Thursday 2 September 2010

பார்த்திபன் கனவு

புத்தகம் : பார்த்திபன் கனவு
ஆசிரியர் : கல்கி
கல்கியின் முதலாவது வரலாற்றுப் புதினம் 'பார்த்திபன் கனவு' (1941 ). தமிழ் வரலாற்று புதின ஆசிரியர்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் கல்கி. ஒப்பீட்டள‌வில் இவர் எழுதிய வரலாற்று புதினங்கள் எண்ணிக்கையில் சிறிது எனினும் தரத்தில் சிறந்தவை. பொன்னியின் செல்வனுக்கு நிகராக தமிழில் வேறு நாவல்கள் இல்லை எனலாம். கல்கியின் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக பார்த்திபன் கனவு தான் சிறந்தது என சொல்வேன். சிவகாமியின் சபதம் இதற்கு பிறகு தான்.

ஒரு காலத்தில் கரிகால் சோழன், கிள்ளிவளவன், என புகழ் பூத்திருந்த சோழ ராட்சியம் பிற்காலத்தில் பல்லவர் ஆட்சி ஓங்க சிற்றரசாகிறது. மீண்டும் விஜயாலய சோழன் காலத்தில் ஓரளவு எழுச்சி பெற்றாலும் இடைப்பட்ட காலத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இந் நாவல் நரசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் சிற்றரசனாக கப்பம் கட்டி அரசாண்ட பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவைப்பற்றியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நுணுக்கமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது. இமயம் சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் சோழன் போன்ற புகழ் பூத்த சோழர்கள் பயன் படுத்திய வாளை கப்பம் கட்டி ஆட்சி செய்யும் சிற்றரசனான தான் பயன்படுத்த கூடாதென பத்திரப்படுத்தி வைத்தது மட்டுமல்லாது சோழர்கள் மீண்டும் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறான். தனது ஆசைகளை சித்திரமாகவும் தீட்டி வைக்கிறான். இவனது மனைவி சேர வம்சத்து அருள்மொழி தேவி. இவர்களது மகன் விக்ரமன்.

வாதாபிப்போரில் பல்லவர்களுடன் இணைந்து போரிட சம்மதித்தும் அதற்கு பதிலாக சோழர்களை கப்பம் செலுத்தாத சுதந்திர அரசாக்க வேண்டும் என கோரி நரசிம்ம பல்லவனுக்கு ஓலை அனுப்புகிறான். ஆனால் நரசிம்மபல்லவன் பதிலே அனுப்பவில்லை. இதனால் அவன் போரில் கலந்து கொள்ளாததுடன் கப்பம் செலுத்தவும் மறுக்கிறான். வாதாபியை வென்ற பல்லவப் பெரும் படையுடன் தோல்வி ஏற்படும் என தெரிந்தே சிறு படையுடன் சென்று மோதி வீர மரணம் அடைகிறான். (தென் நாட்டு சிற்றரசர்கள் சிலர் பல்லவர்களை வெறுத்ததால் அவர்கள் வாதாபிப்போரில் புலிகேசி சார்பாக போரிட்டார்கள் என்றும் பார்த்திபன் வட நாட்டவருடன் இணைய விருப்பமில்லாததால் போரில் கலந்துகொள்ளவில்லை எனவும் சிவகாமியின் சபதத்தில் வாதாபிப்போர் பற்றி குறிப்பிடும் போது பார்த்திப சோழன் பற்றிய குறிப்பு வருகிறது.)பல்லவர்கள் தமது எருது கொடியை வாதபி வெற்றியின் பின்னர் சிங்கமாக மாற்றி விட்டார்கள்.பல்லவர்களது கொடியின் சின்னம் எது என்பதில் எனக்கு குழப்பம் நாவல் வாசித்த போது தான் தீர்ந்தது.

இன் நாவலை வாசிப்பவர்களுக்கு பார்த்திபன் மீது பெரு மதிப்பு வரும் என்பது நிச்சயம். புலிக்கொடிக்கு அவமானம் நேரலாகாது என்பதற்காக தோல்வி நிச்சயம் என்று தெரிந்து போரிடுகிறான். சுதந்திர வேட்கை மிக்கவனாக அவனது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந் நாவலின் முக்கிய பாத்திரங்களாக படகோட்டி பொன்னன், அவனது மனைவி
வள்ளியை சொல்லலாம். இவர்கள் பொன்னியின் செல்வன் பூங்குழலி, மந்தாகினிக்கு ஒப்பானவர்கள். சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி, நாகநந்தி எனப்படும் நீலகேசி போன்றவர்களையும் காண்லாம்.

தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நரபலி கொடுக்கும் கொடிய சமயக்கொள்கைகளை இல்லாது ஒளித்தமை, நீதி தவறாது ஆட்சி செய்தமை, மாறு வேடம் பூணும் திறமை என பேரரசர் நரசிம்மரின் பெருமைகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. சிவனடியாராக மாறுவேடம் பூண்டு விக்கிரம சோழனுக்கும் உதவுகிறார். விக்ரமனும் தந்தை போலவே சுதந்திர வேட்கை உடையவனாக இருக்கிறான். நரசிம்மரின் மகள் குந்தவியை காதல் மணம் புரிகிறான். சுதந்திர சோழ அரசை சிறப்பாக ஆட்சி செய்கிறான். எனினும் பார்த்திபனின் ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சூரியனுக்கு முன் மற்றய கிரகங்கள் ஒளி மங்கி விடுவது போல இவனது புகழ் பரவ நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழ் தடையாக இருந்தது. வழி வழியாக சோழ அரசர்கள் தமது புதல்வர்களுக்கு பார்த்திப சோழனின் கனவையும் வீர மரணத்தையும் சொல்லியே வளர்க்கிறார்கள். 300 வருடங்களின் பின் வந்த ராஜராஜர், ராஜேந்திரர் காலத்திலேயே பார்த்திப சோழன் கனவு முழுமையாக நிறைவேறுகிறது.


பார்த்திபன் கனவு: சிறந்த வரலாற்று நாவல்.

(VERY GOOD)

Wednesday 1 September 2010

வேங்கையின் மைந்தன்

புத்தகம் : வேங்கையின் மைந்தன்
ஆசிரியர்: அகிலன்
பொன்னியின் செல்வன் பாதிப்பால் அதில் வரும் வந்தியதேவன், குந்தவை போன்றவர்களை மீண்டும் காணும் ஆர்வத்தால் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாவல் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்'. இதன் ஆசிரியர் அகிலனுக்கு இந் நூலுக்காக சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. பொன்னியின் செல்வரின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தை பற்றி பேசுகிறது இந்நாவல். ராஜராஜசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் (பொன்னியின் செல்வனில் வானதி)பிறந்தவரே ராஜேந்திரன். ராஜேந்திர சோழன் 50 வயதளவிலேயே முடி சூடிக்கொண்டதால் அவரது முதுமைக்காலத்தை பற்றியே நாவல் பேசினாலும் அக் காலத்திலேயே ஈழம் சென்று மணிமுடி கைப்பற்றியமை , கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தமை போன்ற அவரது சாதனைகள் இடம்பெற்றமையால் வாசிக்க சுவையாக உள்ளது. இந் நாவலில் வந்தியதேவன் கிழவராக வருகிறார். ராஜேந்திரனுக்கு அரசியலில் ஆலோசனைகள் சொல்வதுடன் இளங்கோவுடன் ஈழம் சென்று மணிமகுடம் கைப்பற்ற உதவுகிறார்.


பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் போல வேங்கையின் மைந்தனில் இளங்கோ என்பவனே நாயகன். சோழப்பேரரசுக்காகவே தம் வாழ் நாட்களை அர்ப்பணித்த கொடும்பாளூர் வேளிர் குலத்தை சேர்ந்தவன். ராஜராஜசோழன் காலத்தில் ஈழப்போரில் மாண்ட பூதி விக்ரமகேசரி இவனது பெரிய பாட்டனார் ஆவார். ராஜேந்திரனுக்கு அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரு புதல்விகள். மூத்த புதல்வியான அருண்மொழி நங்கையையும் ரோகண இளவரசி ரோகினியையும் இளங்கோ திருமணம் செய்கிறான். அழகு, அறிவு, ஆற்றலில் சிறந்தவளான அருள்மொழியும் பேரழகியாக ரோகிணியும் என இரு நாயகிகள். பாண்டியர்கள் ஈழ மன்னரிடன் ஒப்படைத்த பாண்டிய மணிமுடியை கைப்பற்ற ராஜராகசோழன் காலத்திலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. ராஜேந்திரன் ஆட்சியில் இளங்கோ ஈழம் சென்று அம் முடியை கைப்பற்றுகிறான். ஈழ அரசனின் மகளான ரோகினியும் இளங்கோவும் காதலிக்கிறார்கள். ரோகிணி மூலமே மணிமுடி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வருகிறது. எதிரி நாட்டு வீரனை காதலிக்கும் ரோகிணி, தந்தைக்கும் , தம்பி காசிபனுக்கும் , நாட்டுக்கும் துரோகம் செய்கிறோமோ என துடிப்பதும் இளங்கோ மீது கொண்ட காதலில் இருந்து விடுபட முடியால் தவிப்பதுமாக இருக்கிறாள். ரோகிணி, இளங்கோ காதலே நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பல இடங்களில் வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது.



ஈழ நாட்டவர்களது உதவி இல்லாது தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் மணிமுடியை கைப்பற்றி இருக்க முடியாது.அதற்கு எதிரி அரசனின் மகளே உதவினாள் என்பது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது. சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் திருமண தொடர்புகள் வைத்திருந்ததாக வரலாற்றிலுள்ளது. சோழருக்கும் ஈழ மன்னர்களுக்கும் பாண்டிய மணிமுடி தொடர்பான போர் நீண்டகாலம் இருந்து வந்த நிலையில், எதிரி நாட்டு வீரனை ஈழ இளவரசி காதலித்தாள் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் போலவே உள்ளது. பொன்னியின் செல்வனில் சோழ நாட்டுக்காகவே வாழும் குந்தவை மதிப்பு மிக்க பெண்ணாக போற்றப்படுகிறார். அவள் எடுக்கும் முடிவுகள் சோழ சாம்ராட்சியங்களுக்காகவே இருக்கிறது. வேங்கையின் மைந்தனில் கூட அருள்மொழி நங்கை தனது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தன்னிகரற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். அப்படி இருக்க ஈழ நாட்டு ரோகிணி மட்டும் காதலுக்காக நாட்டையும் தந்தை, தம்பியையும் இழக்க நினைக்கும் பெண்ணாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இலங்கை வரலாற்றைப்பொறுத்தவரை, அரச குடும்ப பெண்கள் பல சந்தர்ப்பங்களில் போரில் வெற்றி பெற துணையாக நின்றுள்ளனர். நியாயமற்ற வழியாக இருந்தாலும் கூட . துட்டகைமுனு , எல்லாளன் போரை உதாரணமாக கொள்ளலாம். அப்படியிருக்க மகிந்தரின் மகள் எவ்வாறு எதிரி வீரனை காதலித்து தனது தந்தையின் ஆட்சி வீழ காரணமாக இருந்திருப்பாள். உண்மையில் மணி முடி கைப்பற்ற துணை புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்.

ஈழ அரசன் மகிந்தனின் அமைச்சர் கீர்த்தி பற்றி குறிப்பிட வேண்டும் .சிறந்த ராஜதந்திரியாகவும் தமிழர்களை வெறுப்பவராகவும் இருக்கிறார். அடுத்து சுந்தர பாண்டியன், பாண்டியர்கள் சோழ ராட்சியத்தை வீழ்த்த செய்யும் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திரன் இச்சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ராஜ ராஜனின் கனவாக இருந்த பாண்டிய மணிமுடி ராஜேந்திரனாலேயே நிறைவேறுகிறது.ராஜேந்திரர் காலத்தில் சோழ ராட்சிய விரிவாக்கம் அதிகம் இடம்பெறுகிறது. ஈழம் மட்டுமல்லாது கடாரம் வரை சென்று வெல்கிறான்.

இந் நாவல் சோழ ரட்சிய விரிவு, ஈழப்போர்,தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைமை மாறியமை போன்றவற்றை முதன்மையாக பேசுகிறது. பொன்னியின் செல்வன் வந்தியதேவன் போல் அல்லாது இளங்கோ தனியாக நின்று வீர சாகசங்கள் செய்கிறான். அதனால் யதார்த்தத்தன்மை குறைவான உணர்வை தருகிறது. இளங்கோ, ரோகிணி காதல் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. மற்றும்படி ராஜேந்திர சோழன் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நாவல்.


வேங்கையின் மைந்தன்: வரலாற்று ஆவலர்கள்வாசிக்க வேண்டிய நாவல்.

(GOOD)