Friday 31 August 2012

பிடித்த 10 தமிழ் திரைப்படங்கள்

சினிமா என்பது எப்போதுமே எனக்கு பிடித்த ஒன்று. பொதுவாக பெரும்பாலான தமிழர்களுடன் சினிமா  இரண்டற கலந்திருக்கும்.சினிமா பற்றி பேசாத அல்லது பார்க்காத நாளை கண்டுபிடிப்பதே சிரமம். எப்ப என்ன திரைப்படம் வெளிவரும், யாருடைய பாடல் ....இப்படி எல்லா விடயங்களும் தெரிந்திருப்பார்கள். எனக்கு சினிமா பற்றிய அறிவு பெரிதாக இல்லாத போதும் சினிமா பார்ப்பது அல்லது அதை பற்றிய புத்தகங்கள் படிப்பது என்பது மிகவும் பிடித்தது.எனக்கு பிடித்த திரைப்படங்கள்  என்ன என யோசித்து பார்த்தால் நிறைய திரைப்படங்கள் மனதுக்குள் வந்து செல்கிறது. இருந்த போதும் எனது All time favorite திரைப்படம் எனின் அது 'மௌனராகம்' தான்.  தற்போது நினைவில் வரும் 10 பிடித்த திரைப்படங்கள் .

1. மௌனராகம்

மணிரத்னம் படம். இப்படத்தை பற்றி தனி பதிவு எழுதலாம். அவ்வளவு பிடிக்கும். கார்த்திக் ரேவதி இணையும்காட்சியாகட்டும் மோகன் ரேவதி காட்சியாகட்டும் இரண்டுமே இரண்டு விதமாக நன்றாக இருக்கும். இதில் எனக்கு கூடுதலான பிடிப்பு மோகன் ரேவதி இணைந்து நடிக்கும் பகுதி தான்.  கார்த்திக் வரும் பகுதி இல்லாமல்  இருந்திருக்கலாம் என்றும்  யோசிப்பதுண்டு.ரேவதியின் சுட்டித்தனம் படத்துக்கு  இன்னொரு பலம். படத்தில்  இளைய ராஜாவின் பின்னணி இசை பின்னும். பாடல்களும் ஒவ்வொரு முத்துக்கள் தான்.

2. ரோஜா


மணிரத்னம் திரைப்படம். கதை சத்தியவான் சாவித்திரி கதையின் நவீன வடிவம் என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். அதை அழகியலுடன் சொன்னது தான் ம‌ணிரத்னம் குழுவின் சிறப்பு. மணிரத்னம் கதாநாயகியை எப்போதுமே அழகாக காட்டுவார் ஒரு தேவதை போல.இதில் மதுபாலா ஒரு தேவதை. அரவிந்தசாமி நாயகன். ரஹ்மான் இசை.
பாடல்கள் படத்திற்கு பெரும் பலம்.

3. இதயத்தை திருடாதே


இதுவும் மணிரத்னம் படம். தெலுங்குத் திரைப்படமான கீதாஞ்சலியின் தமிழ் வடிவம். நாகர்ஜுன் , கிரிஜா நடித்திருப்பார்கள். இதன் நாயகி கிரிஜாவும் சுட்டித்தனமான பெண். இருவருமே எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நோயாளர்கள். இருவரும் காதலிப்பார்கள். இது தான் கதை. இளையராஜாவின் இசை. எழுத வார்த்தை இல்லை. ஒளிப்பதிவு பட‌த்திற்கு பெரிய பலம். நகைச்சுவை என்ற‌ பெயரில் செருகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் தான் படத்தின் பலவீனம். கிரிஜா  ஒரு சில படங்களில் தான்  நடித்திருக்கிறார்.வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அழகான
திறமையான நடிகை.

4. அன்பே சிவம்
கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண்  நடிப்பில் உருவான படம். திரைக்கதை கமலஹாசன். வசனம் மதன். இயக்கம் சுந்தர்.சி. வித்யாசாகர் இசை.
அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்ட படம். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் பிடித்த படம். மனித நேயம், கடவுள்,கம்யூனிசம் என எல்லாமும் உண்டு. கமலுக்கும் மாதவனுக்கும் இடையிலான உரையாடல்கள் முக்கியமானவை. மனம் ஒரு மாதிரியாக இருந்தால் நான் அன்பே சிவம் பார்ப்பது தான் வழக்கம்.


5. தில்லுமுல்லு
ரஜனிகாந்த் படம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜனி தான். பாட்ஷா, படையப்பா,முத்து, ஆறிலிருந்து அறுபது வரை .....இப்படி இப்படி நிறைய பிடித்த படம் இருந்தாலும் தில்லு முல்லு அதன் நகைச்சுவையில் முன்னுக்கு நிற்கிறது. படத்திற்கு தேங்காய் சிறீனிவாசன் ஒரு பலம். குறிப்பாக interview நடக்கும் காட்சி பிரமாதம்.



6. எங்கேயும் எப்போதும்
சமீபத்திய படங்களில் மிகவும் பிடித்தது. பேருந்து விபத்து பற்றிய விழிப்புணர்வு கொடுத்திருப்பார்கள். M. சரவணன் இயக்கம். இரு காதல் ஜோடிகள் ஒன்று  ஜெய், அஞ்சலி  மற்றயது சர்வானந்த், அனன்யா . நால்வரும் பேருந்தில்
பயணிக்கின்றனர்.  இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்து அப்பிடியே கண்ணுக்கு முன் நடப்பது போல இருக்கும். படம் பார்த்த பின் நெடுந்தூர பயணம் என்றால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு.

7.  சதிலீலாவதி

பாலு மகேந்திராவின் படம். கிரேசி மோகனுடைய வசனம்.கமல், கோவை சரளா இணைந்து நடித்திருப்பார்கள். அப்பிடி ஒரு நகைச்சுவை.குண்டாக‌ இருக்கும்  கல்பனா,  ஹீராவுடன் செல்லும் தன் கணவன் ரமேஷ் அரவிந்தை  தன் வழிக்கு கொண்டு வருவது தான்கதை.





8.   உண்மை


மம்முட்டியின் படம். பொதுவாக மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி  நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிறந்த கதையமைப்பு உடையதாக இருக்கும்.  'உண்மை ' திரைப்படம் மலையாலப் படத்தின் dabbing ஆக தான் இருக்க வேண்டும். ஒரு கொலையை துப்பறிபவராக மம்முட்டி நடித்திருப்பார். பாடல்களே இல்லாத படம். ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதை உடைய படம்.



9. மைக்கல் மதன காம ராஜன்

கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த படம். கிரேசி மோகன் வசனம். சிறு வயதில் பிரிந்த  ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகள் இறுதியில் சேருவது தான் கதை. அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள். நாயகிகள் ஊர்வசி, குஷ்பு மற்றும் ரூபினி . ஊர்வசி கலக்கி இருப்பார். இளைய ராஜாவின் இசை வழமை போல கலக்கல்.




10. மறுபடியும்


ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த சாமி, ரோகினி நடித்த திரைப்படம். பாலுமகேந்திராவின் இயக்கம். ரேவதியின் கணவர் நிழல்கள் ரவிக்கு ரோகினியுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரேவதி  தன்னுடைய வழியை எப்படி அமைக்கிறார் என்பது தான் கதை. அரவிந்த சாமி ரேவதியின் நண்பராக நடித்திருப்பார். இளைய ராஜா இசையமைத்த  படம்.


இது தவிர ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி,  அன்புள்ள ரஜினிகாந்த் ......என்று சில பிடித்த படங்களும்  உண்டு.




Sunday 26 August 2012

தேசாந்திரி

நான் வாசிக்க வேண்டும் என் அதிகமாக விரும்பிய எஸ்.ரா வின் புத்தகம் தேசாந்திரி. ஆனால் இலங்கையில் அப்புத்தகத்தை பெறுவது கஸ்ரமாகவே இருந்தது. எப்ப கடைக்கு போனாலும் தேசாந்திரியை தேடி தோல்வியடைவததே என் வேலை. இந்த தடவை இன்ப அதிர்ச்சியாக தேசாந்திரியை கண்டடைந்தேன்.அப்பிடி ஒரு சந்தோசம்.வீட்டிற்கு வந்ததுமே வாசிக்க தொடங்கிவிட்டேன்.ஆனால் ஒரே மூச்சாக வாசிக்க விரும்பவில்லை. அணுஅணுவாக ரசித்து நீண்ட‌ நாள் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் எவ்வளவு ரசித்தாலும் இரு நாட்களில் முடிந்துவிட்டது. மீண்டும் வாசிக்க வேண்டும்.எஸ்.ரா தான் பயணம் செய்த ஊர்களில் பெற்ற அனுபவங்கள் மற்றும் அவ் இடங்களின் வரலாறு  போன்றவற்றை  சுவைபட எழுதியுள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சென்றது, நல்லதங்காள் கிணறு பார்க்க சென்றது,சமண படுகைகள் பார்க்க சென்றது,காந்தள் மலர் பாக்க சென்றது என தன் எழுத்து மூலம் அவ் இடங்களுக்கு எம்மையும் அழைத்து செல்கிறார்.
நாகப்பட்டினம் சென்ற அனுபவத்தை அழகாக எழுதியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பார்க்க வரும் உள் நாட்டினரை விட வெளி நாட்டினரே அதிகம் என்று கூறி சிற்பங்களில் நமக்கு இருக்கும் அக்கறையின்மை பற்றி ஆதங்கப்படுகிறார்.  ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமானதாக ஆரம்பத்தில் பல கவிஞர்களின் கவிதைகள் அழகூட்டுகின்றன. இப்படி  41 கட்டுரைகள்.

வாசிக்கும் போதே அவ்விடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அத்தோடு நமக்கு முன்னால் இருக்கும் எவ்வளவு அழகான விடயங்களை நாம் கவனிப்பதே இல்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது. 

Tuesday 21 August 2012

வால்காவிலிருந்து கங்கை வரை


மனித  நாகரிக‌  தோற்றம், வளர்ச்சி போன்றவற்றை தெரிந்து கொள்ள பலராலும் பரிந்துறைக்கப்படுவது  ராகுல் சங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற புத்தகமே.1942 இல் சிறையில் இருந்த போது ராகுல்ஜியால் எழுதப்பட்ட  இந்த நூலை,  1945 இல் பர்மாவில் யுத்த‌க்கைதியாக இருந்த கண.முத்தையா என்பவர் ராகுல்ஜியின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1949  இல்  முதற்பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து    27 பதிப்புகள் (27ம் பதிப்பு 2007) கண்ட அரிய நூலாக கொள்ளப்படுகிறது. 20 கதைகளை உள்ளடக்கிய இப்புத்தகத்தின் ஒவ்வொரு கதைகளும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள்.


நூலைப்பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் குறிப்பிடும் போது ஒவ்வொரு கதைக்கும் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளார்.

 நிஷா, திவா, அமிதாஸ்வன், புருகூதன் ஆகிய முதல் நான்கு கதைகளும் சரித்திரத்திற்கு முந்திய காலமான கி.மு 6000 தொடக்கம் 2500 வரையான சமூதாயத்தை பற்றி சொல்கின்றன. இந்து ஐரோப்பிய , இந்து ஈரானிய மொழிகளையும் அவற்றின் மூலங்களையும் ஆராய்ந்து கற்பனையும் கலந்து எழுதப்பட்டதே  இந் நான்கு கதைகளும்.

அடுத்த நான்கு கதைகளான புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்பன வேதம், மகாபாரதம், பௌத்த கிரந்தமான அட்டகதா போன்றவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. கி.மு 2000 முதல் கி.மு 700 வரையான சமுதாய வளர்ச்சியை இக்கதைகள் சித்தரிக்கின்றன.

 கி.மு 490 ஐ சித்தரிக்கும் ஒன்பதாவது கதையான 'பந்துலமல்லன்' பௌத்த நூல்களில் உள்ள செய்திகளை கொண்டு எழுதப்பட்டது. பத்தாவது நாகதத்தன் கதைக்கு சாணாக்கியனின் அர்த்த சாத்திரமும் கிரேக்கர்களின் யாத்திரைக் குறிப்புகளும் ஆதாரமாக உள்ளன. அடுத்த கதை அஸ்வகோஷ் எழுதிய புத்தசரித்திரத்தையும் சௌந்தரியானத்தையும் ஆதாரமாக கொண்ட  'பிரபா'. அடுத்தது சுபர்ணயௌதேயன் என்ற குப்த கால கதை. ரகுவம்சம், சாகுந்தலம், குமாரசம்பவம் போன்றவை இதற்கு ஆதாரமாக உள்ளது. பதின்மூன்றாவது  துர்முகன் என்ற கதைக்கு ஹர்ஷ சரிதிரமும் காதம்பரியும் சீன யாதிரிகரான இத்சிங்கின் யாத்திரை வரலாறும் ஆதாரமாக உள்ளது. கி.பி 1200 ஐ கதைக்காலமாக சக்கரபாணி கதையின் அஸ்திவாரத்தை நைடதத்திலும், அக்கால சிலாசாசனன்ஹ்களிலும் காணலாம்.  12 முதல் 20 வரையான நூற்றாண்டை சேர்ந்த அடுத்த ஆறு கதைகளுக்கும் தெளிவான சரித்திர ஆதாரம் ஊள்ளது.

 புருதானன் என்ற கதையில் தான் முதலில் ஆரியர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் தெற்கில் இருப்பவர்களை கரிய நிறம் கொண்ட அழகற்ற அசுர இனத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கதைகளில் ஆரியர்களை உயர்வாகவும் ஒழுக்கமானவர்களாகவும் காட்டி அசுரர்களை கெட்டவர்களாக, ஏமாற்றுபவர்களாக காட்டப்படுவது வாசிக்கும் போது எரிச்சலை தருவதை தடுக்கமுடியவில்லை.இவ்விரு இனங்களுக்கிடையிலான போரையே தேவாசுர யுத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும் அசுரர்களின் இடம் சொர்க்க பூமியாக இருந்தது என்பதையும் அசுரர்களிடையே இருந்த எழுத்துகள் பற்றிய அறிவு பல காலங்களுக்கு பின் தான் ஆரியரிடம் வந்தது பற்றியும் சொல்ல தவறவில்லை.

36 மொழிகள் தெரிந்திருந்த ராகுல்ஜி  150 புத்தகங்கள் படைத்தவர்.

ஒற்றன்

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் அவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாத‌மி விருது பெற்றவர். எளிமையோடு நகைச்சுவைத்தன்மை கொண்டவை இவரது எழுத்துக்கள்.  ஆங்கில இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்தவர். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். கரைந்த நிழல்கள், தண்ணீர், மானசரோவர், பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத்தாமரை , ஒற்றன் என்பன இவரது முக்கிய நாவல்களாகும். சினிமாவின் உண்மைத்தன்மையை சொல்லும்  அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்' என்ற சிறுகதையை எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் சிறந்த படைப்பாக சொல்வதுண்டு.

இவரது 'ஒற்றன்' என்ற பயண நூலை அண்மையில் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது.1973 இல் அயோவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்கு பல்வேறு நாடுகளிலும் இருந்து முக்கிய எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட‌
அசோகமித்திரன் அதில் கலந்துகொண்டு அங்கு தனக்கு ஏற்பட்ட  அனுபவங்களை ' ஒற்றன்' ஆக தந்துள்ளார்.



பாட்டு பாடுமாறு அவரை  கேட்ட போது  அவர்  தமிழ் எழுத்துக்களை  இராகம் போட்டு பாடி பாராட்டு வாங்கிய‌தை கூறி  சிரிப்பை வர வைக்கிறார்.நல்ல சைவ உணவு இல்லாமல் அவதிப்பட்டது,  பனிக்கட்டியில் காலை வைத்து சறுக்கி விழுந்த‌து, கே‍ மார்ட்டில் சப்பாத்து  வாங்கியது, எதியோப்பியாவில் இருந்து கலந்து கொண்ட அபே குபேக்னா, பெரு நாட்டின் பிராவோ போன்ரவர்களுடனான தன் அனுபவங்கள், யப்பானிய பெண்  கஜூகோவின் கவிதை என்று பல விடயங்களை நகைச்சுவையுடன்  கூறுகிறார். கவிதைத்தொகுப்பு நூல் ஒன்றிற்கு அவர் மொழிபெயர்த்து கொடுத்த அம்மாவின் பொய்கள் என்ற ஞானக்கூத்தனின் கவிதையை விக்டோரியா ஹார்ட்மன் தனது நாடகத்தில் சிறப்பாக பயன்படுத்தியது குறித்து கூறியுள்ளார்.

இன்று போன்ற தொலைத்தொடர்பு வசதிகளோ, பிரயாண வசதிகளோ அற்ற 70 களில் ஒரு எழுத்தாளர் எப்படி அமெரிக்காவை தெரிந்து கொண்டார் என்பதற்கு ஒற்றன் ஒரு சிறந்த ஆவணம்.

Saturday 11 August 2012

சாருலதா

சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் அவருக்கு மிகவும் பிடித்தது  சாருலதா. ஒரு பெண்ணிற்கும்  அவளின் கணவரின் தம்பிக்கும் இடையிலான ஈர்ப்பை ஆபாசம் இல்லாது சொன்ன படம் தான் சாருலதா.

 தாகூரின் பாடலை பாடியபடி சாருலதா  ஊஞ்சல்
ஆடும் காட்சி பலராலும் இன்றளவும் சிலாகிக்கப்படும் காட்சிகளில் ஒன்று.இப்படி நிறைய உண்டு.  பைனாகுலர் மூலம் பார்க்கும்காட்சி, thank you, thank you என்று பாடும் காட்சி. திரைப்படம் முடிவுறும் காட்சி ...... இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

Not to have seen the cinema of Ray means existing  in the world without seeing the sun or the moon.
-  Akira Kurosawa

இது உண்மைதான். என் 29 வயதிலாவது இத் திரைப்படங்களை பார்க்க வைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி தான் கூற வேண்டும்.


Friday 10 August 2012

அபராஜிதோ & அபுர் சன்ஸார்



 அபராஜிதோ

பதேர் பாஞ்சாலி தந்த இனிய அனுபவத்தால் அடுத்ததாக பார்த்தது அபராஜிதோ.இது The apu trilogy இன் இரண்டாம் பாகம். துர்காவின் மரணத்தின் பின் காசி வந்து தங்குகிறார்கள் அப்பு குடும்பத்தினர்.அதன் பின் நிகழும் அப்பு தந்தையின் மரணம், அப்புவின் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவது தான் அபராஜிதோ.

அபுர் சன்ஸார்

 அபுர் சன்ஸார் The apu trilogy யின் கடைசி பகுதி . அபுவின் திருமணம், மனைவியின் மரணம் , குழந்தை பற்றியது. சர்மிளா தாகூர் தான் மனைவியாக நடித்திருப்பார். குறிப்பாக சர்மிளா தாகூர் வரும் பகுதி நன்றாக இருக்கும்.
The apu trilogy எவ்வளவு பிடித்திருக்கு என்பதை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை.The apu trilogy தான் black and white திரைப்படத்தை இவ்வளவு ரசித்துப்பார்க்கலாம் என சொன்னது. குறிப்பாக  பதேர் பாஞ்சாலி. ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே மனதில் இருக்கிறது. அடுத்து சாருலதா பார்க்க தயாராகி விட்டேன்.

Sunday 5 August 2012

புத்தகங்கள்

வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் -3
 
1.  ரெயினீஸ் ஐயர் தெரு  - வண்ணநிலவன் 
 ஆறு வீடுகளைக் கொண்ட சிறிய வீதியை வைத்து எழுதப்பட்ட நாவல்

2.  சொல்லில் அடங்காத இசை - ஷாஜி
   இசை , இசைக்கலைஞர்கள் குறித்த கட்டுரைகள். 

3. கண் பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்
    நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள் மனதுக்கு மிக நெருக்கமாக தோன்றும். தனது சில  பாடல்கள் உருவான கதையை த்தொகுப்பில் பதிவு செய்துள்ளார். ரொம்ப நன்றாக இருக்கும்.

4.  சதுரகிரி யாத்திரை - பி. சுவாமிநாதன்
    சதுரகிரி பற்றி தெரிந்து கொள்ள வாங்கி வாசித்தேன். பலர் தமது  அனுபவங்களை  கூறியுள்ளார்கள். கட்டாயம் ஒரு தடவை போக வேண்டும்.

5. ஆ - சுஜாதா
    குரல்கள் பற்றிய நாவல். சுஜாதா பாணியில் நன்றாக இருக்கும்.

6. பார்வை 360 - சுஜாதா
    சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்

7. மூங்கில் மூச்சு - சுகா
 தனது அனுபவங்களை சுவாரகசியமாக சொல்லியிருப்பார். திருநெல்வேலி கதைகள், நண்பன் பற்றிய வசனங்கள் நன்றாக இருக்கும். சுகா 'படித்துறை' என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

8. மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்(பாகம் 1 ,2) - சுவாமி சுகபோதானந்தா

9. அக்பர் - க.வெங்கடேசன்
ஜோதாஅக்பர் படம் பார்த்த கையோட அக்பர், ஜோதா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் வாங்கியது.நிறைய விடயங்கள் இருந்தாலும் ஜோதா பற்றி ஒரு வசனம் மட்டும் தான் இருந்தது.

10. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
வரலாறை சுவையாக படிக்கலாம் என்று தெரிந்து கொண்ட புத்தகம். முகலாய அரசர்களை பற்றியது.


 

பதேர் பாஞ்சாலி



சத்யஜித் ரே இயக்கிய பெங்காலி மொழித் திரைப்படம். கிராமத்து ஏழைப் பெற்றார்களின் பிள்ளைகளான துர்கா , அ(ப்)பு,அவர்களுடன் வாழும் ஏழைக்கிழவியை சுற்றி நகரும் கதை.  கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று நகரத்துக்கு இடம் பெயரும் பின்னணி அழகாக சொல்லப்பட்டிருக்கும்.



பழம் திருடுவது, அதற்கு தாயிடம் பேச்சு வாங்குவது, திருடியதை பாட்டியிடம் கொடுப்பது,  தம்பிக்கு ரயில் காட்டுவது என படம் பார்த்து முடிந்தவுடன் மனம் முழுவதும் நிறைவது துர்கா தான்.

துர்காவிற்கு அடுத்ததாக என்னை பாதித்தது அந்த வயது முதிர்ந்த பாட்டி.
கடைசியில் யாரும் அற்ற இடத்தில்
 இறந்து இருக்கும் போது மனது
என்னமோ போல் ஆகிவிட்டது.

துர்காவுக்கும் தம்பி அபுவுக்கும் இடையிலான பாசமும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். கடைசியாக அபு  மணி மாலையை யாருக்கும் தெரியாது ஆற்றில் எறியும் காட்சி அழகாக எடுக்கப்படிருக்கும்.
     பதேர் பாஞ்சாலி பார்த்து முடிந்தவுடன் தீர்மானித்து விட்டேன் பதேர் பாஞ்சாலி
யின் தொடர்ச்சியான அபராஜிதோ, அபுர் சன்ஸார் இரண்டும் அடுத்ததாக பார்க்க வேண்டும் என. அத்துடன் எஸ்.ராவின் பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் புத்தகமும் வாசிக்க வேண்டும்.

Saturday 4 August 2012

The Way Home (Jibeuro)


கொரிய திரைப்படம் .நகரத்தில் இருந்து கிராமத்து பாட்டி வீட்டில்  சிறிது நாட்கள் தங்கும் சிறுவன், அவனது கிராமத்து ஊமைப் பாட்டி ஆகிய இரு பிரதான பாத்திரத்துடன் பயணிக்கும் கதை.
அப்பிடி ஒரு கவிதை போன்ற படம். பல நாட்களுக்கு பின் இப்படி ஒரு அழகான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.



Friday 3 August 2012

புத்தகங்கள்

வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் - 2

1.  கோடுகள் இல்லாத வரைபடம்- எஸ்.ராமகிருஷ்ணன்  
   
    பெயரே ஒரு வித கவர்ச்சியை தர எஸ்.ரா வின் புத்தகம் என்பதால் சந்தேகம் இல்லாமல் வாங்கினேன்.பண்டைய இந்தியாவுக்கு வந்த யாத்ரீகர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.பாஹியான், வாஸ்கோட காமா,  மார்க்கோ போலோ,  இபின் பதூதா என பல பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 

2.  கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது-
அ.முத்துலிங்கம்

   இந்த புத்தகத்தில் அம்பை, அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ரா , சுஜாதா, அ.மு என இருபது  எழுத்தாளர்கள் தமக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

3.  தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - ரொபின் ஷர்மா
     
  இது   The Monk Who Sold His Ferrari  என் புத்தகத்தின் தமிழ் வடிவம்.சுயமுன்னேற்ற வகை புத்தகம். என்னடா இது வாழ்க்கை என்று எண்ணிய ஒரு பொழுதில் கடை சென்று வாங்கியது.

4. நிகழ்தல் - ஜெயமோகன்

அனுபவக் கட்டுரைகள். 

இப்பவெல்லாம் ஜெயமோகன் வலைப்பதிவு படிப்பது என் அன்றாடக் கடமைகளில் ஒன்று .

5. காண் என்றது இயற்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

இயற்கையை புத்தகத்தினூடாக அறியலாம், அனுபவிக்கலாம். இயற்கையும் இந்த புத்தகமும் நிறைய கற்று தருகின்றன.எஸ்.ராவின் தேசாந்திரி படிக்க வேண்டும் என்று தேடாத கடை இல்லை.


6. பனிமலை - எண்டமூரி வீரேந்திரநாத்

மூன்று பெண்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்கள் அதை அவர்கள் எதிர் கொண்ட விதம் என நாவல் செல்கிறது.இவரது புத்தகங்கள் அநேகமானவை எனக்கு பிடித்தவை.


7. என் இனிய இயந்திரா - சுஜாதா

2021 இல் நடப்பது போன்ற கற்பனைக் கதை. இதை தான் எந்திரனாக எடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எந்திரனுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கண்டுபிடிக்க முடியாது. என் இனிய இயந்திரா வின் அடுத்த பாகம் மீண்டும் ஜீனோ.இரண்டுமே நன்றாக இருக்கும். எல்லோரும் ஜீனோவின் விசிறியாவது உறுதி.


8. மர்மங்ளின் பரம பிதா - மருதன்

சுபாஷ் சந்திர போஸ் பற்றி அறியும் ஆவலில் வாங்கினேன். வாசித்த பின் நேதாஜியை ரொம்ப பிடித்து விட்டது. மேலும் அறிய அவரைப் பற்றிய வேறு புத்தகங்களும் வாங்கி வாசித்தேன். 


9. கிராமங்களில் உலவும் கால்கள் - கழனியூரான்

நாட்டாரியல் புத்தகங்களில் உள்ள ஆர்வம் காரணமாக வாங்கியது.பழமை , பண்பாடு பற்றி வாசிக்க நன்றாகவே உள்ளது.


10.  பூமியின் பாதி வயது -  அ.முத்துலிங்கம்

புத்தகம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு super. பார்த்தவை, படித்தவை, கேட்டவை, அனுபவித்தவை, சிந்தித்தவை,கட்டியவை, மொழிபெயர்த்தவை, இழந்தவை போன்ற‌ தலைப்புகளில்.