Saturday 28 August 2010

துணையெழுத்து

புத்தகம்: துணையெழுத்து
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன்
இணையம் மூலமாகவே எஸ்.ராவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் கட்டுரைத்தொகுப்புகள்,சிறுகதைகள், நாவல்கள் என ஓரளவு அவரது எழுத்துக்களின் அறிமுகம் இருக்கிறது. நாவல்களில் உபபாண்டவம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. இதிகாசங்கள் மீதான புதிய பார்வை பெற காரணமாயிருந்தது. அவரது சிறுகதைகளை விட கட்டுரைகளே எனக்கு பிடித்தவை. இவரது எழுத்துக்கள் எளிமைமையும் ஆழமும் கொண்டவை.

விகடன் பிரசுரமாக வெளிவந்த துணையெழுத்து தமிழில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.பல்வேறு இடங்களில் கிடைத்த அனுபவங்களையும் , தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள், ஊர்கள், நகரங்கள் போன்றவைகளை பதிவு செய்துள்ளார். எந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் கவனிக்க தவறிய விடயங்கள் பலவற்றை எவ்வளவு ஆழமாக அவதானித்திருக்கிறார் என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் எம் மீது ஒரு வித‌ குற்ற உணர்வையும் வரவைக்கிறது. மனிதர்கள் தான் எவ்வளவு விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் அழுக்குகளை வெளி வேஷங்களால் நாம் மறைத்து வைத்து நல்லவர்களாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் எம்மையறியாமலே எமது உண்மையான முகங்கள்வெளிப்படுவது உண்டு. அடுத்தவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக்கொள்கிறோம். தேவையான போது அரவணைத்துக்கொள்கிறோம். தேவை முடிந்த பின் தூக்கி வீசி விடுகிறோம். இக்கட்டுரைகளில் அறிமுகமாகும் கதாபாத்திரங்களினூடு எம்மையும் எம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

எதையுமே ஆழமாக நோக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையில் அழகான சிறு விடயங்கள் பலவற்றை கூட எனது அவசரமான வாழ்க்கையில் அனுபவிக்க தவறிவிட்டிருக்கிறேன். அழகான பொழுதுகள் கூட நினைவில் இருப்பதில்லை.ஒவ்வொரு நாட்களும் ஒரே மாதிரியே இருப்பதாகவே தோன்றும். ஒவ்வொரு பொழுதையும் அழகாக்கிக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அவற்றை விட்டு ஒரு சலிப்பான வாழ்க்கையையே வாழப்பழகிக்கொண்டு இருக்கிறோம். நிசப்தமான இரவு கூட எவ்வளவு அற்புதமானது, ரசிப்பதற்கு பல வண்ணங்களை தன்னுள் கொண்டுள்ளது . ஆனால் நாமோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியரின் அனுபவங்களினூடு நாம் இழந்து விட்ட , ரசிக்க தவறிய பொழுதுகளை மீட்டிப் பார்க்கக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சையை தருகிறது. வாழ்க்கையை சுவாரகசியமாக அனுபவித்து வாழ வேண்டும் , அதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் புத்தகங்களில் ஒன்று. புத்தகம் சிறந்த நண்பன், வழிகாட்டி என்பதை துணையெழுத்து படித்தவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.



துணையெழுத்து: எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
(VERY GOOD)

No comments:

Post a Comment