Wednesday 14 May 2014

9. வெட்டுப்புலி - தமிழ்மகன்

 வெட்டுப்புலி -  தமிழ்மகன்


'வெட்டு புலி' தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் புலியை வெட்டுவது போன்ற ஒரு  படம் இருக்கும். அது தனது தாத்தா வழி உறவினர் என்று தெரிந்து கொள்ளும் ஒருவன் தனது அமெரிக்க நண்பர்களுடன் அது பற்றிய மேலதிக தகவல்களை தேடி பயணிக்கிறான்.  வெட்டுப்புலி தீப்பெட்டி பற்றிய தேடலினூடு  1930 இல் இருந்து 2010 வரையான திராவிட அரசியல், திராவிட கட்சி சார்ந்த குடும்பங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி நாவலில் தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமண ரெட்டி திராவிட சார்புள்ளவராக இருந்தாலும் தேவை ஏற்படின் சமரசம் செய்து கொள்பவராக இருப்பவர் என்பதால் குடும்பத்தில் பிரச்சினை பெரிதாக இல்லை.  தியாகராசன், நடராஜன் போன்றவர்கள் கொள்கை பிடிவாதம் உள்ளவர்கள் . இதனால் வீட்டில் எப்போதும் பிரச்சினை தான். பிரச்சினை அதிகரிக்க ஒரு கட்டத்தில் தியாகராஜனின் மனைவி  தனது கையில் அதிமுக சின்னத்தை பச்சை குத்தி கொள்கிறாள்.பெரும்பாலான திராவிடக் கட்சிக்காரர் மேடையில் பேசும் தமது கொள்கைகளை தமது வீட்டிலே கூட அமுல் படுத்த முடிவதில்லை. கடவுள் இல்லை, தாலி இல்லை என்பார்கள், ஆனால் அவர்களது வீட்டில் மனைவி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போற‌வராக இருப்பார். வீட்டு கல்யாணம் மந்திரம் சொல்லி  தாலி கட்டி தான் நடக்கும். தியாகராசன் குடும்பம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கடைசியில் அவன் சாமியாரிடம் சென்றுவிடுகிறான். மனைவியும் மகிழ்ச்சி அடைகிறாள். அவனது சகோதரன், அவன் அதிமுகவில் சேராமல் சாமியாரிடம் சென்றது எவ்வளவோ பரவாயில்லை என்று நிம்மதி அடைகிறான்.

பிராமண எதிர்ப்பு, சாதி பிரச்சினைகள் பெரியாரின் போராட்டம், சினிமா, இலங்கை தமிழர் பிரச்சினை என பலவற்றை பற்றி ஓரளவு விரிவான சித்திரத்தை நாவல் தருகிறது.

முக்கியமாக சினிமா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் புராண படங்களே எடுக்கப்பட்டன. ஒரே கதையை பலர் எடுப்பதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சினிமாவில் திராவிடக் கட்சியின் தாக்கம் அதிகம் இருக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்கும் ஆசையில் சினிமா  பற்றி தெரிந்து கொள்ள சென்னை வருகிறார். பின் தனது ஆசையை மாற்றி ஊரில் ஒரு சினிமா கொட்டகை போட்டு திருப்தி அடைந்துவிடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா எடுத்து அழிந்து போகிறான்.

 நடராசனுக்கும், கிருஷ்ணபிரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. நடராசனுக்கு கிருஷ்ணபிரியா மீது விருப்பம் இருந்தும் அவன் கொள்கை காரணமாக அவளை திருமணம் செய்யவில்லை. நடராசனின் கல்லுரியில் திராவிட  ஆதரவு அதிகமாக உள்ளது. அவன் ஈழ ஆதரவு உள்ளவனாக இருக்கிறான். இறுதியில் அதுவே அவனுக்கு துயராகிறது.

 2010 இல் புதிய தலைமுறை இளைஞர்கள் நியூயோக்கில் உரையாயாடுவதோடு நாவல் நிறைவடைகிறது. திராவிடக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். திராவிடக் கட்சி சார்பான நாவல் என்றும் இதை கூற முடியாது. ஆனால் திராவிடக் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தம்மை ஏதோ ஒரு கதாபாத்திரத்துடன் பொருத்தி பார்க்க முடியும்.

No comments:

Post a Comment