கிறார்கள். ஏழைகள், வயதானவர்கள்   ஜீவன் மாஷாயிடமே தமது நோயை காட்ட வருகிறார்கள். அவர் யாரிடமும் கறாராக பணம் வசூலிப்பதில்லை. நோயாளிகளிடம் இருந்து வர வேண்டிய கடனே பல ஆயிரங்கள் இருக்கிறது.  சில வருத்தங்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது என சொல்லி நோயாளிகளை அனுப்பிவிடுகிறார்.

பிரத்யோத் டாக்டரின் மனைவிக்கு நோய் வந்த போது, அவர்  ஜீவன் மாஷாயிடம் உதவி கேட்கிறார். இரத்த பரிசோதனை முடிவு அடுத்த நாளே வரும் என்பதால் நாடி பிடித்து என்ன வருத்தம் என்பதை மட்டும் கண்டு கூறும்படி கேட்கிறார். அதை வைத்து மனைவிக்கு மருத்துவம் பார்க்கிறார். நாடி பிடித்து அவர் சொன்ன உடல் வெப்பனிலை கருவியில் காட்டிய வாசிப்புக்கு சரியாக இருப்பது அவருக்கு ஆச்சரியம் அழைக்கிறது. ஜீவன் மாஷாய் நாடி பார்த்து சொல்வதை நேரில் கேட்ட போது அவருக்கு ஜீவன் மாஷாய் மீது மதிப்பு வருகிறது.


சசாங்கனின் மனைவி, ரானா, ஜீவன் மாஷாயின் குரு ரங்லால், சசி என பல முக்கிய கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.


ஆயுர்வேதம் மரணத்தை பிங்கலநிற கூந்தலுடன் துயரங்களிலிருந்து விடுதலை தர வரும் தேவதையாக, ‘பிங்கல கேசினி’யாகப் பார்க்கிறது. வாழ்வின்  இறுதியில் மரணத்திற்கு அடிபணிந்தே ஆக  வேண்டும். வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப்படுத்தலாம். ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை வெல்ல  முடியாது. மரணத்தைக் கண்டுவிட்ட பிறகு மனநிம்மதியுடன்  அதை எதிர் கொள்வதே முக்கியமானது. இதையே ஜீவன் மாஷாய் மருத்துவத்தில் குறிப்புகள் மூலம், நேரடியாக சொல்கிறார். மதியின் அம்மாவிடம் 'கங்கை போய்வரலாமே'  என்பது அவர் மரணத்தை நினைவு கொள்ள கொடுத்த குறிப்பு. இதை உணர்ந்த போது பிரத்யோத்திற்கும் அவர் மீது மதிப்பு வருகிறது.

ஆரோக்கிய நிகேதனம் முக்கியமான இந்திய   நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.











No comments:

Post a Comment