Thursday 17 April 2014

5. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

பாவண்ணனின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. துங்கபத்திரை நதியும் ஜோக் அருவியும் அவரது எழுத்துகளில் ஒன்றிப்போயிருக்கும். வாழ் நாளில் ஒரு தடவை ஜோக் அருவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இவரது "துங்கபத்திரை" என்ற புத்தகம் வாசித்ததில் இருந்து தொடங்கிவிட்டது. அதற்கு பின்  காகா கலேல்கர் எழுதிய "ஜீவன் லீலா" என்ற புத்தகத்தை ஜோக் பற்றி அறிவதற்காகவே வாசித்தேன். கும்கி படத்தில் ஜோக் அருவியின்  அழகை பார்த்த பின் அந்த ஆசை இன்னும் கூடிவிட்டது.

அண்மையில் பாவண்ணன் எழுதிய "ஆழத்தை அறியும் பயணம்" வாசித்தேன். தனது சில அனுபவங்களை  எழுதி அதனுடன் பொருந்தும் சிறுகதைகளை விபரித்து உள்ளார். கிட்டதட்ட எஸ்.ராமகிருஸ்ணனின் "கதாவிலாசம் " போல.
இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள். 43 எழுத்தாளர்களை ஓரளவு புரிந்து கொண்ட திருப்தி கிடைக்கிறது. வேற்று மொழிக் கதைகளில் தாகூர், ஜயதேவன், கே.ஏ.அப்பாஸ், சரத்சந்தர்,தூமகேது, வில்லியம் பாக்னர் போன்ற 10 எழுத்தாளர்களின் சிறுகதையை குறிப்பிட்டுள்ளார்.வாசிக்கும் போதே அவர்களது சிறுகதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. முக்கியமாக ஐல்ஸ் ஐக்கிங்கரின்  'ரகசியக் கடிதம்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த 43 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் "அக்கா", தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" தவிர வேறு எதையும் நான் வாசித்ததில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கல்கி,  நா. பார்த்தசாரதி  போன்றவர்களை மட்டுமே நான் ஓரளவு படித்துள்ளேன். இன்னும் படிக்க நிறைய சிற‌ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்  என்பதை இந்த புத்தகம் ஞாபகம் ஊட்டி சென்றுள்ளது.

No comments:

Post a Comment