Monday 3 November 2014

(35) நமது செல்வம் - மீ.ப.சோமு

தமிழர்கள், இந்துக்களுக்கு முன்னோரால் அளிக்கப்பட்ட செல்வங்களைப் பற்றி கூறும் நூல். எமது அலட்சியத்தால் பெரும்பாலானவற்றை இழந்து கொண்டு வருகிறோம் என்பதையும் இந்த புத்தகம்  கூறத்  தவறவில்லை.

முதலில் தமிழ் ஏடுகளைப்பற்றி கூறுகிறார். சாமி நாத ஐயரின் ஏடுகள் தேடும் முயற்சியை கூறி அழிந்து போன நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அபிதான சிந்தாமணி என்ற அரிய நூல்,சாரங்கி என்ற வாத்தியக்கருவி,கைரேகை கணிதம், கிருஷ்ணாபுர சிற்பம், தென்காசி ஆலயம், ந‌டராஜர் சிற்பம், ஆவுடையார் கோயில்,சித்தர்கள்,அற்புத சிந்தாமணி, சூரியனார் கோயில் மாமல்லபுரம் என ஐம்பது தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்ணிய புத்தகம்.

Monday 20 October 2014

(34) நடந்தாய் வாழி காவேரி

பயண நூல்கள் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அதுவும் நதிக்கரையில் பயணம் என்றால் சொல்ல வேண்டுமா? 'ஜீவன் லீலா ' எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். காகா கலேல்கர் இந்தியாவின் பல நதிக்கரைகள், நீர்  நிலைகள், நீர்வீழ்ச்சிகள் பற்றிய தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.

'நடந்தாய் வாழி காவேரி ' சிட்டி , தி.ஜானகிராமனால் காவேரிக்கரையில் பயணம் செய்து எழுதப்பட நூல். தலைக்காவேரி, சிவசமுத்திரம் , மைசூர், திருச்சி, கும்பகோணம் , பூம்புகார் போன்ற இடங்களில் பயணம் செய்து அந்த ஊர் கோயில்கள், முக்கிய நபர்கள் பற்றி எழுதியுள்ளார்கள். கண்ணகி, கோவலன் நடந்த பாதையால் செல்ல  நினைத்திருந்தாலும், அவர்களது முதல் பயண இடம் தலைக்காவேரி. இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கும் காவேரி நதியிக்கரையில் பயணிக்கும் ஆசை தோன்றிவிடும் என்பது உறுதி.

Saturday 16 August 2014

(33) யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு - செங்கை ஆழியான்

  புத்தகம் போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழயுத்தம் 1, ஈழயுத்தம் 2 என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1621  போர்த்துக்கேயர் சங்கிலி செகராசசேகரனை தோற்கடித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொள்கிறார்கள். இதற்கு கப்பித்தான்மேஜர் பிலிப் தே ஒலிவேறா தலைமை தாங்கினான். இன்று முத்திரைச்சந்தியில் தேவாலயம் இருக்கும் இடத்தில் இருந்த பழைய நல்லூர் கோயிலை தரைமட்டமாக்கினான். ஒலிவேறா  யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போதும் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதனால் தமது பாதுகாப்பு கருதி கோட்டை அமைப்பது என முடிவு செய்து யாழ்கட‌லுக்கு அண்மையான இடத்தை தெரிவு செய்தான். அவன் அமைத்த கோட்டை சதுர வடிவிலானது. கோயிலை உடைத்ததால் பெறப்பட்ட கற்கள் இதற்கு பய‌ன்படுத்தப்பட்டன.

1658 இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு கொமுசாறி வன்ஹூன்ஸ் என்பவன் தலைமை தாங்கினான். கோட்டையை சுற்றிவளைத்து உணவுப்ப்ரச்சினையை ஏற்படுத்தி அதன் பின்னரே யுத்தம் நடைபெற்றது. சரணடைந்த போர்த்துகேயரை எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல விடவில்லை. அவர்களை கோவாவிற்கும் பத்தேயாவிற்கும் அனுப்பினார்கள். 1662 இல் வன்ஹூன்ஸ் இலங்கை முழுவதற்கும் ஆளுனராக வந்தான்.  இவன் காலத்தில் டொன்லூயிஸ் (இவன் தான் பூதத்தம்பி எனவும் சொல்பவர்கள் உண்டு) என்பவன் தலைமையில் ஒல்லாந்தருக்கு எதிராக நடைபெறவிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஒல்லந்தர் யாழ்கோட்டையை மீளப்புதுப்பித்து கடினார்கள். இது ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இதை  1680 இல் கட்டி முடித்தனர். 1792 இல் கோட்டையின் வெளியமைப்பு கட்டி முடிக்கப்பட்டது.  கீழைத்தேசத்தில் உள்ள கோட்டைகளில் யாழ் கோட்டை யே மிகப் பலமானதும் பாதுகாப்பானதும் என சொல்லப்படுகிறது.

 1795 செப்ரெம்பர்  28 இல் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. ஒல்லாந்தர் கோட்டையை கட்டி முடித்து மூன்று வருடத்தில் இது நடந்திருக்கிறது. ஸ்ரூவார்ட் தலைமையில் ஆங்கிலேயர் முன்னேறி ஒல்லாந்தரை சரணடையுமாறு செய்தி அனுப்பினார்கள். ஒல்லாந்தர் போர்த்துக்கேயருக்கு செய்தது போல் செய்யவில்லை. அவர்களது உடமைகளுடன் யுத்தக்கைதிகளாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதிலிருந்து 1948 வரை யாழ் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருந்தது.இதன் பின் ஈழ யுத்தம் இரு தடவைக‌ள் கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றது. யாழ் கோட்டையை மையமாக வைத்து நான்கு போர்கள் நடைபெற்றுள்ளன.

யாழ் கோட்டையின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒல்லாந்தர் கட்டிய கோட்டையின் அமைப்பு விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.


(32) உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்

   முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம் காரணமாக வாரம் ஒரு தடவை மன நலக்காப்பகத்திற்கு சென்று மன நோயாளிகளிடம் கலந்து பேசுவது என முடிவு செய்கிறார்கள். மன நோய் பற்றிய சமூகத்தின் தவறான புரிதலை களையும் பொருட்டு அந்த  மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்கிறார்கள். அது தான் இப்படைப்பு. 19 காட்சிகளும் 59 மன நிலைகளும் இன்னும் தொடரும் பழமை எனும் தலைப்பில் 6 பதிவும் சில செய்திகள், சிந்தனைகள் எனும் தலைப்பில் 8 பதிவும் என பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

 இதில் பலவற்றை படிக்கும் போது எனக்கும் இதைப் போன்ற சில குணங்கள் இருக்கிறதே என யோசிக்க வைத்தது. பொதுவாக அனைவருக்கு இருக்கும் பிரச்சினை பயம் தான். பலருக்கு அதில் தான் மன நோய் ஆரம்பித்திருக்கிற‌து.
பலர்  பீடி, கஞ்சா பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனைவி மேல் சந்தேகம் வந்து  அதனால் மன நிலை பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பக்தி கூடுவதால் அம்மன் வருதலும்  மனச்சிதைவின் அறிகுறி என்கிறார். ஊரில எல்லோரும் தன்னைப் பற்றி தவறாக கதைக்கிறார்கள் என்கிறார் ஒருவர். ஒருவருக்கு காதில் ஒரு குரல் கேட்ட வண்ணம் இருக்கிற‌து.

 இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதை ஒன்று நிறையவே யோசிக்க வைத்தது.  ரோட்டில் ஒருவர் இரண்டு ரூபாய் கடன் கேட்பதிலிருந்து அவருடன் பழக்கம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அவர் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதன் பிறகான சந்திப்பில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என புரிந்து விடுகிறது. அவருடன் யாரும் இல்லை என்பதால் அவருடன் அக்கறையாக நடந்து கொள்கிறார். வீட்டிற்கு கூட்டிச்சென்று சாப்பாடு கொடுக்கிறார். இரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து அவரை மன நல‌க்காப்பகத்தில் சேர்த்தும் விடுகிறார். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, தான் செய்தது சரி தானா என்ற சந்தேகம் வருகிறது. சுதந்திரமாக வீதியில் நடமாடி சந்தோசமாக இருந்தவரை சிகிச்சை என்ற பெயரில் துன்பத்தில் தள்ளிவிட்டோமோ என நினைப்பதோடு கதை முடிகிறது. மன நலக் காப்பகத்தில் சிகிச்சைகள் மோசமான நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறது.

   இந்த புத்தகத்தை நாவல் என்று சொல்வதா அல்லது சிறுகதை என்று சொல்வதா என தெரியவில்லை. எழுத்தாள‌ர் படைப்பு என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைத்துள்ளது. எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட.

Thursday 14 August 2014

(31) கடலில் ஒரு துளி - இந்திரா பார்த்தசாரதி

      
  இந்திரா பார்த்தசாரதி இந்தியாவின் உயர்ந்த  இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருதை  'குருதிப்புனல்' என்ற நாவலுக்காகப் பெற்றுக்கொண்டவர். 'கடலில் ஒரு துளி 'எனும் இப்புத்தகம் ஒரு கட்டுரைத் தொகுதி ஆகும். தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

 தமிழ் இலக்கியம் எனும் முன் பகுதியில் திருப்பாவை, திருக்குறள், கலித்தொகை என தமிழின் தொன்மையான நூல்கள் சிலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். தமிழில் அருமையான புத்தகங்கள் நிறைய உள்ளன என்பது இப்படியான புத்தகங்கள் வாசிக்கும் போது நினைவில் வரும். முதலில் வாசிப்பதற்கு சுலபமான திருப்பாவையையாவது படிக்க வேண்டும்.   

அரவிந்த் அடிகாவின் (The White tiger ) என்ற நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்ததையொட்டி எழுதிய விமர்சனத்தில், இந்த நூலைப் படித்த போது தனக்கு 'Mother India' என்ற நூல் தான் நினைவுக்கு வந்ததாகவும் காந்தி 'Mother India' வை 'A sanitary inspector's report' என விமர்சனம் செய்ததாகவும் எழுதியுள்ளார். அரசியல்-சமூகம் சார்ந்த பகுதியில் எழுதியுள்ள விடயங்கள் முக்கியமானவை. இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றியும் எழுதத் தவறவில்லை. மொழிக்காக பிரிந்த முதல் நாடு பங்களாதேஷ் என்பது எனக்கு புதிய‌ செய்தி. 

Friday 8 August 2014

(30) சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்

       ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாக இருந்தது. அதனால் நூலகம் சென்று தேடினேன். ஜெயகாந்தனின் புத்தகங்களில் ' ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' மட்டும் அங்கு இருக்கவில்லை. அதனால் அவரின் வேறு ஏதாவது புத்தகம் வாசிப்போம் என நினைத்து நான் தேர்வு செய்தது 'சினிமாவுக்கு போன சித்தாளு' எனும் குறு நாவலை.

சினிமா மீதான மோகம் எப்படியெல்லாம் வாழ்வை சீரழிக்கிறது என்பது தான் கதை. நாவலை மெட்ராஸ் பாஷையில் எழுதியிருப்பார். வாசிக்க தொடங்கி சிறிது நேரத்தில் மொழி பிடிபட  நாவல் விறுவிறுப்பாக செல்கிறது.  செல்லமுத்துவின் மனைவி கம்சலைக்கு வாத்தியார் படம் என்றால் அப்பிடி ஒரு ஆசை. வாத்தியார் மீதும் தான். அவளுக்கு வாத்தியார் படத்தை அறிமுகப்படுத்தியது என்னவோ செல்லமுத்து தான். வாத்தியார் படப் பைத்தியம் எல்லை மீற எல்லாவற்றுக்கும் தடை போடுகிறான் செல்லமுத்து.  அந்த நேரத்தில்  'கோடியில் ஒருவன்' என்னும் வாத்தியார் படம் வருகிறது. அத்திரைப்படத்தைப்  பார்ப்பதற்காக செல்லமுத்துவிற்கு தெரியாமல் செல்லும் கம்சலை அதற்கு பின் வீட்டிற்கு வரவே இல்லை. வாழ்க்கை எப்படியோ மாறி சீரழிந்து போகிறது. செல்லமுத்துவின் பாத்திரப்படைப்பும் சிறப்பாக அமைக்கப்படிருக்கிறது. 

இதில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் வாத்தியார் என்றால் எம்.ஜி.ஆர்  தான் என்று அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்  உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட நாவல் இது. நல்ல துணிவு தேவை தான். அது ஜெயகாந்தனிடம் இல்லையா என்ன.

Thursday 7 August 2014

(29) சீனா - அண்ணன் தேசம் : சுபஸ்ரீ மோகன்


  peppers Tv யின் 'படித்ததில் பிடித்தது' நிகழ்ச்சியில் ஒருவர் இப்புத்தகத்தைக் குறிப்பிட்டார். சீனா பற்றிய அறிவும் என்னிடம் பெரிதாக இல்லை. இந்த புத்தகம்  ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என நினைத்து வாங்கினேன். சுபஸ்ரீ மோகனின் கணவருக்கு சீனாவில் வேலை மாற்றம் கிடைத்ததால் அவர்களுக்கு சீனாவில் வசிக்க நேரிடுகிற‌து. சீனாவில் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். சீனா என்ற நாட்டிற்கு தான் ஒரு ரசிகை எனக்குறிப்பிடுகிறார்.

சீன மக்கள் நேரம் தவறாதவர்கள், தேநீர்ப் பிரியர்கள், பழமையை மறக்காதவர்கள், முதியவர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறார்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகிறார். அத்துடன் சீனாவின் முக்கிய இடங்களைக் குறிப்பிடுகிறார். சீனாவின் மிகப்பிரமாண்டமான மைதானம் கட்டப்பட்ட நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். பட்டு நூல் கண்டுபிடித்த கதை, ஓவியங்கள் , பீங்கான் , சீன மாநகரங்கள்  , சீன விழாக்கள், மருத்துவம் , திருமணம் போன்றவைகள் பற்றிய அடிப்படைத்தகவல்களை புத்தகத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கியமாக சீன வானொலி நிலையம் வியக்கவைக்கிறது. தமிழ், இந்தி, பெங்காலி உட்பட 43 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு வேலை செய்யும் சீனர்கள் தமக்கு தமிழ் பெயர்களை வைத்துள்ளார்களாம்.

சீனா பற்றிய மேலோட்டமான தகவல்களைப் பெற இப்புத்தகம் உதவும்.

(28) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்




   நீல.பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவல்  திருவனந்தபுரத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. பள்ளிகொண்டபுரம் என்ற நகரமே  நாவல் முழுவதும் பரந்துள்ளது.    திருவனந்தபுரம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை எனினும் பள்ளிகொண்டபுரம்   திருவனந்தபுரத்தையே நினைவூட்டுகிறது. இதில் குறிப்பிடப்படும் பத்மநாபசாமி கோயில் பற்றிய வர்ணனைகள் அழகாக இருக்கிறது. நகர் பற்றிய வர்ணனைகள் உயிர்ப்புடன் இருக்கிறது.

இந்நாவல் அனந்த நாயரின்  பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு விக்கிரமன்தம்பியை மணந்த மனைவி கார்த்திகாயினியின்  நினைவுகளை மறக்க முடியாது வாழும் அனந்தன் நாயரின் மனவோட்டத்தை, அவர் பார்வையில் சொல்லுகின்றது இந்நாவல்.


உரிய முறையில் கிடைக்காத பதவி உயர்வைப் பெற்றுக்கொள்கிறார் அனந்தன் நாயர். தன் பதவி உயர்வுக்கு கார்த்திகாயினி மேல் விக்கிரமன்தம்பி வைத்த கண் தான் காரணம் என்று தெரிந்தும் அவரால் ஊரில் பெரிய பதவியில் இருக்கும் விக்கிரமன்தம்பியை எதிர்க்க முடியாமல் இருக்கிறது. எல்லாக் கோபங்களையும் கார்த்திகாயினி மேல் காட்ட வீட்டில் எப்போதும் சண்டை. ஒரு கட்டத்தில் கார்த்திகாயினி  விக்கிரமன்தம்பியுடன் சென்றுவிட தன் இரு பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்கிறார். விக்கிரமன்தம்பிக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு.  கார்த்திகாயினி விக்கிரமன்தம்பியுடன் சந்தோஷ‌மாக எல்லாம் வாழவில்லை.

நாவலின் இறுதியில், அனந்தன் நாயருக்கும்  மகள் மாதவிக்குட்டி, மகன் பிரபாகரன் நாயருக்கும் இடையெ நடைபெறும் உரையாடல் முக்கியமானது. மகன் பிரபாகரன் நாயர் தன் தாயின் அனைத்து  துன்பங்களுக்கும் அனந்தன் நாயரே காரணம் என்கிறான். மகள் மாதவிக்குட்டி அனந்தன் நாயருக்கு ஆதரவாக வாதாடுகிறாள். ஆரம்ப வாசிப்பில் சிறு சலிப்பை தரும் நாவல், சிறிது பக்கங்கள் தாண்டியதும் நம்மை உள்ளிளுத்துக்கொள்கிற‌து.

Tuesday 5 August 2014

(27)கந்தவேள் கோட்டம் - செங்கை ஆழியான்

  இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் பலரது எழுத்துக்கள் வாசிப்பதற்கு கடினமானதாக இருக்கும். செங்கை ஆழியான் என்ற புனைபெயரால்  அறியப்படும் க. குணராசா இந்த வகையிலிருந்து மாறி  அனைவருக்கும் புரியும்படியும், அதே வேளையில் சுவாரசியமாகவும் எழுதுபவர். வரலாறு, சமூகம், நகைச்சுவை என பல தளங்களில் எழுதி வருகிறார். இவரது நல்லூர் முருகன் ஆலய வரலாறு பற்றிய நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

நல்லூர் முருகன் ஆலயம் யாழ்ப்பாணத்தவர்களது வாழ்வுடன் பிணைந்த ஒரு ஆலயம். திருவிழா நடைபெறும் 25 நாட்களும் யாழ் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அலங்காரக் கந்தன் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் நல்லூர் முருகன் தேரில் வரும் காட்சி அப்படி அழகாக இருக்கும். நல்லூர் திருவிழாவை ஒட்டி புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், இலங்கையின் வேறு பகுதியில் வசிப்பவர்கள் என யாழ்ப்பாணத்தவர்கள்  பலரும் வருவதுண்டு. நல்லூர் ஆலயம் பற்றி பலரும் தமது அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். மனம் நிறைந்த நல்லூர் ஆலய வரலாறை கூறும் நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

இலங்கை கோட்டை இராட்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் இந்தியவின்  மலையாளப் பகுதியில் இருந்து பணிக்கனாக (யானை பழக்குபவர்கள்) பணிபுரிய வந்த வீரன் பராக்கிரமபாகுவின் தங்கையை மணம் புரிகிறான்.  அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் மூத்தவன்  சப்புமல் குமாரயா  எனப்படும் செண்பகப் பெருமாள். இவன்  பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.  பராக்கிரமபாகுவிற்கு ஆண் வாரிசு இல்லாததால் சப்புமல் குமாரனை அடுத்த வாரிசாக நினைக்கிறான். (பின் மகளுடைய மகனை அரசனாக்குகிறான் என்பது வேறு விடையம்) சப்புமல் குமாரயா யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வந்த போது அவனது அமைச்சனாக இருந்த விஜயபாகுவால் நல்லூர் ஆலயம் அழிக்கப்படுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்  புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. பின் சப்புமல் குமாரனே வேறு ஓர் இடத்தில்(முத்திரைச்சந்தி) நல்லூர் ஆலயத்தை கட்டிக் கொடுக்கிறான்.  

சப்புமல் குமாரனுடனான யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சமடைந்த அன்றைய அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் தருணம் பார்த்து மீண்டும் போர் தொடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுகிறான்.  அவனைத் தொடர்ந்து அவன் மகன் பரராசசேகரன் ஆட்சி செய்கிறான். பின் பல வருடங்களுக்கு பின் போர்த்துக்கேயர் காலத்தில் மீண்டும் நல்லூர் தரைமட்டமாக்கப்படுகிற‌து. முக்கிய சிலைகள் பாதுகாப்பாக இரகசிய இடத்தில் பேணப்படுகிறது. நல்லூர் ஆலயம் இருந்த  இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டபடுகிற‌து.  போர்த்துக்கேயர் காலத்தில் சைவ சமயம் பல சோதனைகளுக்கு உள்ளாகிறது. பலர் படிப்பு, பதவிக்காக மதம் மாறுகிறார்கள். (முக்கியமாக பிரபலமான கதிர்வேற்பிள்ளை மதம் மாறி பேதுருப்பிள்ளையாகினார், மாப்பாண முதலியார் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆனார்). பின் ஒல்லந்தர் காலத்தில் தேவாலயத்திற்கு அருகில் சிறிதாக ஆலயம் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள். கிருஸ்ணையர் என்பவர் அவ்வாலயத்தை மக்களுடன் உதவியுடன்  மீண்டும் நிறுவ  நினைக்கிறார். 

ஒல்லாந்தர் தமது தேவாலயத்திற்கு இடையூறாக இருப்பதால் குருக்கள் வளவு எனும் பழைய இடத்திலேயே ஆலயத்தை அமைக்க அனுமதிக்கின்ற‌னர்.  அங்கு இருந்த முஸ்லிம் மக்கள் எழுப்பப்படுகிறார்கள்(?). கோயில் காணியை விற்றார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மதித்த யோகியர் ஒருவரது சமாதி அங்கு இருப்பதால் அதை வணங்க அனுமதி கேட்கிறார்கள். அதற்கான அனுமதி வழங்கப்படுகிற‌து.  அது தான் இன்றைய நல்லூர் ஆலயம். இதற்கு மாப்பாண முதலியார் மகன் இரகுநாத மாப்பாண முதலியார் (இவர் சைவர்) உதவுகிறார். புதிதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு கிருஷ்ணையர் பிரதம குருக்களாகவும் இரகுநாத மாப்பாண முதலியார் தர்மகத்தாவாகவும் இருக்கிறார்கள்.(இன்றும் மாப்பண முதலியார் பரம்பரையினரே நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ளனர்). அதன் பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களும் நாவலின் இறுதியில் வருகிறது.

நல்லூர் கந்தசுவாமிகோயில் கட்டியமான‌

"ஸ்ரீமான் மகாராஜாதி ராஜய அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி ஸ்ரீ கஜவல்லி மகா வல்லி ஸமேத ஸ்ரீ சுப்ர‌மண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சிவகோத்திரோற்ப வகா இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா"

எனும்  வாக்கியத்துடன் நாவல் நிறைவடைகிறது.

நல்லூர் ஆலயத்தை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த நாவல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

Sunday 3 August 2014

(26) மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌

மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌ (சிங்களம்)
தமிழில் : சுந்தரம் சௌமியன்

  வங்காள, மலையாள மொழிபெயர்ப்பு எல்லாம் படிக்கிறோம், நமது சகோதர மொழி என அறியப்படும் சிங்கள மொழியில் ஒரு புத்தகம் கூட வாசிக்கவில்லையே என்ற உணர்வு 'மடொல் தீவு' (மடொல் தூவ) எனும் புத்த‌கத்தை நூலகத்தில் பார்க்கும் போது வருவதுண்டு. என்ன உறவு என்று தெரியவில்லை நூலகத்தில் அடிக்கடி கண்ணில் தட்டுப்படும் இந்த  'மடொல் தீவு'. அதனால் இந்த தடவை வாசிப்பது என்று முடிவு செய்தேன். மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய 'மடொல் தீவு' ஒரு சிறுவர் புதினம் ஆகும். இக்கதை இலங்கையின்  தெற்குக் கரையோரத்தில் 1890 இல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மடொல் தூவ என்பது தெற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி ஆரம்பிக்கும் கதை பின்பு உபாலியும் அவன் நண்பன் ஜின்னாவும்  மக்கள் அரவம் அற்ற மடொல் தூவவிற்கு செல்வது போன்று அமைகின்றது.  இந்தக் கதை ஒரு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சீன, ருசிய , ஜப்பானிய , ரோமேனியா, பல்கேரியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஊரில் படிப்பில் ஆர்வம் அற்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு என்ற பெயரில்  மக்களுக்கு துன்பம் விளைவித்து திரியும் உபாலி கினிவெல்ல ஒரு கட்டத்தில் ஜின்னாவுடன்  யாருக்கும் சொல்லாமல்  வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆவி, பாம்பு இருக்கும் தீவு என அறியப்படும் ஆளரவமற்ற மடொல் தூவவிற்கு துணிந்து செல்கின்றனர் இருவரும். காடாக இருந்த தீவின் ஒரு பகுதியை சிறிது சிறிதாக மாற்றி மரக்கறி பயிர் செய்து சந்தையில் விற்கிறார்கள். தீவில் ஆள் நடமாட்டம் ஆரம்பித்தவுடன் அரசாங்கம் உரிமை கோரி வருகிறது. பலர் குத்தகைக்கு நிலத்தை எடுக்க முனைகிறார்கள். ஒரு சட்டத்தரணியின் உதவியால் அத்தீவு அவர்களுக்கே குத்தகைக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் மக்களுக்கு தொல்லை புரிபவனாக இருக்கும்  உபாலி  பின் பொறுப்புமிக்கவனாக, உதவுபவனாக இருக்கிறான்.

இந்த நாவல் சிறுவர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அந்த தீவில் கொலை செய்த ஒருவனும் களவெடுத்த ஒருவனும் வேறு  தங்கியிருக்கிறார்கள்.  உபாலியும் ஊரில் மக்களுக்கு நிறைய தொல்லைகளை புரிந்திருக்கிறான். அவனும் அவனது நண்பர்களும் கள‌வெடுக்க முயன்று பிடிபட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் 'அறம்' வாசித்த எனக்கு இந்த நாவலை கொண்டாட முடியவில்லை.




Saturday 2 August 2014

(25) 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. - அசோகமித்திரன்

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. -  அசோகமித்திரன்

'1945 இல் இப்படியெல்லாம் இருந்தது..'  -  அசோகமித்திரனின் சிறுகதைத்தொகுப்பாகும். பெரும்பாலான கதைகள் அ.முத்துலிங்கம் கதைகளைப்போல் சுயசரிதைத் தன்மை கொண்டவை. தனது அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி தான் எல்லாக் கதைகளுக்கும் மையப்பொருள்' என பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலகுவான நடையில் , ரசிக்கும் வகையில் மொத்தமாக 21 கதைகள் உள்ளன. 

'கோல்கொண்டா' எனும் முதலாவது கதை டாணாஷாவின் அமைச்சர் மாதண்ணா பற்றியது. பாமினிப்பேரரசு உடைந்த போது உருவாகிய ஐந்து சிறு அரசுகளில் ஒன்று தான் கோல்கொண்டா. டாணாஷா கோல்கொண்டாவை ஆண்ட போது அவனிடம் இந்து அதிகாரிகள் பலர் வேலை செய்திருக்கிறார்கள். ராமதாசர் எனப்படும் கோபண்ணா அவர்களில் ஒருவர். அரச பணத்தை எடுத்து மலைக்கோயிலை புதுப்பித்ததால் கோபண்ணா சிறை வைக்கப்பட்டிருந்தார். அமைச்சர் மாதண்ணா  கோபண்ணாவின் தாய்மாமன் உறவு.  ஔரங்கசீப்  கோல்கொண்டா மீது படையெடுத்த போது நடைபெற்ற ஒரு சம்பவம் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் உள்ள‌ முக்கிய கதைகளாக நான் நினைப்பது கோயில் , நாய்க்கடி மற்றும் குழந்தைகள் இறக்கும் போது என்பன. 'வெள்ளை மரணங்கள்' வெள்ளைக்காரர்களின் கல்லறை பற்றியது. 'உங்கள் வயது என்ன' என்பது மனிதனின் வயதுடன் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதை. அதே போல ஜோதிடம் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதையும் இந்த புத்தகத்தில் உள்ளது. 'யார் முதலில்?' என்ற கதை 'Dog trainer' பற்றியது.

அசோகமித்திரனின் நாவல்களில் தண்ணீர் , ஒற்றன் வாசித்திருக்கிறேன். அவை பெரிதாக என்னைக் கவரவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் மிகவும் நன்றாக உள்ளன. அவரது ஏனைய கதைகளையும் வாசிக்க வேண்டும்.

Monday 28 July 2014

(24) அது அந்தக் காலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

அது அந்தக் காலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

1930 - 1940 ஆண்டு பகுதிகளை படம் பிடித்துக் காட்டும் கட்டுரைத்தொகுப்பு. எழுத்தாளருக்கு தமிழ் ஆண்டுகளில் நல்ல ஆர்வம் இருக்கிறது போல.தமிழ் ஆண்டுகள் 60  வருட காலச்சக்கரத்தை கொண்டவை. அவ்வாண்டுகளின் பெயரை சொல்லி அந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையும் சொல்கிறார்.

  ஓகஸ்ட் புரட்சியை ஒட்டி கைது செய்யப்பட்ட காந்தி சிறை வைக்கப்பட்ட புனே அகாகான் மாளிகை இன்று காந்தி நினைவு இல்லமாக இருக்கிறது.  எழுத்தாளர் அங்கு சென்ற போது, காந்தி சிறை வைக்கப்பட்ட போது அங்கு பணி செய்த ரகுநாத் என்பவருடன் கதைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். காந்தியை அங்கு கொண்டு வருவதற்கு முன்னரே ஆட்டுப்பாலுக்கும் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அங்கு தான் காந்தியின் செயலர் மகாதேவ தேசாய் மாரடைப்பால் இறந்திருக்கிறார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் மரணமும் அங்கே தான் நடந்திருக்கிறது.

கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்ட பின் சாம்பலில் இரு வலையல்கள் மாத்திரம் நிறம் மாறாமல் அப்படியே இருந்ததாகவும் முதலில் அதை காந்தி நம்ப மறுத்ததாகவும், பின் அவர் சென்று பார்த்த போது அவ்வாறே இருந்ததால் கஸ்தூரிபா சிற‌ந்த பதிவிரதை என்பதால் அவ்வாறு நடந்திருக்கலாம் என்று கருதிய காந்தி அவற்றை பத்திரமாக வைத்திருந்ததாகவும் ரகுநாத்  கூறியிருக்கிறார்.  முதலில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதை நம்பவில்லை. ஆனால் பின்னர் Robert Payne எழுதிய 'The Life and Death of Mahatma Gandhi' எனும் புத்தகத்திலும்  இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் எழுதியுள்ளார்.

   இன்னொரு கட்டுரையில் மகாத்மா காந்தி மறைந்த தினத்தன்று மக்களின் உணர்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போல் அழுதிருக்கிறார்கள். 'ரெடி.. ஸ்மைல்..' எனும் கட்டுரையில் அன்று Photo எடுப்பதில் இருந்த சுவாரசியங்களை குறிப்பிடுகிறார்.

இது தவிர அன்றைய கால சினிமா, பேனையின் பரிணாமம், ரயில் பிரயாணம், குடும்ப டாக்டர் என பல விடயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Friday 25 July 2014

(23) கடல்புரத்தில் - வண்ணநிலவன்

கடல்புரத்தில் -  வண்ணநிலவன்

கடலுடன் ஒட்டிய கிராமத்தின் கதையை சொல்லும் சிறிய நாவல் தான் 'கடல்புரத்தில்'. இதற்கு முன் இவரது 'ரெயினீஸ் ஐயர் தெரு'  வாசித்திருக்கிறேன். இரு நாவல்களுமே தமிழ் நாவல்களில் முக்கியமானவையாக கருதப்படுபவை.


கடலோர கிராம மக்களின் ஏமாற்றம், ஆசை, காதல், வன்மம் என்பவற்றை நாவலூடாக சொல்லிச் செல்கிறார். நாவலில்  பிலோமி, அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேல் , அம்மை  மரியம்மை , அண்ணன்  செபஸ்தியான், தோழி ரஞ்சி, சாமிதாஸ், வாத்தி என்பவர்கள் முக்கியமான பாத்திரங்களாக‌ இருந்த போதும் பிலோமியையும்   அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேலையும் சுற்றியே கதை செல்கிறது. குரூஸ் மிக்கேல் கோபக்காரன், கடலம்மை மீது பற்று வைத்துள்ளவன். வல்லத்தை உயிராக நினைக்கிறான். வல்லமும் வீடும் அவனை விட்டு போனதும் மனநிலை பாதிப்படைகிறான்.

 பிலோமியின் அம்மை இறந்து விடுகிறாள்.  அப்பச்சியின் மன நிலை பாதிப்படைந்து விடுகிறது. அவள்  விரும்பிய சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.  தனியே நிற்கும் பிலோமிக் குட்டி, இந்த மாற்றங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறாள்.



கிறிஸ்மஸ் தினத்தை கிராம மக்கள்  கொண்டாடும் முறையை கண்முன் கொண்டு வருகிறார் எழுத்தாளர். இந்த நாவலில் கிராமத்தின் வாழ்க்கை மட்டுமல்லாமல் மீன்பிடித்தொழிலில் ஏற்பட்ட மாற்றமும்  அதனால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் சொல்லப்படுகிறது. லாபத்தைக் மட்டும் நோக்கி மீன் பிடிக்கும் லாஞ்சுகள் வந்தபோது ஊர்க்கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதிக்கும் மனப்பான்மையும்,  போட்டியும்  முரண்பாடும் வந்து சேர்கின்றன.
ஒரு கடல் கிராமத்திற்கு வாசிப்பவர்களை அழைத்துச்செல்ல இந்த நாவல் தவறவில்லை.

Thursday 24 July 2014

(22) காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய

காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய (வங்காளம்)
தமிழில்: புவனா நடராஜன்


 'பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம்  புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான கதைகள் காட்டுடன் சம்பத்தப்பட்டவை. இல்லையெனில் ஒரு மரமாவது இருக்கும். பெரும்பாலான தமிழ் சிறுகதைகளில் உள்ளது போன்ற ஆபாசம், கொடூரம் எதுவுமற்ற சிறந்த சிறுகதைகள் இவை.

 சுஜாதாவின் 'நகரம்' பிரேம்சந்த்தின் 'லட்டு' சிறுகதைகளுக்கு ஒப்பானதாக மனத்தை நெகிழ வைத்த சிறுகதை  'கூப்பி'. தலை முடிகள் சில நரைத்த மனிதன் ஒருவனையும் அவனது ஐந்து வயது மகளையும் காட்டுப்பிரதேசத்தில் சந்திக்கிறார் எழுத்தாளர். கிராமத்த்தை விட்டு புரூலியா எனும் டவுனுக்கு சென்ற கதையை சொல்கிறான் அவன். அந்த சிறுமியின் அம்மா இறந்து இரண்டு வருடமாகிறது. அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு விறகு வெட்ட போவது கடினம் என்பதால் புரூலியா சென்று இரண்டு வருடமாக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என்று சொல்கிறான் அவன்.  புரூலியாவில் இருக்கும் அவனுக்கு தெரிந்த ஒருவன் இரவு நேரத்‌தில் அவன் வீட்டு வராந்தாவில், படுக்க மட்டும் இடம் கொடுக்கிறான். அந்த நேரத்த்தில் பஞ்சம் ஏற்படுகிறது. யாரும் பிச்சை போட விரும்பவில்லை. தங்க இடம் கொடுத்த வீட்‌டுகாரர்களும் வீட்டை காலி செய்ய சொல்லி தகராறு செய்கிறார்கள். அதனால் டவுனை விட்‌டு கிளம்பி சொந்த ஊரான தோடாங் கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதாக சொல்கிறான்.அவன் தன் மகளை தோளில் தூக்கி வைத்து நடந்து செல்வதை பார்த்தபடி இருக்கிறார் எழுத்தாளர்.
               
இது நடந்து பல நாட்களுக்கு பின் ஒரு நாள் ஏதோ ஒரு ஊரில் ஆஸ்பத்திரிக்கு முன்பாக கூட்டம் நிற்பதை பார்க்கிறார். ஒரு கூலி ஆள் படுத்து கிடந்தான். முதுகில் bandage  போட்டிருந்தார்கள். இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. டைனமைட் வைத்து பாறைகளை பிளக்கும் வேலை நடக்கும் இடம் அது. கல் தெறித்து வந்து அடித்து முதுகெலும்பை பாதித்துவிட்டது  என்று சொல்கிறார்கள். முகத்தில் சலனமில்லாமல் உட்கார்ந்தபடி கீழே கிடந்த வைக்கோலை வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த சிறுமியை கூப்பி என அடையாளம் காண்கிறார். அருகில் இருந்தவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்த போது கூலியாக அரிசி கிடைக்கும் என்பதற்காக தூர இடத்தில் இருந்து இங்கு வேலைக்கு வந்திருந்தார்கள் என்று சொல்கிறார்கள். Ambulance  வந்தது. எல்லோரும் அவனை தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். அவனிடம் இருந்து முனகல்கள் மட்டுமே வெளிப்பட்டன. அவனுக்கு பிரியமான, அவனது கர்வத்திற்கு காரணமான கூப்பியின் பெயரைக்கூட அவனால் சொல்லமுடியவில்லை. அங்கிருந்து எழுபத்தொரு மைல்கள் பயணம் செய்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வண்டியின் குலுக்கல் காரணமாகவே அவன் இறந்து போய்விடக்கூடும். 'அன்புக்குரிய மகள் கூப்பியை யாரிடம் விட்டு விட்டு போவது என்பதை தீர்மானிக்க நேரமே இல்லாமல் அவன் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தான்.' என கதையை முடித்திருப்பார். 

இது தவிர ராஜா அமானுல்லா பற்றிய 'சாலாராம் சொன்ன கதை' , பாசம், காட்டில் நடந்த கதை என்பனவும் முக்கியமானவை.
 

Monday 21 July 2014

(21) சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  எஸ்.வி.ராமகிருஷ்ணனின் 'சகுனம்' ஒரு சுவையான‌ கட்டுரைத் தொகுப்பு ஆகும். குறிப்பாக 1930 - 1960  வரையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூறுகிறார். முக்கியமான, பலருக்கு தெரியாத பல தகவல்கள் அடங்கிய புத்தகம்.

இன்று 29 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பிரிவினைக்கு முன் 11 மாகாணங்களும்  கிட்டத்தட்ட 600 சுதேச சமஸ்தானங்களும் இருந்துள்ளன. பர்மா கூட செயற்கையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்து பின் 1937 இல் தனி நாடாகியிருக்கிறது. 40 வருடமாக தடை செய்யப்பட்டிருந்த 'வந்தேமாதரம்' பாடல் சுதந்திர தினத்தன்று அவரது பாடசாலையில் பாடப்பட்ட  நிகழ்வை நினைவு கூறுகிறார்.

ஆகாசவாணி - பெயரே இனிமையான ஒன்று தான். அந்த அருமையான பெயர் எப்படி திமுகவினால் இல்லாமல் போனது என்பது வாசிக்க கஷ்டமாக தான் இருக்கிறது. 'ஆகாசவாணி' கட்டுரையில் அந்த நாளைய வானொலிகள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன.

தமிழ் நாடு, ஆந்திர பிரிவினை பற்றிய கட்டுரையில் சென்னையை ஆந்திராவுடன்  இணைக்க ஆந்திரர்கள் செய்த முயற்சி பற்றியும் அது தடுக்கப்பட்ட நிகழ்வையும் கூறுகிறார். 1-10-1953 இல் ஆந்திரம் பிறந்திருக்கிறது.இந்திய பொதுத்தேர்தலின் அறுபதாண்டு பரிமாணம் என்ற கட்டுரை  ஆரம்ப கால வாக்கு பதியும் முறை ,  தேர்தல் வரலாறு பற்றிய சிறு அறிமுகம் என்பவற்றிற்கு முக்கியமானது.

1930 இல் நேரு, சுபாஷ் போன்றவர்கள் பூரண சுய ராஜ்ஜியம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று சங்கல்ப்பம் எடுத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து 1947 இல் சுதந்திரம் கிடைக்கும் வரை வருடந்தோறும் தை 26 ஐ சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டிருக்கிற‌து. பின் அது குடியரசு தினமாகிவிட்டது.

இது தவிர பாண்டிச்சேரி பற்றிய அந்த நாள் குறிப்புகள், மதராஸ் டிராம் பற்றிய தகவல்கள் என்பன முக்கியமான‌வை ஆகும்.

 



Saturday 19 July 2014

(20) சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் 2005 வரை எழுதியவை 'நாஞ்சில் நாடன் கதைகள்' என்ற பெயரில் வெளியாகி உள்ளன.  'சூடிய பூ சூடற்க' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள புதிய  17 சிறுகதைகளைக் கொண்ட‌  இந்த புத்தகத்திற்காக  நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்தது.   உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி  போன்ற இதழ்களில் வெளியான  சிறுகதைகள் இவை. ஆரம்பத்தில் இச்சிறுகதைகளின் நாஞ்சில் நாட்டு மண்ணின்  மொழி சிறிது புரிவதற்கு கடினமாக இருந்தது. அப்பப்ப நக்கல் தொனியில் எழுதப்பட்ட நிறைய வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளன.

உணவின்மையின் கொடுமை பற்றிய 'யாம் உண்பேம்' எனும் கதை நெஞ்சை தொடுவதாக இருந்தது. கூர்க்காவின் வாழ்வு முறையை கூறும்  'தன்ராம்சிங்' கதை சிறப்பானது.  சிறு விடுப்புகள்  எடுக்காது  தொடர்ந்து பணி செய்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். அவர்களது பிரயாணக் கடினங்களை வாசிக்கும் போது கவலை வராமல் இருக்க முடியாது. 'சூடிய பூ சூடற்க' என்ற தலைப்பில் உள்ள கதை  அலுவலகம் ஒன்றில் கடை நிலை ஊழியராக பணிபுரியும் பூமிநாதன் பற்றியது. தேர்தல் முறைகேடுகளைப் பற்றிய நக்கல் நிறைந்த கதை 'தேர்தல் ஆணையத்திற்கு திறந்த வெளிக்க்கடிதம்'.
'சங்கிலிப் பூதத்தான்' கதை சுவாரசியமானது. இருபத்தேழு நாட்டார் தெய்வங்களில் ஒருவரான சங்கிலிப் பூதத்தான் சிவனிடம் பெரு நிதியம் வரமாக பெற்றதால் படும் பாடு பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இது தவிர‌  'செம்பொருள் அங்கதம்' , 'பழி கரப்பு அங்கதம்' போன்றவையும் முக்கிய கதைகள் ஆகும்.

Saturday 12 July 2014

(19) அயல்மொழி அலமாரி - இரா. ந‌டராசன்

அயல்மொழி அலமாரி -  இரா. ந‌டராசன்

இரா. ந‌டராசன் எழுதிய ஆயிஷா எனும் கதை ஏற்படுத்திய  தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அறியப்படுகிறார். இவரது நூல்களை ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  கணிதத்தின் கதை, இது யாருடைய வகுப்பறை.? மேலும் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்,  ஆயிஷா என பல புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கையில் பல தடவை கடைகளில் தேடியும் 'கணிதத்தின் கதை' தவிர்ந்த வேறு புத்தகங்களை வாங்க முடியவில்லை. அண்மையில்  'அயல்மொழி அலமாரி' என்ற புத்தகம் நூல் நிலையத்தில் கிடைத்தது.

புத்தகங்களை , சிறுகதைகளை, நாவல்களை அல்லது எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நூல்கள் எனக்கு பிடித்தவை. எஸ்.ராமகிருஸ்ணன்  எழுதிய கதாவிலாசம் 50 எழுத்தாளர்களை அவர்களது கதையூடாக அறிமுகம் செய்கிறது. எனது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவிய புத்தகங்களில் கதாவிலாசமும் ஒன்று.  அ. முத்துலிங்கத்தின் 'கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது' எனும் புத்தகத்தில் 20 எழுத்தாளர்கள் தமக்கு பிடித்த புத்தகங்களை பற்றி கூறுகிறார்கள். பாவண்ணன் எழுதிய 'ஆழத்தை அறியும் பயணம்' என்ற‌ புத்தகத்தில் இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ராமகிருஸ்ணன்  'ரயிலேறிய கிராமம்' உட்பட பல நூல்களில் சிறந்த புத்தகம், எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார். ஜெயமோகன் 'கண்ணீரைப்பின்தொடர்தல்' (இன்னும் வாசிக்கவில்லை.ஒவ்வொரு தடவை கடை செல்லும் போதும் தேடும் புத்தகம் இது.) என்ற நூலில் இந்திய மொழியில் இருக்கும்  22  சிறந்த நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த வகையில் இரா. ந‌டராசன் எழுதிய 'அயல்மொழி அலமாரி' என்ற புத்தகம் ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்கிறது.

17 வகையாக பிரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் ஒவ்வொரு வகையிலும் குறிப்பிடத்தக்க , தன்னை கவர்ந்த புத்தகத்தை அறிமுகம் செய்கிறார்.

1. கணையாழிகளின் கடவுள் நாவலை முன்வைத்து
J. R. R. Tolkien  என்பவரால் 1936 தொடக்கம் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலகட்டத்தில், 1949 வரை தனது மகன் Christopher John  இற்கு கடிதக்கதையாக எழுதப்பட்டதே The Lord of the Rings நாவல்.

2. கடவுளின் தோல்விகளை முன் மொழியும் நூல்கள்
structure of scientific revolution - Thomas S. Kuhn , The grand design - Stephen Hawking , The trouble with Physics -  Lee Smolin , The brief history of time , The theory of every thing - Stephen Hawking
போன்ற நூல்களை பற்றி குறிப்பிடுகிறார். Stephen Hawking  motor neuron disease எனப்படும் நரம்புமண்டல முடிச்சு நோய்க்கு ஆளாகி மூளையை தவிர வேறெதுவும் சரியாக இயங்காத நிலையில் சக்கர நாட்காலியில் வாழ்ந்து வருபவர். இவரது The grand design என்ற நூலை Vatican   தடை செய்துள்ளது. ஆனால் Stephen Hawking  இன் The grand design என்ற நூல் உலக  Top 10 புத்தக வரிசையை நோக்கி செல்கிறது.

3. இண்டிலீஷ் நாவல்கள்
இவை இந்தியர்களால் எழுதப்பட்ட ஆங்கில நாவல்கள். எல்லோருக்கும் தெரிந்த இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் . இன்றைய காலாகட்டத்தில்  Vikas Swarup இன்  'Q & A' அரவிந்த் அடிகாவின் 'The white tiger'  மனு ஜோசப் இன் 'serous man' ஆகிய மூன்று நாவல்களை முக்கியமாக  குறிப்பிடுகிறார். 

4. வெகுஜன எழுத்தின் வெகுமதிகள்
Dan brown இன் 'The Da Vinci Code' , 'Angels and Demons'  பற்றி குறிப்பிடுகிறார். Ken Follett எழுதிய‌ 'Fall of Giants'  என்ற நாவல் இருபதாம் நூற்றாண்டின் வரலாறை பற்றி மூன்று பாகங்களாக எழுதப்பட இருக்கும் நாவலின் முதல் பாகம் ஆகும். முதலாம் உலக யுத்தம் வரை இந்த நாவலில் வந்துள்ளது.

5. கணக்குப் பிசாசுகள் 
The Calculus Wars , The man who knew infinity , The man who loved only number ஆகியவை கணித பித்தர்களை பற்றிய மூன்று முக்கிய நூல்கள்.

 6. புத்தகம் பிரிப்போம்...சிறகை விரிப்போம்.
பல்வேறு நபர்கள் தங்களை செதுக்கிய நூலாக குறிப்பிடும் Richard Bach எழுதிய‌  'jonathan livingston seagull' முக்கியமானது.
'குழந்தை பருவ லட்சியங்களை அடைந்து காட்டுவது எப்படி' என்ற தலைப்பின் நடாத்திய உரையான‌ Randy Pausch இன் 'Last lecture' கட்டாயம் வாசிக்க வேண்டும்.

7. உங்களுக்கு இதயம் இருக்கிறதா?
The diary of anne frank, Stolen voices போன்றவை யுத்தத்தின் கோரத்தை உலகுக்கு காட்டிய முக்கிய பதிவுகள். Stolen voices 13 குழந்தைகளின் யுத்த நாட்குறிப்பு தொகுப்பு ஆகும்.

8.  பயாலஜிஸ்ட்  Vs கடவுளிஸ்ட்
பரிமாணவியலுக்கான தற்கால ஆதாரங்களை அடுக்கும்  Richard Dawkins இன்  'The Greatest show on Earth' முக்கிய நூல் ஆகும்.

9. குருவாசகம்
 வாத்தியாராக‌ இருப்பதின் தலைமை சுகத்தை பக்கம் பக்கமாக பட்டியலிடும் Teaching as leadership மற்றும் There are no children , Savage in equalities, children at war , To Sir with Love, Dead poets' Society, Up the down stair case , Catching up , The black board jungle , Teacher Man என்பவற்றை  ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள் என குறிப்பிடுகிறார். கெலன் கெல்லர் தனது ஆசிரியர் பற்றி எழுதிய நூலான 'Teacher - Anne Sulivan ' முக்கியமானது. 

10. Made in China
சீனாவின் முன்னேற்றத்துக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய முக்கிய  நூல்கள்  The Genius of china , சீனாவின் மூவாயிரம் வருட அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சீன அறிவியல் கடந்து வந்த சோதனைகளையும் பட்டியலிடும் 'The man who loved china" கலாச்சார புரட்சி அறிவியல் புரட்சியாக எப்படி மாறிய‌து என்பதை சொல்லும் 'The cultural history of modern science in China' என்பன ஆகும்.

11. மக்களிசம்
ஓவிய ஆளுமைகளைப் பற்றிய அத்தியாயம் இது. 

12. தொலைக்கப்பட்ட சிறார்களும் கண்டடைந்த தேசமும் 
 தென் சூடான் பற்றி அறிய உதவும் நூல்களான‌ Season of Migration to the North , A hare in the elephant trunk , What is the what என்பவை முக்கியமானவை.

13. முப்பது வகை பட்டினி
கருப்பின அமெரிக்க அடிமை முறை பற்றிய ஆய்வான‌ 'Time on the cross', மூன்றாம் உலக நாடுகளின் வறுமை நிலைக்கான காரணங்களை கூறும் 'The escape from hunger' என்பவற்றை பற்றி எழுதியுள்ளார்.

14. அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்
Steve Jobs பற்றி தெரிந்து கொள்ள உதவும் புத்தகங்க‌ள்  iCon , Steve Job The exclusive biography என்பன. கணினி  வர்த்தக உலகை அறிய உதவும் புத்தகங்களில் முக்கியமானவை The world is flat , The presentation secrets of Steve jobs என்பன.

15. விஞ்ஞானி ராமனின் நோபல் அவலங்கள்
 சி.வி ராமன் நோபல் பரிசு பெறும் போது சந்தித்த பிரச்சினைகள் உட்பட அவரைப் பற்றிய பல விடயங்களை இவ் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

16. சந்தைப்பொருளாதாரத்தின் மாயச்சரக்கு
'Harry potter'  நாவலின் விற்பனையில் நடைபெற்ற வியாபார யுக்திகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

17. காந்திக்காக காத்திருக்காதே
சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய நாவலான 'சாத்தானின் கவிதைகளை' பற்றி  எழுதியுள்ளார்.



Friday 11 July 2014

(18) தண்ணீர் - அசோகமித்திரன்

 தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீருக்காக மக்கள் படும் அவலத்தை பற்றி பேசிய நாவல். நாவல் எழுதி பல வருடங்கள் சென்றாலும் இன்றும் இப்பிரச்சினை மக்களை விட்டு நீங்கவில்லை. வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கவே சாத்தியம் இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை முகம் கொடுக்காதவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. வாழ் நாளில் ஒரு தடவையாவது தண்ணீருக்காக காத்திருந்த கணங்கள் இல்லாத மனிதர்கள் மிகக்குறைவே. அதுவும் இந்தியா  போன்ற நாடுகளில் நகரங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தண்ணீர் லொறிக்காக  குடத்துடன் காத்திருந்து மக்கள் படும் துன்பம் தமிழ் படங்களில் நகைச்சுவையாகவே காட்டப்படிருந்தாலும்,  அதன் துன்பம் மிக அதிகமே. சென்னை அண்ணாசாலையில் ஒரு தடவை தங்கியிருந்த சமயம், மஞ்சள் நிறத்தில் தண்ணீர் இருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கையில் நீர்ப்பிரச்சினை இந்தியா அளவிற்கு இல்லை என்றாலும், முன்னறிவித்தலுடன் நீர் வெட்டுகள் வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் இடம்பெறுவதுண்டு.தொடர்மாடிகளில் இருப்பவர்கள் இதனால் பாதிப்படைவது குறைவு என்றாலும் நீர்த்தொட்டி இல்லாத (water tank) தனி வீடுகளில் வசிப்பவர்கள் பாதிப்படைவதுண்டு. பத்து வருடங்களுக்கு முன், எனக்கும்  அவ்வாறான ஒரு அனுபவம் ஏற்பட்டதால் அதன் வலியை என்னால் உணரக்கூடியதாகவே இருக்கிறது.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் இரு பெண்களின் வாழ்க்கையை பற்றி பேசுவதனூடாக  அவ்விடத்தின் தண்ணீர் அவலத்தை பேசுகிறது. ஜமுனா, சாயா எனும் இரு சகோதரிகள் ஒரு வீட்டின் மேற்பகுதியில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.இருவரின் வாழ்க்கையுமே துன்பமானது தான். ஜமுனாவை பாஸ்கர்ராவ் என்பவன் சினிமா ஆசை காட்டி ஏமாற்றுகிறான். சாயாவின் குழந்தை அவர்களது அம்மாவுடன் இருக்கிறது. அம்மாவோ புத்தி சுவாதீனம் உள்ளவர். தனது சொல்லை கேட்கவில்லை என்பதால் பாட்டிக்கும் அவர்களில் வெறுப்பு. அதற்கும் மேல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் பிரச்சினை.  ஜமுனா குடத்துடன் சென்று நீர் எடுத்து வருகிறாள். அது ஒன்றும் அவ்வளவு லேசான காரியம் இல்லை. வீட்டில் குழாய்க்கிணறு அடிக்க அதிலும் துர் நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்" என்று அவர்கள் கதைத்துக்கொள்கிறார்கள். நாவலில் வரும் டீச்சர் அம்மா கதா பாத்திரமும் முக்கியமானது.

குழாய்களில் தண்ணீர் வராதபோது நகராட்சியில் இருந்து வருபவர்கள்  தெருவைக்  அகழ்ந்து போட்டுவிட்டு போவது அதில் கார், லாரி போன்றவை சிக்குவது,  பள்ளம் வெட்டும்போது கழிவு நீர்க்குழாயைச் சேதப்படுத்திவிட்டு செல்வது போன்ற விடயங்கள் நாவலில் மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கிற‌து.

இந் நாவல் தண்ணீர் அவலத்தை பற்றி பேசிய முக்கிய நாவலாக கொள்ளப்படுகிறது.

Saturday 5 July 2014

(17) ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

 ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இந்த புத்தகத்தை முதல் தடவை  வாசிப்பவர்களுக்கு  கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரே சமயம் கொண்ட நாவல்’ என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலின் முதல் பகுதியில் நாவலின் ஆசிரியர்,  ஜே.ஜே உடனான தனது அனுபவங்கள், பிறர் மூலம் தெரிந்து கொண்ட விடயங்களை குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதி ஜே.ஜே இன் நாட்குறிப்புகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் ஜே.ஜே யின் புத்தகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜோசப் ஜேம்ஸ்   1960 ஜனவரி 5 ஆம் திகதி, தனது 39 ஆவது வயதில், ஆல்பெர் கம்யு விபத்தில் மாண்டதற்கு மறு நாள் இறந்தான்." இது தான் நாவலின் முதலாவது வரி. இந்த நாவலுக்கு ஆழ்ந்த வாசிப்பு தேவை என முதலே அறிந்து இருந்ததால், ஆல்பெர் கம்யு (Albert Camus) யார் என தேடிப்பார்க்க வேண்டியது  கட்டாயம். எழுத்தாளர்,தத்துவவியலாளர்  French-Algerian நோபல் பரிசு வெற்றியாளர். Albert Camus போலவே ஜே.ஜே யும் கால்பந்தாட்டம் விளையாடுபவனாகவும் நாடகங்களில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருக்கிறான்.

ஜே.ஜே எனப்படும் ஜோசப் ஜேம்ஸ் எனும் மலையாள எழுத்தாளனைப் பற்றிய நினைவுகளாக கதை ஆரம்பிக்கிறது. (ஜே.ஜே என்பது ஒரு கற்பனையான பாத்திரமே) புத்தக ஆசிரியர் ஒரு தடவை மட்டுமே நேரில் ஜே.ஜே யை சந்தித்து இருக்கிறார். அப்போதும் அவன் " சிவகாமி அம்மாள் சபதத்தை நிறைவேற்றி விட்டாரா " என தமிழ் எழுத்தாளர்களை கிண்டலடிப்பது மட்டும் தான் அவனுடனான நேரடி அனுபவம். ஆனால் ஜே.ஜே யின் ரசிகனான ஆசிரியர் தொலைவில் நின்றே அவனை பல தடவைகள் ரசிக்கிறார்.  ஜே.ஜே யின் மறைவிற்கு பின்னர் அவனை குறித்த நாவல் ஒன்றினை எழுத அவனது  மனைவி, நண்பர்கள்,அவனோடு எதிர்மறை கருத்து கொண்டவர்கள், அவனது சமகால எழுத்தாளர்கள் என பலரை  சந்தித்து ஜே ஜே நினைவுகளை நம்மோடு பகிர்கிறார் எழுத்தாளர்.

ஜே.ஜே யை புரிந்து கொள்ள நாட்குறிப்பு பகுதி முக்கியம்.நாவலில் முல்லைக்கல் மாதவன், அரவிந்தாட்ச மேனன் , சம்பத்  போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஜே.ஜே யின் குண நலன்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தான் சரியாக நடக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறான். பலருக்கு அவனை பிடிக்கிறது. பல எதிரிகளையும் சம்பாதிக்கிறான். இயற்கையை மிகவும் ரசிக்கிறான், கூர்ந்து கவனிப்பவனாக இருக்கிறான்.

ஆழமான கருத்துக்கள் கொண்ட நாவல். மறு வாசிப்பு செய்யும் போது ஜே.ஜே பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.




Friday 27 June 2014

(16) மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

மதில்கள்வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்:  சுரா

பஷீரின் 'மதில்கள்' 38 பக்கங்கள் மாத்திரமே கொண்ட குறு நாவல் ஆகும். எழுத்தாளர் பஷீரே கதையின் நாயகனாக வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட  பஷீருக்கு நாராயணி என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஆண், பெண் சிறையை பிரிக்க ஒரு மதிலே இருக்கிறது.மதிலுக்கு அந்த பக்கம் இருக்கும் பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியும் பஷீரும் கதைத்துக்கொள்கிறார்கள். முதலில் சிறையில் இருந்து தப்பி செல்ல நினைக்கும் பஷீர் நாராயணியுடன் கதைக்க தொடங்கிய பின் அந்த எண்ணத்தை கைவிடுகிறார். சுவருக்கு அப்பால் கம்பு தெரிந்தால் மதிலுக்கு அப்பால் நாராயணி நிற்பதாக அர்த்தம். இருவரும் வார்த்தைகளை பரிமாறுகிறார்கள். இருவரும் சந்தித்து கொள்ள வைத்தியசாலை மட்டுமே ஒரு இடமாக இருப்பதால், ஒரு குறித்த நாளை சொல்லி அன்று எப்படியாவது அங்கு வருமாறு பஷீரிடம் நாராயணி சொல்கிறாள். இருவரும் சந்திக்கும் போது ,  நாராயணி  முகத்தில் மச்சம் இருப்பதை வைத்தும்  பஷீர் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பதைக்கொண்டும்   ஒருவரை ஒருவர் அடையாளம் காண  நினைக்கிறார்கள். பஷீரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அன்று எதிர்பாராமல் அவர் சிறையில் இருந்து விடுதலையடைகிறார். சிறையிலிருந்து விடுதலையாக யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர் சொல்கிறார்.  வை  ஷூட் ஐ பி ஃப்ரீ?ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?

விடுதலை, யாருக்கு வேண்டும் இந்த விடுதலை



பஷீர் சிறையை விட்டு வரமுன் ஒரு ரோஜாவை பறித்துக்கொள்கிறார். ஜெயிலின் கதவு பின்னால் மூடிக்கொள்கிறது.

இது உண்மையில் நடந்த கதையா தெரியவில்லை. பஷீர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என படித்திருக்கிறேன்.


நான் வாசித்த புத்தகத்தை  சுரா மொழிபெயர்த்திருக்கிறார். இணையத்தில் கிடைத்த படத்தில் சுகுமாரன் மொழிபெயர்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நாவல் மம்முட்டி நடிப்பில், ஆடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. Poster இல் இருக்கும் மலையாளம் விளங்கவில்லை. ஆனால் கையில் ரோஜா செடியுடன் இருப்பதால் மதில்கள் பட  Poster ஆக தான் இருக்க வேண்டும்.



 

Thursday 26 June 2014

(15) பால்யகால சகி - பஷீர்

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்: குளச்சல் மு. யூசுப் 


மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் பஷீரின் நாவல்கள் வாசிப்பதற்கு எளிமையானவை. பஷீரின் இளம் பருவ தோழி பற்றிய கதையாகவே இந்த நாவல் சொல்லப்படுகிறது. வெறும் 80 பக்கங்கள் மாத்திரமே கொண்ட "பால்யகால சகி" நாவல் தரும் உணர்வுகளோ அதிகம். பால்யகால சகி என்ற பெயரிலேயே ஒரு கவர்ச்சி ஒட்டிக்கொண்டு விடுகிறது. 

 மஜீதுவும் சுகறாவும்  நண்பர்கள். அவர்களது சிறு வயது நட்பு என்னவோ மோதலில் தான் தொடங்கியது. சுகறாவின் வீட்டில் அருகில் இருக்கும் மாமரத்தில் இருந்து பழம் விழும் சத்தம் கேட்டு அவள் வருவதற்கு முன்னரே மஜீது எடுத்து அதை சாப்பிட தொடங்கியிருப்பான். மஜீது மேல் கோபம் அதிகரித்து ஒரு நாளில் தனது நகங்களால் அவனை பிராய்ந்து விட்டாள்.  அதற்கு அவன் சற்று பயப்படவே அதை அவள் தொடரவும் செய்கிறாள். அவளது நகத்தை வெட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த மஜீது "சிலரு சும்மா என்னை பறண்டவும் நுள்ளவும் செய்யுதாங்க. அவங்களுக்கு இது ஒரு சுகம். இனி நான் மரிச்சு போனா அவுங்க சொல்லுவாங்களா இருக்கும், அந்த பாவப்பட்ட மஜீது இருந்தா ஒரு நுள்ளாவது குடுக்கலாமேன்னு" என்ற வசனம் மூலம் நகத்துக்கு ஒரு முடிவு கட்டிவிடுகிறான்.

சுகறா படிப்பில் கெட்டிக்காரி. மஜீது படிப்பில் மொக்கு. ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்டதற்கு 'கொஞ்சம் பெரிய ஒன்று ' என்று சொல்லி  அதுவே அவனது பெயராகவும் போகிறது. மஜீதின் அப்பா அந்த ஊரின் பணக்காரர்களில் ஒருவர். சுகறாவின் அப்பாவோ பாக்கு விற்கும் ஏழை. சுகறாவின் அப்பா இறந்து விட அவளது படிப்பும் நின்றுவிடுகிறது. வீட்டில் ஏற்படும் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு செல்லும் மஜீது பத்து வருடங்களின் பின் சுகறாவை திருமணம் செய்யும் ஆசையில் திரும்பிவர வீட்டில் எல்லாமே தலைகீழாகி இருக்கிறது. மஜீது வீட்டிலோ கடன் சுமை கூடி கஷ்டப்படுகிறார்கள். சுகறாவோ இரண்டாம் தாரமாக‌, திருமணம் செய்து சென்று விடுகிறாள்.அங்கு அவளுக்கு சித்திரவதை தான்.


பால்ய கால நண்பர்கள் இருவரும் நீண்ட காலத்துக்கு பின் சந்தித்து கொள்கிறார்கள். நிறைய கதைத்துக்கொள்கிறார்கள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காகவும் சுகறாவை திருமணம் செய்வதற்காகவும் மஜீது ஏதாவது உழைக்க வேண்டும் என எண்ணி வீட்டை விட்டு கிளம்புகிறான். கிளம்பும் வேளையில் சுகறா ஏதோ சொல்ல வந்தும் சொல்லமுடியாமல் போய்விடுகிறது.

பல இடங்கள் அலைந்து ஒரு வேலை பெற்று வீட்டிற்கு  பணம் அனுப்பும் மஜீதுவுக்கு விபத்து ஒன்றில் ஒரு கால் போய்விடுகிறது. அதன் பின் அந்த வேலையில் தொடர முடியாததால் வேறு வேலை தேடி அலைகிறான். இறுதியில் எச்சில் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்து செய்யும் வேலை தானே. அப்போது சுகறா இறந்த செய்தியை தாங்கிய அவனது அம்மாவின் கடிதம் வருகிறது. வீட்டை விட்டு கிள‌ம்பும் போது அவள் கடைசியாக சொல்ல வந்தது என்ன என்ற வினாவுடன் நாவல் நிறைவடைகிறது.


இந்த நாவல் மம்முட்டி நடிப்பில் திரைப்படமாக வந்திருக்கிறது. பார்க்க வேண்டும்.
 






Monday 16 June 2014

(14) 1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி

1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி (வ‌ங்காளம்)
தமிழில் -  சு.கிருஷ்ணமூர்த்தி


நக்ஸலைட் எழுச்சி கல்கத்தாவில் மேலோங்கி இருந்த காலத்தை பின்னணியாக கொண்ட கதை. பொலிஸ் ஆவணங்களில் 1084 என்ற சடல எண்ணாக அடையாளப்படுத்தப்பட்ட ப்ரதீ என்ற இளைஞனைப் பற்றிய அவனது அம்மாவின் நினைவுகள் தான் நாவல். ப்ரதீ இறந்தும் குடும்ப கௌரவத்திற்காக அவனது நினைவை கூட அண்டவிடாது வாழும் அவனது அப்பா, அக்காக்கள்,அண்ணா, அண்ணி போன்றோருடன் அவனது தாய் சுஜாதாவுக்கு பிரியம் எதுவும் பெரிதாக இல்லை. ப்ரதீயின் நண்பனின் அம்மா, அவனது நண்பி என பலருடன்  கதைப்பதன் மூலம் ப்ரதீ பற்றி  மேலும் அறிந்து கொள்ள முயல்கிறார்.

நாவலில் மகாசுவேதா தேவி, மேல்தட்டு மக்களின் பொருளாசை, ஆழமற்ற கலையார்வத்தை பார்த்து பழக வேண்டியுள்ள ஒரு புத்திசாலிப் பெண்ணின் அவதியை சித்தரிக்கிறார்.வங்க தேச விடுதலைக்காக கண்ணிர் விடும் வங்கக்கவிஞன் கல்கத்தாவில் சுட்டு கொல்லப்படும் இளைஞர்களுக்காக ஒரு மணித்துளியும் செலவளிக்கமாட்டார்கள் என சாடுகிறார். இரத்தபலி மூலமேனும் சமுதாய மாசுகளை களைய நினைக்கும் பெரும்பாலான அரசை போலவே வங்க அரசும் நடந்து கொள்கிறது. பல்வேறு அரசியல் சூழலில் பாலஸ்தீனத்தில், இலங்கையில், அயர்லாந்தில் என அரசின் வன்மத்திற்கு பலியான  மகன்களுக்கும்  அவர்களது தாய்க்கும் இடையிலான குறியீடாக இந்த நாவலை சொல்லலாம்.

"ஆரோக்கிய நிகேதனம்" வாசித்த பின் வங்க நாவல்களில் ஒரு பிரியம். அதன் தொடர்ச்சியாக வாசித்த இந்த நாவலும் என்னை ஏமாற்றவில்லை.

ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் வங்கத்தில் 12 பதிப்புகள் கண்டுள்ளது. இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் "ஹஜார் சௌராஸிகீமா" (Hazaar Chaurasi Ki Maa) என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.







13. எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முஹம்மது பஷீர்

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முஹம்மது பஷீர்
(மலையாளம்) 
தமிழ் மொழிபெயர்ப்பு  - குளச்சல் மு. யூசுப் 


குஞ்ஞுபாத்துமாவின் அம்மா நிறைய வெற்றிலை போடுவார். தரையில் கால் பதிக்காமல் மிதியடி மீது நடப்பார்.அந்த மிதியடிகள் யானைக்கொம்பால் செய்யப்பட்டவை.குஞ்ஞுபாத்துமாவிற்கு அவளது அம்மா அடிக்கடி சொல்லும் வசனம்

"ஒனக்கெ உப்பப்பாக்கொரு ஆனெயிருந்துது. ஒரு பெரீய கொம்பானெ" . 


பழம் பெருமை பேசி வாழும்  நபர்களில் ஒருவர்  தான் அவளது அம்மா குஞ்ஞுதாச்சும்மாவும்.

முஸ்லியார்கள் இரவுப் பிரசங்கத்தில் சொல்லிக் கொடுப்பது போல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எழுத்து அறிவு கிடையாது. கிரந்தங்கள் அரபு மொழியில் இருக்கின்றன. முஸ்லியார்கள் அரபு தெரிந்தவர்கள். எனவே அவர்கள் சொல்வதை  கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். அவர்களை பொறுத்தவரை இபுலீஸ் எனும் பகைவன் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். இபுலீஸ் தலையில் ஏறி அமர்ந்து கொள்வான் என்று தொப்பி அணிந்து கொள்கிறார்கள்.

குஞ்ஞுபாத்துமாவின் அப்பா வழக்கில் அனைத்து சொத்துக்களையும் இழந்துவிட , அவர்கள் பழைய செங்கல்லாலான வீட்டிற்கு குடியேறுகிறார்கள். பழைய வீட்டில் இருந்து அவளது அம்மா அந்த மிதியடிகளை மட்டும் கொண்டுவந்துவிடுகிறார். "ஆனை மக்காருக்கு செல்ல மவளாக்கும்" என்று சொல்லி எந்த வேலையும் செய்யாது வெற்றிலை மட்டும் போட்டு மிதியடியில் நடந்து திரியும் அம்மாவுடன் அப்பாவுக்கு அடிக்கடி சண்டை. வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர்  நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து  ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய்  குடிசை வீட்டில்  தம்மை வாழ கூட்டி வந்தது அவளை துன்புறுத்துகிறது.

பக்கத்து வீட்டிற்கு குடிவரும் நிஸார் அகமதுவுக்கும் குஞ்ஞுபாத்துமாவுக்கும் காதல். அவர்களுக்கு திருமணம் நடக்கிற‌து. குஞ்ஞுபாத்துமா வீட்டிற்கு வரும்போது அவளது அம்மா இரு கைகளையும் தலையில் வைத்துகொண்டு உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேலி செய்யும்  அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டு கண்ணிருடன் சொல்கிறார்

"ஒனக்ககெ உப்பப்பாக்கெ ...பெரீய கொம்பானே ...குழியானேயாம் புள்ளே. குழியானேயாம்!

Wednesday 4 June 2014

12. ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌

ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌ (வங்காளி)
தமிழ் மொழியாக்கம் : த. நா . குமாரஸ்வாமி


'ஆரோக்கிய நிகேதனம்'  என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய் யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவர்கள் நாடி பிடித்து ஆயுள் சொல்லக்கூடியவர்கள், ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுபவர்கள். அந்த காலத்தில் பிரபலமகி வந்து கொண்டிருந்த ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம்  தொடர்பாக  மக்களது அபிப்பிராயங்கள், பரம்பரையாக மருத்துவத்தை தந்தையிடம் பயிலும் போது எடுக்கும் சிரத்தை, ஆங்கில மருத்துவத்தில் கொண்டுள்ள மோகம், ஆங்கில மருத்துவம் படிப்படியாக மக்களிடம் அறிகுகமாகிய முறை என பலவற்றை பற்றி நாவல் சொல்கிற‌து.

டாக்டர் பிரத்யோத் ஆங்கில மருத்துவர். ஜீவன் மாஷாய் நாடி பிடித்து நோயளியின் நாளை குறிப்பதை அறிந்து கோபம் கொள்கிறார். வைத்தியம் என்பது நோயில் இருந்து நிவாரணம் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர இறுதி நாளை பற்றி தெரிவிக்கும் முறை அல்ல என்பது அவர் வாதம். ஜீவன் மாஷாய் இன்னும் சில மாதங்களே வாழுவார்கள் என நாள் குறித்த நோயாளிகளை தான் காப்பாற்றுவதாக சவால் விடுகிறார். தாந்து கோஷால்  என்பவன் வயிற்று புண் காரணமாக மருந்து எடுப்பதற்கு ஜீவன் மாஷாயிடம் வருகிறான்.அவனது உணவுப்பழக்கம் மாறாத வரை அவனது நோய் மாறாது என சொல்லி அவனுக்கு நாள் குறிக்கிறார். இதனால் தாந்து கோபம் கொண்டு பிரத்யோத்திடம் சென்று காட்டுகிறான். பிரத்யோத் அவனது வருத்தத்தை மாற்றுவதாக சவால் விட்டு மருத்துவமனையிலேயே அவனை வைத்து பார்க்கிறார். ஆனால் உணவுப்பழக்கத்தை மாற்றமுடியாத அவன் மருத்துவமனையில் உணவை திருடி சாப்பிட்டு மரணமடைகிறான்.

ஜீவன் மாஷாய் இளமையில் ஆங்கில மருத்துவம் படிக்கவே விரும்புகிறார். ஆனால் காதல் பிரச்சினையில் ஏற்பட்ட கைக்கலப்பு காரணமாக அவரால் அப்படிப்பை தொடரமுடியவில்லை. அவர் காதலித்த பெண் மஞ்சரியும் நாட்டு வைத்தியனை மணக்க விருப்பம் இல்லாமல் வேறு ஒருவணை திருமணம் செய்கிறாள். அதன் பின் அவர் ஆத்தர்- பௌ என்பவளை திருமணம் செய்கிறார். ஆனால் அவர்களது உற‌வும் திருப்திகரமாக இருக்கவில்லை. ஆத்தர்- பௌ எப்போது ஏதாவது திட்டியபடியே இருக்கிறார். தனது மகனுக்கும் நோயின் போது நாடி பிடித்து பார்த்து, இறந்துவிடுவான் என்று சொன்னதால் கல் நெஞ்சக்காரன் என நினைக்கிறாள். ஊரிலும் அதைப்பற்றி கதைக்கிறார்கள். ஏழைகள், வயதானவர்கள்   ஜீவன் மாஷாயிடமே தமது நோயை காட்ட வருகிறார்கள். அவர் யாரிடமும் கறாராக பணம் வசூலிப்பதில்லை. நோயாளிகளிடம் இருந்து வர வேண்டிய கடனே பல ஆயிரங்கள் இருக்கிறது.  சில வருத்தங்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது என சொல்லி நோயாளிகளை அனுப்பிவிடுகிறார்.

பிரத்யோத் டாக்டரின் மனைவிக்கு நோய் வந்த போது, அவர்  ஜீவன் மாஷாயிடம் உதவி கேட்கிறார். இரத்த பரிசோதனை முடிவு அடுத்த நாளே வரும் என்பதால் நாடி பிடித்து என்ன வருத்தம் என்பதை மட்டும் கண்டு கூறும்படி கேட்கிறார். அதை வைத்து மனைவிக்கு மருத்துவம் பார்க்கிறார். நாடி பிடித்து அவர் சொன்ன உடல் வெப்பனிலை கருவியில் காட்டிய வாசிப்புக்கு சரியாக இருப்பது அவருக்கு ஆச்சரியம் அழைக்கிறது. ஜீவன் மாஷாய் நாடி பார்த்து சொல்வதை நேரில் கேட்ட போது அவருக்கு ஜீவன் மாஷாய் மீது மதிப்பு வருகிறது.


சசாங்கனின் மனைவி, ரானா, ஜீவன் மாஷாயின் குரு ரங்லால், சசி என பல முக்கிய கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.


ஆயுர்வேதம் மரணத்தை பிங்கலநிற கூந்தலுடன் துயரங்களிலிருந்து விடுதலை தர வரும் தேவதையாக, ‘பிங்கல கேசினி’யாகப் பார்க்கிறது. வாழ்வின்  இறுதியில் மரணத்திற்கு அடிபணிந்தே ஆக  வேண்டும். வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப்படுத்தலாம். ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை வெல்ல  முடியாது. மரணத்தைக் கண்டுவிட்ட பிறகு மனநிம்மதியுடன்  அதை எதிர் கொள்வதே முக்கியமானது. இதையே ஜீவன் மாஷாய் மருத்துவத்தில் குறிப்புகள் மூலம், நேரடியாக சொல்கிறார். மதியின் அம்மாவிடம் 'கங்கை போய்வரலாமே'  என்பது அவர் மரணத்தை நினைவு கொள்ள கொடுத்த குறிப்பு. இதை உணர்ந்த போது பிரத்யோத்திற்கும் அவர் மீது மதிப்பு வருகிறது.

ஆரோக்கிய நிகேதனம் முக்கியமான இந்திய   நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.











Saturday 17 May 2014

11. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் கதை -  சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் வரலாறூடாக ஒரு கிராமத்தின் நகரமயமாக்கலை சொன்ன நாவல் என்று சொல்லலாம். பொதுவாக சினிமாவோ அல்லது நாவலோ ஒரு மனிதனை மையமாக வைத்து தான் உருவாக்கப்படிருக்கும். அந்த வகையில் இந்த நாவலை வித்தியாசமானது என்று சொல்லலாம். இது தான் நான் வாசிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் நாவல். சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சிலகுறிப்புகள்' வாசிப்பதற்கு எளிமையானது அல்ல என்று  கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால்  'ஒரு புளியமரத்தின் கதை ' வாசிப்பதற்கு எளிமையாகவும் அப்பப்போ நகைச்சுவையாகவும் இருப்ப‌தால் நாவல் எனக்கு பிடித்துவிட்டது.

ஆரம்பத்தில் தாமோதர ஆசான் புளியமரத்தை பற்றிய கதையை சொல்கிறார். எழுத்தாளர் தாமோதர ஆசானிடம் கதை கேட்கும் சிறுவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆசான் கிளை ஒன்றை வெட்டியதன் மூலம் அந்த புளியமரம் வெட்டப்படுவதை தான் தடுத்ததை பெருமையாக சொல்கிறார்.  பூரம் திருநாள் மகாராஜா வருடத்திற்கு இருதடவை கன்னியாகுமரி வந்து நீராடுவார். அதற்கான ஏற்பாடுகள் ஆறுமாதத்திற்கு முதலே தொடங்கிவிடும். ஒரு தடவை அவர் வரும் போது புளியமர குட்டையில் இருந்த அசுத்த நீரால் துர் நாற்றம் வீசியதாகவும், அதனால் கோபம் கொண்ட மகாராஜா  ஏற்பாடுகளுக்கு பொறுப்பான முத்தம்பெருமாள் என்பவரை வேலையை விட்டு நீக்கியதாகவும்,  ஒரு வாரம் கழித்து திரும்பி செல்லும் போது மீண்டும் அதே பாதையால் தான் மகாராஜா போவார் என்று தீர்மானித்ததால் புளியங்குளத்தை வற்ற வைத்து மண்ணிட்டு நிரப்ப எப்படி திட்டம் போடப்பட்டது என்றும் ஆசான் சொல்கிறார். பல வருடங்களுக்கு முன் நடந்த புளியமர
ம் தொடர்பான கதைகள் தாமோதர ஆசானால் சொல்லப்படுகிறது.

அதன் பின்னான கதை எழுத்தாளர் பார்வையில் சொல்லப்படுகிறது. புளியங்குளத்திற்கு அருகில் இருந்த காற்றாடி மரத்தோப்பு பூங்காக மாறிய கதை அதில் ஒன்று. பூங்காவின் கதை ஒரு கிண்டலுன் அமைக்கப்படிருக்கும்.

காதர், தாமுவுக்கு இடையிலான பிரச்சினைகள் நாவலின் முக்கிய இடங்களில் ஒன்று. காதர் தனது வியாபாரத்தை பெருக்கிய முறையும் தாமுவின் குண நலமும் கேலி ஒலிக்கும் தொனியில் சொல்லப்பட்டிருக்கிறது.  அந்த மக்களுக்கு சுதந்திர தியாகி என்றால் அது தாமு தான். தாமு பற்றி மிகைப்படுத்தப்பட்ட கதையையே அங்குள்ள மக்கள் கதைக்கிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது அவ்வளவாக தாமுவுக்கு பிடிக்கவில்லை, இனி தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறான். தாமு, காதர், திருவிதாங்கூர் நேசன் பத்திரகையில் எழுதும் இசக்கி, முனிசிப்பல் தலைவர் ஜோசப், கடலைத்தாத்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள். 


புளியமரத்தின் தாய்த்தடியிலிருந்து கிளைகள்  வெடித்து செல்லும் இடத்தில் கத்தியால் ஒரு பள்ளம் தோண்டி, நாட்டு வைத்தியரிடம் பெறப்பட்ட பாதரசம் கலந்த விஷம் விடப்படுகிறது. அதன் மூலம் புளியமரத்தில் ஏற்பட்ட மாற்றம்  ஐந்து வசனங்களில் தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் மனதை அப்படி ஏதோ போல ஆக்கிவிடும். புளியமரம் காய்ந்து கருகி பட்டுவிடும். புளியமரம் அழிந்த பின்னரும்  இன்றுவரை  அந்த இடம் புளியமர ஜங்ஷன் என்ற‌ பெயரால் தான் அழைக்கப்படுகிறது.

தமிழில் எழுதப்பட்ட முக்கியமா நாவல்களில் ஒன்றாக இந் நாவல் கருதப்படுகிற‌து. இந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ,ஹீப்ரு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நாவலின் முன்னுரை, மதிப்புரைகளில் கூறப்பட்டுள்ளது.

Thursday 15 May 2014

10. பொன் விலங்கு - நா.பார்த்தசாரதி

பொன் விலங்கு  -  நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் 'அரவிந்தன்' போல பொன்விலங்கு சத்தியமூர்த்தியும் கொள்கைகளும் இலட்சியமும் உள்ளவன். அம்மா, அப்பா இரண்டு தங்கைகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். தந்தை ஆசிரியர் என்பதால் சத்திய மூர்த்தி ஆசிரியராவதை அவர் விரும்பவில்லை. ஆசிரியராக இருந்தால் கடைசி வரை ஏழையாகவே வாழ வேண்டும் என்பது அவர் வாதம். ஆசிரியராகும் இலட்சியம் உள்ள சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் என்ற ஊரில் உள்ள கல்லூரிக்கு ஆசிரியராக செல்கிறான். நேர்முகத்தேர்வில் குறுந்தொகையில் உள்ள ' யாயும் ஞாயும் யார் ஆகியரோ' என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லும் சத்திய மூர்த்தியை கல்லூரி அதிபர் பூபதிக்கும் அவரது மகள் பாரதிக்கும்  பிடித்துவிடுகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் நேருக்கு நேர் பேசும் தன்மை கல்லூரி முதல்வருக்கு பிடிக்கவில்லை. அத்துடன் அவன் படித்த கல்லூரி அரசியல் புரட்சிகளுக்கு பெயர் போனது என்பதால் சத்திய மூர்த்தியும் ஏதாவது புரட்சி செய்து தமது  கல்லூரியை கெடுத்துவிடுவான் என்று நினைக்கிறார். பல இழுபாடுகளுக்கு பின் சத்திய மூர்த்தி மல்லிகை பந்தல் கல்லூரியிலே விரிவுரையாளராகிறான்.

அங்கு அவனது மாணவியாக இருக்கும் பாரதிக்கு சத்தியமூர்த்தி மேல் காதல். ஆனால் சத்தியமூர்த்தியும்   நடனமாடும் மோகினியும் காதலிக்கிறார்கள். அத்துடன் சத்தியமூர்த்தி நண்பனாகவரும் cartoonist குமரப்பன், கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன் என கதை நகருகிறது. இறுதியில் மோகினி இறந்து போக, சத்தியமூர்த்தி படிப்பதற்காக வெளிநாடு செல்வதோடு நாவல் நிறைவடைகிறது.

நாவலில் பிடித்த சில இடங்களை குறிப்பிட வேண்டும்.

சத்தியமூர்த்தி நேர்முகபரீட்சையில் விளக்கும் பாடல் பிரசித்தமானது. சினிமாவில் பாடல் வந்துவிட்டால் பிரபலமாகிவிடும் தானே. அதற்கு கொடுக்கப்படும் விளக்கம் நன்றாக உள்ளது.

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

' செம் புலப் பெயல் நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'
 செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகிவிடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்துவிட்டனவே .

நாவலில் நவநீத கவி என்பவரது கவிதை பல இடங்களில் நினைவு கூற‌ப்படுகிறது. நவநீதகவி யாரென்று தெரியவில்லை. பொன்விலங்கில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கவிதைகள், கவிதை பற்றி தெரியாத எனக்கே பிடித்துவிட்டது.

"பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசாதிருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே "


"முன்னும் பின்னும் நினைவாகி – அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி – நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுக்கை யதன்மேலே – முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க – மனம்
அங்கும் இங்கும் அலைபாயும்"


முதல் நாள் பாடமெடுக்கும் சத்தியமூர்த்தி " she walks in beauty" என்ற ஆங்கில கவிதையை பாரதியாரின் "அழகுத்தெய்வம்" என்ற கவிதையுடன் ஒப்பிட்டு சொல்கிறான். "she walks in beauty" என்ற வரி  நாவலில் பல இடங்களில் வருகிறது.



Wednesday 14 May 2014

9. வெட்டுப்புலி - தமிழ்மகன்

 வெட்டுப்புலி -  தமிழ்மகன்


'வெட்டு புலி' தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் புலியை வெட்டுவது போன்ற ஒரு  படம் இருக்கும். அது தனது தாத்தா வழி உறவினர் என்று தெரிந்து கொள்ளும் ஒருவன் தனது அமெரிக்க நண்பர்களுடன் அது பற்றிய மேலதிக தகவல்களை தேடி பயணிக்கிறான்.  வெட்டுப்புலி தீப்பெட்டி பற்றிய தேடலினூடு  1930 இல் இருந்து 2010 வரையான திராவிட அரசியல், திராவிட கட்சி சார்ந்த குடும்பங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி நாவலில் தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமண ரெட்டி திராவிட சார்புள்ளவராக இருந்தாலும் தேவை ஏற்படின் சமரசம் செய்து கொள்பவராக இருப்பவர் என்பதால் குடும்பத்தில் பிரச்சினை பெரிதாக இல்லை.  தியாகராசன், நடராஜன் போன்றவர்கள் கொள்கை பிடிவாதம் உள்ளவர்கள் . இதனால் வீட்டில் எப்போதும் பிரச்சினை தான். பிரச்சினை அதிகரிக்க ஒரு கட்டத்தில் தியாகராஜனின் மனைவி  தனது கையில் அதிமுக சின்னத்தை பச்சை குத்தி கொள்கிறாள்.பெரும்பாலான திராவிடக் கட்சிக்காரர் மேடையில் பேசும் தமது கொள்கைகளை தமது வீட்டிலே கூட அமுல் படுத்த முடிவதில்லை. கடவுள் இல்லை, தாலி இல்லை என்பார்கள், ஆனால் அவர்களது வீட்டில் மனைவி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போற‌வராக இருப்பார். வீட்டு கல்யாணம் மந்திரம் சொல்லி  தாலி கட்டி தான் நடக்கும். தியாகராசன் குடும்பம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கடைசியில் அவன் சாமியாரிடம் சென்றுவிடுகிறான். மனைவியும் மகிழ்ச்சி அடைகிறாள். அவனது சகோதரன், அவன் அதிமுகவில் சேராமல் சாமியாரிடம் சென்றது எவ்வளவோ பரவாயில்லை என்று நிம்மதி அடைகிறான்.

பிராமண எதிர்ப்பு, சாதி பிரச்சினைகள் பெரியாரின் போராட்டம், சினிமா, இலங்கை தமிழர் பிரச்சினை என பலவற்றை பற்றி ஓரளவு விரிவான சித்திரத்தை நாவல் தருகிறது.

முக்கியமாக சினிமா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் புராண படங்களே எடுக்கப்பட்டன. ஒரே கதையை பலர் எடுப்பதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சினிமாவில் திராவிடக் கட்சியின் தாக்கம் அதிகம் இருக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்கும் ஆசையில் சினிமா  பற்றி தெரிந்து கொள்ள சென்னை வருகிறார். பின் தனது ஆசையை மாற்றி ஊரில் ஒரு சினிமா கொட்டகை போட்டு திருப்தி அடைந்துவிடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா எடுத்து அழிந்து போகிறான்.

 நடராசனுக்கும், கிருஷ்ணபிரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. நடராசனுக்கு கிருஷ்ணபிரியா மீது விருப்பம் இருந்தும் அவன் கொள்கை காரணமாக அவளை திருமணம் செய்யவில்லை. நடராசனின் கல்லுரியில் திராவிட  ஆதரவு அதிகமாக உள்ளது. அவன் ஈழ ஆதரவு உள்ளவனாக இருக்கிறான். இறுதியில் அதுவே அவனுக்கு துயராகிறது.

 2010 இல் புதிய தலைமுறை இளைஞர்கள் நியூயோக்கில் உரையாயாடுவதோடு நாவல் நிறைவடைகிறது. திராவிடக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். திராவிடக் கட்சி சார்பான நாவல் என்றும் இதை கூற முடியாது. ஆனால் திராவிடக் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தம்மை ஏதோ ஒரு கதாபாத்திரத்துடன் பொருத்தி பார்க்க முடியும்.

Tuesday 6 May 2014

8. இனியவை இனியவை இறையன்பு

இனியவை இனியவை இறையன்பு


 இறையன்பு ஐ.ஏ.எஸ்  எழுதிய  கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவரது நண்பர் ஆவுடையப்பன் தொகுத்த புத்தகமே "இனியவை இனியவை இறையன்பு". peppers TV யில் புத்தகம் பற்றிய இறையன்புவின் கலந்துரையாடல் பார்த்த பின் அவர் எழுதிய புத்தகம் படித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்தது. அண்மையில் நூலகத்தில் இறையன்பு என்ற பெயருடன் இப்புத்தகத்தை கண்டவுடன் எடுத்து வந்து வாசித்தேன்.

சிந்தனை உலகம், ரசனை உலகம், சித்திரவிசித்திரங்கள்,படைப்ப்புலகம் என்ற பிரிவுகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் வாசிக்க எளிமையாக உள்ளது.சிறிய கதைகளை சொல்வதன் மூலமோ சம்பவங்களை சொல்வதன் மூலமோ கட்டுரையை மேலும் சுவாரசியமாக்கும் திறன் அவரிடம் உள்ளது.

பொதுவாக மொட்டை கடிதங்கள் எனப்படும் முகவரியிடாத கடிதங்களை தாம் பெரிதாக எடுத்துக்கொளவதில்லை என்றும் ஆனால் சில கடிதங்கள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு, கள்ள சாராயம் காய்ச்சுவது பற்றி ஒருவர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டிருந்தார். நேரடியாக  விடயத்தை சொல்லாமல் 'பானை தன் சுயசரிதை கூறல்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கடிதம் வித்தியாசமாக நகைச்சுவை உணர்வுமிக்கதாக இருந்தது.

அதே போல கையெழுத்து பற்றிய  கட்டுரையில் சொன்ன கதையும் சிரிப்பை வரவைத்தது. நவீன ஓவிய கண்காட்சியின் போது ஒருவர் தனது ஓவிய‌த்தை மட்டும் ஏன் தலைகீழாக மாட்டியிருப்பதாக கேட்டிருக்கிறார். அதற்கு  அவர் தனக்கு எது சரியான பக்கம் என்று குழப்பமாக இருந்ததால்  கையெழுத்து நேராக உள்ளவாறு  பார்த்து  மாட்டியதாக கூற அந்த ஓவியர் தான் எப்போதும் தலைகீழாக தான் கையெழுத்து போடுவதாக கூறியிருக்கிறார்.

படைப்புலகம் என்னும் பகுதியில் தொகுக்கப்படுள்ள கதைகளில் 'தலைமாணாக்கன்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அக்கதை துரோணர், ஏகலைவன் உறவை பற்றியது . ஏகலைவனின் கட்டைவிரலை குரு தட்சணையாகயாக பெற்றுக்கொண்டதால் துரோணருக்கு ஏற்பட்ட தீராத பழியை போக்கும் வகையில் அக்கதையை வடிவமைத்திருப்பார்.

 இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும்  பணிவாக நடந்துகொள்ளும் இறையன்பு  சிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் தான்.






Wednesday 23 April 2014

7. குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

இவரது " நா.பாவின் இலக்கியக்கதைகள் " எனும் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். அது போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து முடிக்கும் பக்குவமும் எனக்கு இல்லை என்பதோடு  அவை தொடர்ச்சியான வாசிப்புக்கு உரியவையும் இல்லை என்பதால் சில கதைகளை மாத்திரம் இதுவரை படித்துள்ளேன். அது தவிர  நா.பார்த்தசாரதியின் புத்தகங்களை வாசித்தது இல்லை. அண்மையில் பலர் 'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன்விலங்கு' பற்றி குறிப்பிட்டதால், சரி வாசித்து தான் பார்ப்போம் என்று எடுத்த புத்தகம் தான் குறிஞ்சி மலர்.

நா.பா ஆரம்பத்திலேயே திலகவதியார் - கலிப்பகையார் கதையின் ஒரு வடிவம் தான் கதை என்று  சொல்லிவிடுகிறார்.
பூரணியின் தந்தை  தமிழில் புலமை உள்ளவர். கல்லூரி செல்லாவிட்டாலும் பூரணி தந்தையிடம் இருந்து தமிழ் அறிவை பெற்றுக்கொள்கிறாள். சிறுவயதிலேயே தாயை இழந்த பூரணி  பின் தந்தையையும் இழந்துவிட திர நாவுக்கரசு, சம்பந்தன்,மங்கையர்க்கரசி என்னும் மூன்று இளைய சகோதரர்களை பார்க்கவேண்டிய பொறுப்பும் வந்துவிடுகிறது. பண பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற இலட்சியம் உள்ளவள். மங்களேஸ்வரி என்ற பெண்மணியின் நட்பு கிடைக்கிறது, அதன் மூலம் மங்கையர் கழகத்தில் தமிழ் வகுப்பு எடுக்கும் வேலையும் கிடைக்கிற‌து. தந்தையின் புத்தக மீள் பிர‌சுர  விடயமாக அரவிந்தன் என்பவனது நட்பு கிடைக்கிறது. அது பின் காதலாகிறது.

அரவிந்தன் இலட்சியங்கள் நிறைந்தவன். திருக்குறள் மீது பெரு விருப்பு உள்ளவன்.  ஏழைகள் மீது அக்கறை உள்ளவன்.அநாதையான அவன் மீனாட்சிசுந்தரம் என்பவரது பதிப்பகத்தில் வேலை பார்க்கிறான். மீனாட்சிசுந்தரமும் அரவிந்தன் மேல் அன்புள்ளவர். அரவிந்தனுக்கு முருகானந்தம் என்னும் நண்பன் உள்ளான். பூரணி, அரவிந்தன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு நிலவுகிறது. பூரணி சிறந்த பேச்சாளராகி இலங்கை, கல்கத்தா சென்று சொற்பொழிவாற்றுகிறாள். அவளது பேச்சாற்றலை வைத்து நிதி திரட்டி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறார்கள்.அரசியலும் வருகிறது. பர்மாக்காரர் வில்லனாக வருகிறார். நா.பா அரசியலில் உள்ள அழுக்குகளையும் ஒரளவு எழுதியுள்ளர். திலகவதியார் - கலிப்பகையார் கதை என்பதால் முடிவு ம் அதே போல் தான். திலகவதிக்கு  கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க முடிவாகும். ஆனால் திருமணத்திற்கு முன்பே நாட்டுக்காக போரில் ஈடுபட்ட கலிப்பகையார் இறந்து விடுவார். திலகவதியார் திருமணம் செய்யாமல் சேவையில் தனது வாழ்வை அர்ப்பணிப்பார். பூரணியும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

 இதில் நான் ரசித்த இடங்கள் பல உண்டு. இலங்கை பற்றிவரும் இடங்கள். இடங்கள் எல்லாம் சரியாகவே கொடுத்திருப்பார். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காட்டியது போல சம்பந்தம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. எந்த இடத்தில் இருந்து எங்கு போவது போன்ற ஒழுங்குகள், எப்படி பிரயாணம் செய்வது போன்றவை எல்லாம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நா.பா இலங்கை வந்திருப்பார் போல. அது போல பூரணி திருப்பரங்குன்றத்தில் ரசிக்கும் நீல நிறத்தில் ஒளிரும் "ஓம்" அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.

இன்றைய காலத்திற்கு இந்த கதை பல இடங்களில் எரிச்சலை வரவைக்க வாய்ப்புள்ளது. தியாகத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் பொருந்தும். இருந்த போதும் பள்ளிக்கூட நாட்களில் வாசிப்பதற்கு  ஒரு சிறந்த நாவல் என்பதே என் கருத்து.  'பொன்விலங்கு' வாசிக்க வேண்டும்.


Sunday 20 April 2014

6. ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 - சத்யஜித் ரே

 ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 -   சத்யஜித் ரே
( கேங்டாக்கில் வந்த கஷ்டம் )

சத்யஜித் ரே திரையுலகில் பெயர் போனவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா போன்ற திரைப்படங்கள் போதும் அவரது திறைமயை பேச. அதே போல அவர் சிறந்த எழுத்தாளர் என்றும் படித்து இருக்கிறேன். பெலுடாவின் சாகசங்கள்  என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியான "கேங்டாக்கில் வந்த கஷ்டம்"  என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். வங்காள மொழியில் வெளியான இக்கதையை வீ.பா.கணேசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

துப்பறியும் கதை என்பது பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும். கோடை விடுமுறையை களிப்பதற்காக தபேஷும் ஃபெலுடாவும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்  செல்கிறார்கள். அங்கே நடைபெற்ற விபத்து ஒன்றை ஃபெலுடா துப்பறிகிறார். விபத்தில் இறந்த ஷெல்வான்கர் என்பவர் யமன்தக் எனும் ஒன்பது தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய பௌத்த சமய கடவுளின் சிலை வத்திருக்கிறார். விபத்துடன் அச்சிலையும் காணாமல் போய்விடுகிறது. அது விபத்தா அல்லது கொலையா? அதன் பின்னணி என்ன என ஃபெலுடா  துப்பறிகிறார். கதை விறுவிறுப்பாக செல்கிறது.



Thursday 17 April 2014

5. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

பாவண்ணனின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. துங்கபத்திரை நதியும் ஜோக் அருவியும் அவரது எழுத்துகளில் ஒன்றிப்போயிருக்கும். வாழ் நாளில் ஒரு தடவை ஜோக் அருவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இவரது "துங்கபத்திரை" என்ற புத்தகம் வாசித்ததில் இருந்து தொடங்கிவிட்டது. அதற்கு பின்  காகா கலேல்கர் எழுதிய "ஜீவன் லீலா" என்ற புத்தகத்தை ஜோக் பற்றி அறிவதற்காகவே வாசித்தேன். கும்கி படத்தில் ஜோக் அருவியின்  அழகை பார்த்த பின் அந்த ஆசை இன்னும் கூடிவிட்டது.

அண்மையில் பாவண்ணன் எழுதிய "ஆழத்தை அறியும் பயணம்" வாசித்தேன். தனது சில அனுபவங்களை  எழுதி அதனுடன் பொருந்தும் சிறுகதைகளை விபரித்து உள்ளார். கிட்டதட்ட எஸ்.ராமகிருஸ்ணனின் "கதாவிலாசம் " போல.
இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள். 43 எழுத்தாளர்களை ஓரளவு புரிந்து கொண்ட திருப்தி கிடைக்கிறது. வேற்று மொழிக் கதைகளில் தாகூர், ஜயதேவன், கே.ஏ.அப்பாஸ், சரத்சந்தர்,தூமகேது, வில்லியம் பாக்னர் போன்ற 10 எழுத்தாளர்களின் சிறுகதையை குறிப்பிட்டுள்ளார்.வாசிக்கும் போதே அவர்களது சிறுகதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. முக்கியமாக ஐல்ஸ் ஐக்கிங்கரின்  'ரகசியக் கடிதம்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த 43 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் "அக்கா", தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" தவிர வேறு எதையும் நான் வாசித்ததில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கல்கி,  நா. பார்த்தசாரதி  போன்றவர்களை மட்டுமே நான் ஓரளவு படித்துள்ளேன். இன்னும் படிக்க நிறைய சிற‌ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்  என்பதை இந்த புத்தகம் ஞாபகம் ஊட்டி சென்றுள்ளது.