Friday 21 February 2014

(4) தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி


தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த நாவல்.  இந்துமதியின் எழுத்துக்கள் பெரிதாக நான் வாசித்தது இல்லை. அவரது புத்தகங்களில் சிறந்தது இது தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 நடுத்தர குடும்ப கதை. கதையின் நாயகன் விஸ்வம்,  பெரிய மேற்படிப்பு கனவுகளுடன் வாழ்ந்து கடைசியில் குடும்பத்தை காப்பாற்ற படிப்பை நிறுதிவிட்டு சாதாரண வேலைக்கு செல்லும் அண்ணன் பரசு, அண்ணி ருக்மணி முக்கிய பாத்திரங்கள். ருக்மணியை அனைத்து ஆண்களுக்கும் பிடித்த கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார், அதாவது இன்முகத்துடன் கணவனின் குடும்பத்தை கவனிக்கும் ருக்மணி . அத்துடன் ருக்மணிக்கு இலக்கிய ஆர்வமும் இருக்கிறது.

அப்பாவின் வற்புறுத்தலால் நேர்முகத்தேர்விற்கு  வந்து காத்திருக்கும் விஸ்வம் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்க செல்வது, ஜமுனாவுக்கும் விஸ்வத்திற்கும் இடையிலான காதல், அம்மாவுக்கு பின் வீட்டை பொறுப்பாக பார்க்கும் அண்ணி ருக்மணி மற்றும்  பரசு, விஸ்வம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை இயலாமையுடன் சொல்லும் தந்தை என கதை வேகமாக நகருகிறது.
குடும்ப நிலைகாரணமாக இலட்சியம், கனவுகளை தொலைத்து, கிடைத்த வேலைக்கு தம்மை பழக்கி கொண்டு வாழ்ந்து வரும் பலர் தம்மை  விஸ்வம், பரசு பாத்திரத்திற்கு சுலபமாக பொருத்தி பார்க்கக்கூடியதாக இருப்பதால் தான் இன்று வரை பேசப்படும் நாவலாக இருக்கிறது.

Tuesday 4 February 2014

(3) பிரேம்சந்த் கதைகள்

 பிரேம்சந்த் கதைகள் (இந்தி)
 ஒரு கைப்பிடி கோதுமை மற்றும் சில கதைகள் 
 தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்




பிரேம்சந்த் என்ற பெயரை முதலில் நான் அறிந்து கொண்டது ஜெயமோகன் வலைத்தளம் மூலமாக தான். "இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன" என்ற கட்டுரையில் "லட்டு " என்ற கதையை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை வாசித்ததில் இருந்து பிரேம்சந்த் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த போதும் அவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை. கடைசியாக நூலகம் சென்ற போது "பிரேம்சந்த் கதைகள்" லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் அழகான அட்டை படத்துடன் இருந்தது. எடுத்து வந்து விட்டேன். அதன் முதல் வாசகி நான் தான். வந்தவுடன் "லட்டு" என்ற கதை உள்ளதா என்று தான் தேடினேன். இருக்கவில்லை. பரவாயில்லை. இதில் உள்ள  கதைகளும் சிறந்த கதைகள் தான்.  அவரது கதைகள் வாசிப்பதற்கு எளிமையான, உயிரோட்டம் நிறைந்தவை.

பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பிரேம்சந்த்  அப்பணியை விட்டு நீங்கி, சுதந்திர போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். 12 புதினங்கள், 2 நாடகங்கள், 200 சிறுகதைகள் எழுதியுள்ளதாக புத்தகத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இவரது கதைகள் ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது.

வட்டிக்கு வட்டி வாங்கும் குருக்கள் பற்றிய "கையளவு கோதுமை" , சுற்றியிருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இன்றி எப்பொழுதும் சதுரங்கம் ஆடும் இரு நண்பர்களை பற்றிய "சதுரங்க ஆட்டக்காரர்கள்"  சுதந்திர போராட்ட காலகட்ட ஒரு கிராமத்தை படமாக்கி காட்டும் "போர் அணிவகுப்பு" கிராமப்புற ஏழை சிறுவர்களின் ஈதுப் பண்டிகை கொண்டாட்டத்தை பற்றிய "ஈதுப் பண்டிகை" குடி நீர் எடுக்க நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய பெண்களின் நிலையையும் பணக்காரர்கள் தமது கிணறுகளில் ஏழைகள் நீர் எடுப்பதை மறுக்கும் நிலையையும் விவரிக்கும் "டாகூரின் கிணறு" என மொத்தமாக 15 கதைகள் இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.